திருமலை ஏழுமலையான் பகுதி-19  ஏழுமலையான் பகுதி-20 புராணம் பகுதிகள் பதிவு செய்துள்ளோம். ஏழுமலை இருக்க நமக்கென்ன மனக்கவலை? ஏழேழு பிறவிக்கும் எதற்கும் பயமில்லை! பகுதி 21 ... 22.. திருமலை ஏழுமலையான் திருவருளால் வளரும் என்று திறமை ஏழுமலையப்பன் திருவடிகளில் சரணாகதி அடைந்து பணிவுடன் வணங்கி தெரிவித்துக்கொள்கின்றோம்

திருப்பதி ஏழுமலையான் திருவடிகளே சரணம் ஓம் நமோ வெங்கடேசாய ஓம் நமோ நாராயணாய

ஏழுமலை இருக்க நமக்கென்ன மனக்கவலை? ஏழேழு பிறவிக்கும் எதற்கும் பயமில்லை!

பாடும் பாட்டெல்லாம் பரந்தாமனின் பாட்டு!

நாளும் நடப்பதெல்லாம் நாரணன் விளையாட்டு!

கால்வண்ணம்...அகலிகைக்கு வாழ்வு தந்தது!

கைவண்ணம்...திரெளபதையின் மானம் காத்தது!

மால்வண்ணம்...திருமகளின் மனம் கவர்ந்தது!

மணிவண்ணன்...கருணை நம்மை மகிழ வைத்தது

ஒரு பிடி அவல் கொடுத்தே, குசேலன் உறவு கொண்டான்!

ஓடத்தில் ஏற்றி வைத்தே, குகன் உடன் பிறப்பானான்!

தான் சுவைத்த பழங்களையே, தந்தனள் தாய் சபரி!

தருவதற்கு ஒன்றுமில்லை, தலைவனே எமை ஆதரி!

(ஏழுமலை இருக்க)

ஏழுமலை இருக்க நமக்கென்ன மனக்கவலை? ஏழேழு பிறவிக்கும் எதற்கும் பயமில்லை!

ஏழுமலையான் பகுதி-19

குபேரா! இப்போது நடப்பது கலியுகம். இந்த யுகம் பணத்தின் மீதுதான் சுழலும். எல்லாரும் பணம் பணம் என்றே அலைவார்கள். செல்வத்தைத் தேடியலையும் அவர்கள் பல பாவங்களைச் செய்வார்கள். பின்னர் மனதுக்குள் பயந்து பிராயச்சித்தத்திற்காக என்னை நாடி வருவார்கள். அவர்களிடம் இருக்கும் செல்வத்தை எனக்கு காணிக்கையாகக் கொட்டுவார்கள். அவ்வாறு சேரும் பணத்தை உனக்கு வட்டியாகக் கொடுத்து விடுவேன், என்றார். ஒருவழியாக, திருமணத்திற்கு வேண்டிய அளவு பணம் கிடைத்துவிட்டதால், சீனிவாசன் மகிழ்ச்சியடைந்தார். தன் சகோதரர் கோவிந்தராஜரிடம் அந்த தொகையை ஒப்படைத்து, அண்ணா! தாங்கள் தான் திருமணத்தை நடத்துவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும், என்றார்.திருப்பதிக்கு சென்று வந்தால் பணம் கொட்டுமாமே, வாழ்வில் திருப்பம் உண்டாகுமாமே என்ற பொதுப்படையான கருத்து இருக்கிறது. அதற்கு காரணமே, இந்தக் கோவிந்தராஜப் பெருமாள் தான். திருப்பதிக்குப் போனோமா! சீனிவாசனைத் தரிசனம் செய்தோமா! லட்டை வாங்கினாமோ!  ஊர் திரும்பினோமா என்று தான் பலரும் சென்று வந்து கொண்டிருக் கிறார்கள். சீனிவாசனின் அண்ணனான கோவிந்தராஜப் பெருமாளுக்கு கீழ் திருப்பதியில் பிரம்மாண்டமான கோயில் ஒன்று உள்ளது. இந்தக் கோயிலைப் பற்றி பலருக்கும் தெரியாது. தற்போது தான் இந்தக் கோயிலைப் பற்றிய விழிப்புணர்வு எழுந்து பக்தர்கள் சென்று வரத் தொடங்கியிருக்கின்றனர். திருப்பதியில் தினமும் 50 ஆயிரம் சுவாமி தரிசனம் செய்கிறார்கள் என்றால், இங்கு வருவோர் எண்ணிக்கை ஐயாயிரத்துக்குள் தான் இருக்கிறது. விபரமறிந்தவர்களே வந்து செல்கிறார்கள். ஏழுமலையான் தொடரைப் படிக்கும் வாசகர்கள், திருப்பதியில் தரிசனம் செய்வது எப்படி என்ற விபரத்தையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். திருப்பதிக்கு செல்லும் முன்பாக உங்கள் குலதெய்வத்தின் கோயிலுக்கு சென்று வர வேண்டும்.

