திருமலை ஏழுமலையான் வரலாறு பகுதி 23 மற்றும் 24  பதிவு செய்துள்ளோம்.

திருப்பதி பெருமாளை வணங்குபவர்களின் பாவம் நீங்கும். இந்த சரிதத்தைப் படித்தவர்களின் இல்லங்களில் செல்வம் பெருகும். பகுதிகள் 25 மற்றும் 26 வளரும் ...ஏழுமலையான் திருவருள் என்றும் துணை நிற்கும்

திருப்பதி ஏழுமலையான் திருவடிகளே சரணம் ஓம் நமோ வெங்கடேசாய ஓம் நமோ நாராயணாய              

ஓம் நமோ நாராயணாய! கோவிந்தனே சரணம்!

தாயே தந்தை என்றும் தாரமே கிளை மக்கள் என்றும்

நோயே பட்டொழிந்தேன் உன்னைக் காண்பது ஓர் ஆசையினால்

வேயேய் பூம் பொழில் சூழ் விரையார் திருவேங்கடவா!

நாயேன் வந்து அடைந்தேன் நல்கி ஆள் என்னைக் கொண்டருளே.. 1.9.1

விளக்கம்:-

அம்மா அப்பா என்றும் பொண்டாட்டி சொந்தகாரங்க என்றும் (இவர்களின் மேலே பாசம் என்னும்) நோயே பட்டு ஒழிந்தேன்! (அப்பப்பா இவர்களை எல்லாம் நம்பி இவர்களிடம் உண்மையான அன்பு செலுத்தி பட்டது போதுமப்பா! போதும்!),மூங்கில் புதர்களும் பூக்கள் நிறைந்த மரங்களும் செடிகளும் சூழ்ந்துள்ள நல்ல மணம் வீசும் திருவேங்கடவா! (திருப்பதியில் வசிக்கும் என் கோவிந்தா! நீயே என்றும் நிலையான சொந்தம் என்று) உன்னை பார்க்கணும் என்றொரு ஆசையினால் நாயாகிய நான் வந்து (சரண்) அடைந்தேன்!

(ஆள்பவனே! யப்பா ஏழுமலையானே!) விரும்பி என்னை ஏற்று கொண்டு அருள் புரியணும்!

ஓம் நமோ நாராயணாய! கோவிந்தனே சரணம்!

ஏழுமலையான் பகுதி-23

தொண்டைமான் சீனிவாசனிடம், மருமகனே! நாராயணபுரம் எனக்கே சொந்தம் என நான் வாதிடுகிறேன். என் அண்ணன் மகனோ அவனுக்கே வேண்டும் என்கிறான். தந்தைக்குப் பிறகு மகனா? அண்ணனுக்குப் பிறகு தம்பியா? நீர் தான் முடிவு சொல்ல வேண்டும், என்றான். சீனிவாசன் அவனிடம், இரண்டுமே சரிதான்! எனவே, இதற்கு தீர்வு வீரம் தான். யாரொருவன் தைரியசாலியோ அவன் எந்த நாட்டையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வர தகுதிபெற்றவன் ஆகிறான் என்பது உலகத்தின் பொது நியதி. சிறிய மாமனாரே! நீங்கள் இருவரும் போரிடுங்கள். வெற்றி பெறுபவர் ராஜ்யமாளட்டும்,என்றார். இந்த யோசனையை வசுதானனும் ஏற்றான். சிறிய தந்தைக்கும், மகனுக்கும் நடக்கும் போரில் சீனிவாசன் யார் பக்கம் என்ற கேள்வி எழுந்தது. தொண்டைமானே இந்தப் பிரச்னையைக் கிளப்பினான். போர் நடக்கும் போது, பலரது ஆதரவைக் கேட்பது வாடிக்கையானது. சீனிவாசா! நான் உமது பரமபக்தன். உம் ஆதரவை எனக்குத் தர வேண்டும், என்றான். வசுதானனும், தன் மைத்துனரிடம் ஆதரவு வேண்டுமென விண்ணப்பித்தான். இருவருமே எனக்கு வேண்டியவர்கள். எனவே, இருவருக்குமே என் ஆதரவைத் தருகிறேன், என்று குழப்பினார் சீனிவாசன். மாயக்கண்ணன் அல்லவா அவன். சீனிவாசா! அதெப்படி இயலும்? யாராவது ஒருவருக்குத் தானே ஆதரவைத் தர முடியும்? நீர் இரண்டு பக்கமும் எப்படி நின்று போராடுவீர், என்று தொண்டைமான் கேட்கவும்,  நானும், என் சக்கராயுதமும் ஒன்றே என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா? எனக்கேட்டார் சீனிவாசன். ஆம் என்ற தொண்டை மானிடம், அப்படியானால், என்னை யாராவது ஒருவர் தன் பக்கம் சேர்த்துக் கொள்ளுங்கள். வெற்றியைத் தவிர வேறெதையும் அறியாத என் சக்ராயுதத்தை ஒருவர் பெற்றுக் கொள்ளுங்கள், என்றார் சீனிவாசன். அதையும் நீரே முடிவு செய்து விடும், என்று இருவரும் வேண்ட, நான் வசுதானன் பக்கம் இருக்கிறேன். சக்ராயுதம் தொண்டைமானுக்கு தரப்படும், என்றார் சீனிவாசன்.

