திருமலை ஏழுமலையான் பகுதி-21  மற்றும்  ஏழுமலையான் பகுதி-22  புராணம்  "பத்மாவதியை தங்க மாலைகளால் அலங்கரித்து, நவரத்தினக் கற்கள் இழைந்த ஒட்டியாணம் பூட்டி, தோள்வளை, கை வளைகள் பூட்டி மணமேடைக்கு அழைத்து வந்தனர்."எனும் அற்புத வரிகளோடு துவங்குகின்றது .  23...24 ...பகுதிகள் திருமலை ஸ்ரீனிவாசன் திருவருளால் வளரும் !திருப்பதி ஏழுமலையான் திருவடிகளே சரணம் ஓம் நமோ வெங்கடேசாய

ஓம் நமோ நாராயணாய

பல்லாண்டு பல்லாண்டு! பல்லாயிரத்தாண்டு!

பலகோடி நூறாயிரம்!!

மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்

சேவடி செவ்வி திருக்காப்பு!!

அடியோமோடும் நின்னோடும்

பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு!

வடிவாய் நின் வல மார்பினில்      

வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு!

ஏழுமலையான் பகுதி-21  

மறுநாள் முகூர்த்தம்... பத்மாவதியை தங்க மாலைகளால் அலங்கரித்து, நவரத்தினக் கற்கள் இழைந்த ஒட்டியாணம் பூட்டி, தோள்வளை, கை வளைகள் பூட்டி மணமேடைக்கு அழைத்து வந்தனர். ஆகாசராஜன் தம்பதியர் கண்ணீர் மல்க, தங்கள் செல்வப்புதல்வி அன்றுமுதல் இன்னொருவனுக்கு சொந்தமாவதை எண்ணி ஆனந்தக்கண்ணீர் வடித்தனர். பெற்றவர்களுக்கு பிள்ளைகளின் மணநேரம் தானே ஆனந்தத்தைக் கொடுக்கிறது. அந்த ஆனந்தம் ஊற்றெடுக்கும் போது, கண்கள் வழியாக ஆனந்தக்கண்ணீராக வெளிப்படுகிறது. அப்போது சீனிவாசன் கிரீடம் அணிந்து, பட்டு பீதாம்பரம், நகைகள் பூட்டி, மலர் மாலைகளுடன் கம்பீரமாக வந்தார். காதலிக்கும் நேரத்தில் ஏற்படும் சந்தோஷத்தை விட, காதலித்தவளை மணமுடிக்கும் போது ஏற்படும் சந்தோஷம் அளப்பரியது. ஒரு போரில் வெல்வது எளிது, தேர்வில் நூறு மதிப்பெண் பெறுவது எளிது, ஆனால், காதலில் வெல்வது என்பது அவ்வளவு எளிதல்ல! காதல் என்ற வலைக்குள் ஒருத்தி அல்லது ஒருவனை வீழ்த்துவதென்பதே பகீரத பிரயத்தனம்! அந்தக் காதலர்களின் மனம் ஒன்றுபட்ட பிறகு, பெற்றவர் என்ன, உற்றவர் என்ன, உடன் பிறந்தவர் என்ன, நண்பர்கள் என்ன... யார் வந்து பிரிக்க நினைத்தாலும் அதில் அவர்கள் தோல்வியையே தழுவுவார்கள். இந்நேரத்தில், எந்த மிரட்டலுக்கும் பயப்படாமல், அதே நேரம் மிரட்டும் நம்மவர்களின் உயிருக்கும் ஏதும் நிகழ்ந்து விடாமல்... இந்தக் காதலில் வெற்றி பெறுவதென்றால் சும்மாவா! அதிலும், பத்மாவதி தன்னைக் காதலிக்க வந்த சீனிவாசனை கல்லால் அடித்து விரட்டினாள். இருந்தாலும் விட்டாரா மனிதர்...விடாப்பிடியாக இருந்து அம்மாவிடம் சொல்லி, அரசன் வீட்டு பெண்ணையே வளைத்து வெற்றி பெற்ற கம்பீரம் அவர் முகத்தில் தெரிந்தது. பிரகஸ்பதி, பிரம்மா, வசிஷ்டர் ஆகியோர் ஹோமகுண்டத்தின் முன் அமர்ந்து மந்திரங்களை ஓதினர். நாதஸ்வரம், தவில், பேரிகை போன்ற மங்கள வாத்தியங்கள் முழங்கிக் கொண்டிருந்தன. இறைவனின் திருமணத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததை எண்ணி வந்திருந்த விருந்தினர்களுக்கெல்லாம் மனதில் பரவசம்.