முடியாதவர்கள் குலதெய்வத்தை மனதார நினைத்து வீட்டில் சிறிய பூஜை நடத்த வேண்டும். திருப்பதிக்குச் சென்றதும், முதலில் திருச்சானூர் (அலமேலுமங்காபுரம்) சென்று அங்கு பத்மாவதி தாயாரை வணங்க வேண்டும். அதன்பிறகு திருமலை சென்று சுவாமி புஷ்கரணி எனப்படும் தெப்பக்குளத்தின் கரையிலுள்ள ஸ்ரீவராகசுவாமியை வணங்க வேண்டும். பிறகு தான் ஏழுமலையான் சன்னதிக்கு செல்ல வேண்டும். ஏழுமலையானை வணங்கிய பிறகு, கோயில் எதிரேயுள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று அவரை வணங்கியபின், மலை உச்சியில் உள்ள ஆகாசகங்கை தீர்த்தம், சக்ர தீர்த்தம், வேணுகோபால சுவாமி கோயில், பாபவிநாச தீர்த்தம் ஆகிய இடங்களுக்குச் சென்று தலையில் தீர்த்தம் தெளிக்க வேண்டும். பிறகு, கீழ் திருப்பதிக்கு வந்து கோவிந்தராஜர் கோயிலுக்குச் சென்று அவரைத் தரிசித்து விட்டு ஊர் திரும்ப வேண்டும். மீண்டும் குல தெய்வத்தை வணங்கி திருப்பதி பயணத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். மீண்டும் கதைக்கு திரும்புவோம். கோவிந்தராஜரின் கையில் தனரேகை ஓடுகிறது. நாம் எவ்வளவுக் கெவ்வளவு பாலாஜிக்கு உண்டியல் காணிக்கை இடுகிறோமோ, அதைப் போல் நான்கு மடங்கு பணம் கோவிந்தராஜரை வணங்கினால் கிடைக்கும் என்பது ஐதீகம். ஏழுமலையான் திருமணச்செலவுக் குரிய பணத்தை கஜானாவில் வைத்துக்கொண்ட கோவிந்தராஜர், தன் கையால் எடுத்துச் செலவழிக்க செலவழிக்க, அதைப் போல் நான்கு மடங்கு தொகை உயர்ந்து கொண்டே வந்தது. இதனால், தடபுடலாக திருமண ஏற்பாட்டைச் செய்தார் கோவிந்தராஜர். தேவலோக சிற்பியான மயனை வரவழைத்து பந்தல் போட்டார். மாவிலை முதல் நவரத்தினங்கள் வரையான தோரணங்கள் தொங்க விடப்பட்டன.