வசிஷ்டர் சீனிவாசனை ரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட மணையில் (பலகை)  அமரச் சொன்னார். அவருக்கு கங்கணதாரணம் (கையில் காப்பு கட்டுதல்) செய்து வைத்தார். அந்நேரத்தில் மங்கள வாத்தியங்களின் ஒலி அதிகரித்தது. பத்மாவதியை சீனிவாசனின் அருகில் அமர்த்தி, திருமாங்கல்யத்தை எடுத்து சீனீவாசனின் கையில் கொடுத்தார். அவர் பத்மாவதியின் திருக்கழுத்தில் திருமாங்கல்யத்தைச் சூட, கோட்டு வாத்தியங்கள் ஆர்ப்பாட்டமாக ஒலித்தன. கெட்டிமேளம் கொட்டியது. கோடி மலர்கள் கொண்டு வந்தவர்களெல்லாம் வாழ்த்தினர். பலர் அட்சதை தூவினர். இறைவன் தான் மனிதனை ஆசிர்வதிப்பான். இறைவனுக்கு அடிமையாகி விட்டால், அந்த பக்தனின் ஆசியை இறைவன் ஏற்றுக்கொள்கிறான். இதைத் தவிர இந்த இடத்தில் வேறென்ன சொல்ல முடியும்? எல்லாரும் உணர்ச்சிப்பூர்வமாக கண்கொட்டாமல் இந்த காட்சியை ரசித்தனர். ஆகாசராஜனின் குடிமக்கள் அனைவருக்கும் கடவுளின் கல்யாணக் காட்சியைக் காணும் பாக்கியம் கிடைத்தது.பூலோகத்தில் எத்தனையோ புனிதத்தலங்கள் இருக்க, தங்கள் தலத்தைத் தேர்ந்தெடுத்து ஸ்ரீமன் நாராயணனும், லட்சுமிதேவியாரும் வந்திருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு பெருமை தானே! அந்த பெருமை அனைவர் முகத்திலும் பூரிய நெஞ்சு பூரித்துப் பொங்கியது. திருமணம் முடிந்ததும், சீனிவாசன் பத்மாவதியின் கையைப் பிடித்தபடி அக்னியை வலம் வந்தார். அருந்ததி அங்கேயே நின்றதால், அவளை அவர்கள் பார்த்தனர். அவள் மகிழ்வுடன் ஆசிர்வதித்தாள். அக்னி வலம் முடிந்ததும், மணமக்களுக்கு திருஷ்டி கழிக்க சரஸ்வதி, பார்வதிதேவி ஆகியோர் தங்கத் தட்டில் ஆரத்தி கரைசலை எடுத்து வந்தனர். அவர்களுக்கு மங்கள ஆரத்தி செய்தனர். அப்போது, கந்தர்வர்கள் ஆகாயத்தில் இருந்து புஷ்பமழை பொழிவித்தனர். வகுளமாலிகையும், வசிஷ்டரும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை.

இருக்கத் தானே செய்யும்! வசிஷ்டருக்கு ஸ்ரீமன் நாராயணன், ராமபிரானாக அவதரித்த போதும் அவருடைய திருமணத்தை நடத்தி வைக்கும் பாக்கியம் கிடைத்தது! சீனீவாசனாக அவதாரம் எடுத்த கலியுகத்திலும் அந்த பாக்கியம் கிடைத்தது. வகுளாதேவி, யசோதையாக கோகுலத்தில் வாழ்ந்தபோது, கண்ணபிரானின் குழந்தைப்பருவ லீலைகளை பார்க்கும் யோகம் பெற்றாளே அன்றி, திருமணத்தைப்  பார்க்கும் பாக்கியம் கிடைக்கவில்லை. அது இப்போது கிடைத்ததை எண்ணி அவள் சந்தோஷப்பட்டாள். அடுத்து மணமக்கள் தங்கள் பெற்றோரிடம் ஆசிபெறும் படலம் ஆரம்பமானது, அவர்கள் முதலில் வகுளாதேவியிடம் ஆசிபெற்றனர். பின்னர், மாமனார் ஆகாசராஜன், மாமியார் தரணீதேவியிடம் அவர்கள் ஆசிர்வாதம் பெற்றனர். பின்னர் வந்திருந்த அனைவருக்கும் மரியாதை செலுத்தினர். ஆகாசராஜன் தன் மருமகனுக்கு சீதனமாக வஜ்ரகிரீடம், மகரகுண்டலங்கள், ரத்தின மோதிரங்கள், பொன் அரைஞாண், பத்தாயிரம் குதிரைகள், பணியாட்கள் என கொடுத்தான். மருமகனுக்கே இவ்வளவென்றால் மகளுக்கு கொஞ்சமா! போட்ட நகைகள் போதாதென்று இரண்டாயிரம் கிராமங்களை சீதனமாக வழங்கினான். சீதனம் என்ற சொல்லை ஸ்ரீதனம் என்று தான் சொல்ல வேண்டும். ஸ்ரீ என்றால் லட்சுமி. தனம் என்றால் கடாட்சம். திருமணத்தின் போது இன்று வரை எல்லா மணமகன்களும், மணமகள்களும் லட்சுமி கடாட்சத்தை அடைகிறார்கள் என்பது நிஜம் தானே! திருமணத்துக்கு வந்தவர்களுக் கெல்லாம் இப்போது கூட வகைவகையாக தாம்பூலம்  கொடுக்கிறார்கள். ஆகாசராஜனை கேட்க வேண்டுமா! வந்திருந்தஅனைவருக்கும் தங்கத் தட்டில் தாம்பூலம் வைத்துக் கொடுத்தான். விருந்தோ தடபுடலாக இருந்தது. எதைச் சாப்பிடுவது, எதை விடுவது என்று சொல்ல முடியாத நிலை! அனைவரும் ஆகாசராஜனின் அன்புமழையில் நனைந்து திணறிப் போனார்கள் என்றால் மிகையில்லை.