பெண் வீட்டாரும், திருமண வீட்டிற்கு வரும் தேவர்களும், விருந்தினர்களும் தங்குவதற்கு விடுதிகள் அமைத்தார். (திருப்பதியில் இப்போதும் விடுதிகள் அதிகமாக இருப்பது இதனால் தான் என்பர். அங்கே தினமும் உற்சவர் கல்யாண வெங்கடேச பெருமாளுக்கும், பத்மாவதி தாயாருக்கும் திருமண உற்சவம் நடக்கிறது. பத்மாவதி தாயார் கோயிலில் வெள்ளிக்கிழமைகளில் நடக்கும் திருமண உற்சவம் விசேஷம்) அடுத்து திருமணப்பத்திரிகை தயாரிக்கும் பணி நடந்தது. இந்த பத்திரிகை தயாரிப்பு பணியை தாயார் வகுளாதேவியிடம் சீனிவாசன் ஒப்படைத்து விட்டார். வகுளாதேவி தகுந்த முறையில் அதை வடிவமைத்தார். ஈரேழு பதினான்கு லோகங்களிலும் உள்ள தேவர்கள், ரிஷிகள், முக்கியஸ்தர்களுக்கெல்லாம் பத்திரிகை அனுப்ப முடிவாயிற்று. இத்தனை பேருக்கும் மின்னல் வேகத்தில் சென்று பத்திரிகை கொடுப்பதென்றால் நடக்கிற ஒன்றா? இதுபற்றி ஆலோசித்த வகுளாதேவியின் மனதில் சிக்கியவர் கருட பகவான். கருடனை அழைத்த அவள், கருடா! நீ வேகமாகச் சென்று இவ்வுலகிலுள்ள முக்கியஸ்தர் களுக்கு பத்திரிகை கொடுத்து வா, என்று அனுப்பி வைத்தாள். கருடனுக்கு பெருமாளின் சேவையில் முக்கியப் பங்கு உண்டு. ஆதிமூலமே என அலறினான் யானையாக இருந்த கஜேந்திரன் என்னும் கந்தர்வன். அவன் பெருமாள் பக்தன். இவனுக்கு எதிரி கூகு என்பவன். இவன் முதலையாக மாறி ஒரு ஆற்றில் கிடந்தான். ஒருமுறை, யானையின் காலை முதலை கவ்வ, பக்தனான கஜேந்திரன் தன்னைக் காக்கும்படி வேண்டி ஆதிமூலமாகிய பெருமாளை அழைத்து பிளிறினான். பெருமாளின் காதில் இது விழுந்ததோ இல்லையோ, கருடனை திரும்பிப் பார்த்தார். அவனுக்கு தெரியும். தன் மீது அவரை ஏற்றிக்கொண்டு கணநேரத்தில் அந்த நதிக்கரையை அடைந்து விட்டான். யானையைக் காப்பாற்றினார் பெருமாள். இதனால் தான் கோயில்களில் கருடசேவை நடத்துகிறோம். கருடசேவையைத் தரிசிப்பவர் களுக்கு உடனடி பலன் கிடைத்து விடும். திருப்பதியில் நடக்கும் புரட்டாசி பிரம்மோற்ஸவத்தின் ஐந்தாம் நாளில், ஏழுமலையான்  கருடவாகனத்தில் பவனி வருவது கண்கொள்ளாக்காட்சி. ஏராளமான பக்தர்கள் இதைப் பார்க்க கூடுகிறார்கள். மூலவரே அன்று பவனி வருவதாக ஐதீகம். கருடன் திருமண பத்திரிகைகளுடன் பல உலகங்களுக்கும் பறந்தான்.

ஏழுமலையான் பகுதி-20

திருமணப் பத்திரிகையை முதலில் பிரம்மா-சரஸ்வதிக்கு வழங்கிய கருடாழ்வார், பின்னர் சிவ பார்வதி, இந்திரன்- சசிகலா, நாரத முனிவர், தேவகுரு பிரகஸ்பதி, அஷ்டதிக் பாலகர்கள் (திசைக்காவலர்கள்) அத்திரி- அனுசூயா, பரத்வாஜ முனிவர், கவுதமர்- அகலிகை, ஜமதக்னி முனிவர், விஸ்வாமித்திரர், வசிஷ்டர், புராணக்கதைகளை தேவர்களுக்கு எடுத்துச் சொல்லும் சூதர், சவுனகர், கருட லோகத்தினர், கந்தவர்கள், கின்னரர்கள், நாட்டியத் தாரகைகளான ரம்பா, ஊர்வசி, மேனகை, திலோத்துமா மற்றும் கற்புக்கரசி சாவித்திரி, அருந்ததி ஆகியோருக்கும் வழங்கினார். இதையடுத்து அவர், கந்த லோகம் சென்று வள்ளி தெய்வானை சமேதராக செந்திலாண்டவனும் எழுந்தருள வேண்டும் என பத்திரிகை கொடுத்து  கேட்டுக்கொண்டார். மாமன் கல்யாணத்துக்கு மருமகனும் எழுந்தருளத் தயாரானார். பின்னர் ஆனந்தலோகம் சென்று விநாயகருக்கும் பத்திரிகை வைக்கப்பட்டது. பத்திரிகை பெற்றுக்கொண்ட அனைவருமே திருமணத்துக்கு கிளம்பினர். அவர்கள்  அனைவரும் ஒருவர் பின் ஒருவராக சேஷாசலம் வந்து சேர்ந்தனர். அக்னி பகவான் தான் திருமணத்திற்கு தலைமை வரவேற்பாளராக நியமிக்கப் பட்டிருந்தார். அவர் விருந்தினர் களை வரவேற்று லட்டு, வடை மற்றும் பால் அன்னம், நெய் அன்னம், தயிர் சாதம், தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம் ஆகிய பஞ்ச அன்னங்களைப் பரிமாறினார். அனைவரும் அந்த சாப்பாட்டை ருசித்து மகிழ்ந்தனர். வாயுபகவான் வந்தவர்களுக் கெல்லாம் சுகந்த மணம் பரப்பும் காற்றை வீசினார். கந்தர்வர்கள் தேவர்களுக்கு சாமரம் வீசி பணிவிடை செய்தனர். பார்வதிதேவி, அனுசூயா, சுமதி ஆகியோர் தங்கள் பங்கிற்கு  அழகழகான கோலமிட்டனர். இதையடுத்து, மணமகன் சீனிவாசன் பட்டு பீதாம்பரம் தரித்து, நவரத்தின கிரீடம், தங்க, வைர மாலைகள் அணிந்து, ஒரு சுபவேளையில் அவர்கள் முன் அழகே வடிவாய் தோன்றினர். எல்லார் கண்ணும் பட்டுவிடுமோ என்று வகுளாதேவிக்கு பயம்.

ஆம்...ஒருமுறை, கருடன்மீது லட்சுமிபிராட்டியுடன் அமர்ந்து பறந்து வந்த பெருமாளைப் பார்த்தார். ஆஹா.. இவன் இவ்வளவு பேரழகனா? என் கண்ணே பட்டு விடும் போல் இருக்கிறதே! ஊரார் பார்வை இவன் மீது பட்டால்  என்னாகுமோ என்று பயந்தார். அந்த பயத்தில் இறைவனுக்கே திருஷ்டி கழித்து, நீ பல்லாண்டு வாழ வேண்டும், என்று வாழ்த்துப்பா பாடினார். பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன் சேவடி செவ்வித்திருக்காப்பு, என்றார். பெருமாள் மீது அந்த அளவுக்கு ஆழ்வார் அளப்பரிய அன்பு கொண்டிருந்தார். அந்த  பெருமாள் தானே இப்போது சீனிவாசனாக அவதாரம் எடுத்து வந்திருக்கிறார். அவருக்கும் திருஷ்டி பட்டு விடாதா என்ன! தேவ பெண்கள் அவருக்கு திருஷ்டி பொட்டு வைத்த பிறகு தான், முந்தைய யுகத்தில் யசோதையாக இருந்து கண்ணனை வளர்த்த வகுளாதேவியின் மனதில் நிம்மதி பிறந்தது. மணமகள் வீடு நாராயணவனத்தில் இருக்கிறது. சேஷாசலத்தில் இருந்து அங்கு மணமகன் ஊர்வலம். எல்லா தெய்வங்களும், தேவர்களும் புடைசூழ, ஒளிவீசும் ரத்தினக்கற்களுக்கு மத்தியில் பதிக்கப்பட்ட பச்சைக்கல் போல சீனிவாசன் தேரில் ஏற பவனி புறப்பட்டது. மற்ற தேவர்கள் அவரவர் தேர்களில் பயணித்தனர். நாராயணவனத்தின் அருகில் தான் சுகயோகியின் ஆஸ்ரமம் இருந்தது. அவர் தானே இந்த திருமணம் நிகழ்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர். அவரை சீனிவாசனும், மற்ற தெய்வங்களும், தேவர்களும் நேரில் சென்று பார்த்து, அவரையும் அழைத்துச் செல்வதென ஏற்கனவே முடிவு செய்திருந்தனர். மணவிழா ஊர்வலம் சுக யோகியின் ஆஸ்ரமத்திற்குள் நுழைந்தது. சுகயோகி, வாசலுக்கே வந்து அனைவரையும் வரவேற்றார்.சீனிவாசா! என்ன பாக்கியம் செய்தேனோ? உன் திருமணத்தின் பொருட்டு வந்து உள்ள எல்லா தெய்வங்களின் தரிசனமும் கிடைக்கப் பெற்றேன். இனி எனக்கு பிறவி இல்லை, என்று அகம் மகிழ்ந்து பேசினார்.