ஏழுமலையான் பகுதி-22

திருமணம் நல்லவிதமாக நடந்தேறியதும், ஆகாசராஜன் சீனிவாசனிடம், அன்பிற்குரிய மருமகனே! நீர் காட்டுக்குள் வந்த போது, உமது காதலை அறியாத பத்மாவதி உம் மீது கல்லால் அடித்தாள். அதை மனதில் வைத்துக் கொண்டு அவளை ஏதும் செய்யாமல் பாதுகாக்க வேண்டும், என வேண்டிக்கொண்டான். பெண் பிள்ளைகள் மீது தாயை விட தந்தைக்கு பாசம் இருப்பது உலக இயற்கையாக இருக்கிறது! ஆகாசராஜனும், தன் மகள் பத்மாவதியை, சீனிவாசன் வஞ்சகம் வைத்து, ஏதேனும் செய்து விடுவாரோ என்று பயத்தில் இவ்வாறு வேண்டிக் கொண்டார். சீனீவாசன் மனதிற்குள் சிரித்துக் கொண்டார். பின்னர் மணமக்கள்  சேஷாசலத்திற்கு புறப்பட்டார்கள். தாய், தந்தையைப் பிரியும் பத்மாவதி கண் கலங்கினாள். ஆகாசராஜன் மகளிடம், பத்மாவதி! கலங்காதே! பெண்கள் பிறந்த வீட்டில் தொடர்ந்து வாழ முடியாதே! நீ அதிர்ஷ்டக்காரி. அதனால் தான் அந்த பரந்தா மனையே மணம் செய்யும் பாக்கியம் பெற்றுள்ளாய். கணவரின் மனம் கோணாமல் வாழ்வதே பெண்மைக்கு அழகு. அதுவே பிறந்த வீட்டிற்கு நீ பெற்றுத்தரும் புகழ். எங்களை மறந்து விடாதே, என்று அவளது கையைப் பிடித்து சொல்லும் போது, தன்னையறியாமல் அழுதுவிட்டான். தாய் தரணீதேவி, மகளைப் பிரியும் அந்த தருணத்தில் இன்ப வேதனையை அனுபவித்தாள். இவ்வளவுநாளும் மான் போல் வீட்டிற்குள் துள்ளி விளையாடிய பெண், இன்று தகுந்த ஒருவனுக்கு சொந்தமானது குறித்து மகிழ்ச்சி என்றாலும், இனி அவளை அடிக்கடி காண முடியாதே என்ற ஏக்கமே இந்த வேதனைக்கு காரணம். பெண்ணைப் பெற்ற எல்லோரும் அனுபவிப்பது இதைத்தானே! பரிவாரங்கள் புடைசூழ சீனிவாசன், தன் மனைவியுடன் கருடவாகனத்தில் ஏறி, சேஷாசலம் நோக்கி பயணமானார். வழியில், அகத்தியரின் ஆஸ்ரமம் இருந்தது. அங்கே சென்று, அவரிடம் ஆசிபெற்றுச் செல்ல சீனீவாசன் விரும்பினார்.

ஆஸ்ரமத்திற்குள் அவர்கள் சென்றார்கள். திருமாலின் அவதாரமான சீனிவாசனை அகத்தியர் வரவேற்றார். சீனிவாசா! கல்யாணவாசனாக என் இல்லத்திற்கு எழுந்தருளியிருக்கிறாய். உன்னை பத்மாவதியுடன் பார்க்கும் புண்ணியம் பெற்றேன், என்றவர், நீ சேஷா சலத்துக்கு இப்போதே புறப்படப் போகிறாயா? அது கூடாது. புதுமணத் தம்பதிகள் திருமணமானதில் இருந்து ஆறுமாதங்கள் மலையேறக்கூடாது என்பது நியதி. உன் சொந்த ஊரே மலையில் இருந்தாலும் சரிதான்! இதைக் கடைபிடித்தே தீர வேண்டும். ஆறுமாதங்கள் கழியும் வரை நீ என் ஆஸ்ரமத்திலேயே தங்கு. நீ என்னோடு தங்குவதில் நானும் மகிழ்வேன், என்றார். முனிவரின் கட்டளையை சீனிவாசனும் சிரமேல் ஏற்று, ஆஸ்ரமத்தில் தங்க சம்மதித்தார். புதுமணத்தம்பதிகள் இன்பமுடன் இருக்க தனியிடம் ஒதுக்கித்தந்தார் அகத்தியர். சீனிவாசன் தன் அன்பு மனைவியுடன் அங்கே ஆறுமாதங்கள் தங்கினார். திருப்பதியில் இருந்து 20 கி.மீ., சென்றால் சீனிவாசமங்காபுரம் என்ற கிராமம் வரும். அங்கே, திருப்பதி பெருமாளையும் மிஞ்சும் பேரழகுடன் வெங்கடாசலபதியைத் தரிசிக்கலாம். அகத்தியரின் ஆஸ்ரமம் அமைந்த இடம் இதுதான். சீனிவாசனும், பத்மாவதியும் தங்கியதால், அவ்விடத்தில் பிற்காலத்தில் கோயில் கட்டப்பட்டது. இப்போது, நாம் அங்கு சென்று பெருமாளை மிக சவுகரியமாக தரிசித்து வரலாம். விழாக்காலங்கள் தவிர மற்ற நேரங்களில் சுமாரான கூட்டமே இருக்கும். இப்படியாக, சீனிவாசன் அங்கு தங்கியிருந்த வேளையில், ஒருநாள் நாராயணபுரத்தில் இருந்து ஒரு சேவகன் வந்தான். அவன் மிகவும் பதைபதைப்புடன் காணப்பட்டான். சீனிவாசனை அணுகி, நாராயணா! தங்கள் மாமனார் ஆகாசராஜன் மிகவும் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாகி விட்டார். அரசியார் அருகில் இருந்து மிகுந்த கவலையுடன் பணிவிடை செய்து வருகிறார். தங்களையும், அவரது திருமகளையும் பார்க்க விரும்புகிறார். தாங்கள் உடனே புறப்பட்டு வர வேண்டும், என பிரார்த்தித்தான்.