சீனிவாசன் அவரிடம், சுவாமி! நாங்கள் தங்கள் ஆஸ்ரமத்தில் சற்றுநேரம் இளைப்பாறி விட்டு பின்னர் நாராயண வனத்துக்குப் புறப்படலாம் என உள்ளோம். தாங்கள் இவர்களுக்கு அன்னம் பரிமாறினால் நல்லது, என்றார். சுகயோகி சீனிவாசனிடம், நல்லது சீனிவாசா! இங்கே முப்பத்து முக்கோடி தேவர்களும் வந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் உணவளிக்க உன்னருளை வேண்டுகிறேன், என்றார். சீனிவாசன் சிரித்தபடியே அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்தார். அனைவரும் விருந்துண்டு மகிழ்ந்து அங்கிருந்து சுகயோகியுடன் புறப்பட்டனர். ஊர்வலம் மீண்டும் கிளம்பியது. இங்கே  இவ்வாறு நடந்து கொண்டிருக்க, நாராயணவனத்தில் ஆகாசராஜன் தன் ஒரே புத்திரியின் திருமணப்பணிகளை மிகுந்த ஆடம்பரத்துடன் செய்து கொண்டிருந்தான். மணமகன் சீக்கிரம் வந்து விடுவார், ஊர்வலம் சுகயோகியின் ஆஸ்ரமத்தை விட்டுக் கிளம்பிவிட்டது என்ற தகவல், ஒற்றர்கள் மூலம் அறிவிக்கப் பட்டது. ஆகாசராஜன் பரபரப்பானான். ஏற்கனவே, வரும் விருந்தினர்களைத் தங்க வைக்க விடுதிகள் கட்டி தயாராக வைத்திருந்தான். நகர எல்லைக்குள் நுழைந்ததும், அவன் மேளவாத்தியங்களுடன் சீனிவாசனை எதிர்கொண்டழைக்க புறப்பட்டான். இருதரப்பாரும் ஓரிடத்தில் சந்தித்தனர். ஆகாசராஜன் அனைத்து தெய்வங்களின் திருப்பாதங்களிலும் பணிந்து, தன் மகளின் திருமணம் இனிதே நடக்க அவர்களின் ஆசிர்வாதத்தை வேண்டினான். எல்லோரும் அவனும் அவன் புத்திரியும் பல்லாண்டு வாழ வாழ்த்தினர். பின்னர், சீனிவாசனை யானை மீதுள்ள அம்பாரியில் ஏறச்செய்து, அங்கிருந்து  மணமகன் ஊர்வலம் கிளம்பியது. அனைவரும் சம்பந்தி விடுதிகளில் தங்கினர்.

                                                                                              பகுதி 21 ...பகுதி 22 ... நாளை வளரும்

திருப்பதி ஏழுமலையான் திருவடிகளே சரணம் ஓம் நமோ வெங்கடேசாய ஓம் நமோ நாராயணாய