அகத்தியருக்கும் இந்த விஷயம் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக மூவரும் நாராயணபுரம் புறப் பட்டனர். ஆகாசராஜன் கிட்டத்தட்ட மயக்கநிலையில் இருந்தார். அந்த நிலையிலும் மகளையும், மருமகனையும் வரவேற்று, சீனிவாசா, கோவிந்தா, மதுசூதனா, பத்மநாபா, நாராயணா என்று மருமகனைப் பிரார்த்தித்தார். ஐயனே! நீரே எனது மருமகனாக வாய்த்ததால் நான் சகல பாக்கியங்களையும் அடைந்தேன். தங்களை கடைசியாக ஒருமுறை பார்த் தாலே வைகுண்ட பிராப்தி கிடைத்து விடுமென நம்பினேன். அதனாலேயே, தங்களை வரச் செய்தேன், என்றார். பத்மாவதி, தந்தையையும், தாயையும் கட்டிக்கொண்டு அழுதாள். ஆகாசராஜன் அவளிடம்,  மகளே! உன் தம்பி வசுதானனையும்,  சித்தப்பா தொண்டைமானையும் கவனித்துக் கொள். அது மட்டுமல்ல, நீ பரந்தாமனுக்கு வாழ்க்கைப் பட்டதால் லோகமாதாவாக இருக்கிறாய். உன்னை நாடி வரும் மக்களின் குறை போக்குவது உனது கடமை. உன்னை மணம் முடித்து கொடுத்ததுடன், உலகத்திற்கு நான் வந்த கடனையும் முடித்துக் கொண்டேன். இனி எனக்கு ஜென்மம் வேண்டாம், என்று வேண்டியபடியே கண் மூடினார். தரணீதேவி அலறித் துடித்தாள்.ஆகாசராஜனுக்கு இறுதிச்சடங்கு நடந்தது. தரணீதேவி அவரோடு உடன்கட்டை ஏறினாள். தாயையும், தந்தையையும் இழந்த பத்மாவதி அடைந்த மனவேதனைக்கு அளவில்லை. கிரியைகள் யாவும் முடிந்த பிறகு, மீண்டும் அவர்கள் அகத்தியரின் ஆஸ்ரமத்திற்கு வந்து சேர்ந்தனர். இந்த சமயத்தில், நாராயணபுரத்தில் ஆகாசராஜனுக்கு பிறகு பொறுப்பேற்பது வசுதானனா, தொண்டைமானா என்பது குறித்து சண்டை ஏற்பட்டது. தந்தை ஆண்ட பூமி தனக்கே சொந்தம் என்று வசுதானன் கூற, பித்ரு ராஜ்யம் தம்பிக்கே உரியது என தொண்டைமான் சொன்னான். இருவரும் தங்களுக்கே ராஜ்யம் வேண்டுமெனக் கோரி சீனிவாசனின் மத்தியஸ்தத்தைக் (தீர்ப்பு) கேட்பதற்காக அகத்தியரின் ஆஸ்ரமத்திற்கு சென்றனர்.

                          23...24 ...பகுதிகள் திருமலை ஸ்ரீனிவாசன் திருவருளால் வளரும் !

திருப்பதி ஏழுமலையான் திருவடிகளே சரணம் ஓம் நமோ வெங்கடேசாய ஓம் நமோ நாராயணாய