இருவரும் அதை ஏற்றனர். சீனிவாசனின் பரமபக்தனான தொண்டைமானுக்கு, சீனிவாசனின் சக்கரத்தைச் சுமப்பதில் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டது. அது மட்டுமல்ல, சக்கரம் இருக்குமிடத்தில் வெற்றி உறுதி என்றும் அவன் நம்பினான். மாணவர்கள் கல்வியில் முதலிடம் பெற்றுத் தேற வேண்டுமானால் சக்கரத்தாழ்வாரை வழிபட வேண்டும். அவரை தினமும் ஆறுமுறை சுற்றி வந்து, சுதர்சனாய வித்மஹே ஜ்வாலா சக்ராய தீமஹி தந்நோ சக்ர ப்ரசோதயாத்!  என்ற ஸ்லோகத்தைச் சொல்லி வழிபடுபவர்கள் கல்வி வளம், வியாபாரத்தில் லாபம், தொழில் அபிவிருத்தி, பணியில் உயர்வு, கை விட்டுப்போன சொத்து கிடைத்தல், தைரியம், நம்பிக்கை ஆகியவற்றைப் பெறுவார்கள். சீனிவாசனின் சக்கரம் கையில் இருப்பதால் நாடு தனக்கே சொந்தம் என்ற நம்பிக்கை தொண்டைமானுக்கும் ஏற்பட்டது. இருவரும் நாராயணபுரம் திரும்பினர். போர் துவங்கியது. சீனிவாசனும், பத்மாவதியும் அகத்தியரின் அனுமதியுடன் நாராயணபுரம் சென்றனர். கடும் போரில், மைத்துனன் வசுதானனுக்கு ஆதரவாக சீனிவாசன் களத்தில் நின்றார். ஆனால், தொண்டைமானின் தீவிர பக்தியும், போரில் கொண்ட ஈடுபாடும் அவனது கையையே ஓங்க வைத்தது. தொண்டைமானின் மகனும் இந்தப் போரில் கலந்து கொண்டான். போரில் வெற்றிபெறும் வேகத்தில், சக்ராயுதத்தை வசுதானன் மீது ஏவினான். அதை சீனிவாசன் தடுத்து தன் மார்பில் தாங்கினார். அவர் மயங்கி விழுந்துவிட்டார். வசுதானன் பதை பதைத்தான். தகவலறிந்து பத்மாவதி ஓடி வந்தாள். கணவரின் மார்பில் தைத்திருந்த சக்கரத்தை எடுத்தாள். சீனிவாசனின் காயத்துக்கு மருந்து தடவினாள். சீனிவாசன் எழுந்தார். நாராயணனையே அடித்து விட்டோமே என தொண்டைமான் பதறினான். பத்மாவதி தன் கணவரிடம், ஸ்ரீமன் நாராயணா! இதென்ன விளையாட்டு! கையில் தவள வேண்டிய சக்கரத்தை மார்பில் தாங்கினீர்களே! இருவருக்கும் உங்களையே பிரித்து தந்த நீங்கள், இந்த சாதாரண மண்ணையும் இருவருக்கும் பிரித்து கொடுத்து விட வேண்டியது தானே! என்றாள்.

சீனிவாசன் எழுந்தார். தொண்டைமான் அவர் முன்னால் கண்ணீர் மல்க நின்றான். தொண்டைமானே கலங்க வேண்டாம். முற்பிறவியிலும் நீ எனது பக்தனாக இருந்தாய். அதனால், இப்பிறவியில் அரச குலத்தில் பிறக்க வைத்தேன். முற்பிறவியில் உன் பெயர் ரங்கதாசன். ஒரு பெண்ணை நீ விரும்பினாய். அது நிறைவேறவில்லை. இந்த ஜென்மத்தில் அவளே உனக்கு மனைவியாக வாய்த்தாள். சக்ராயுதம் உம்மிடம் சிறிது காலம் இருந்ததால் பெண்கள் மீதான மயக்கம் தீர்ந்து விடும். இனி, எனக்கு மட்டுமே தொண்டு செய்து என் பதம் அடைவாய். அதுவரை நாராயணபுரத்தை நீயும், வசுதானனும் இணைந்து ஆள்வீர்களாக! என வாழ்த்தினார். பின்னர், தொண்டைமானே! நீர் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும், என்றார் சீனிவாசன். ஐயனே! உங்களுக்கு உதவ யார் பூமியில் உண்டு? கட்டளையிடுங்கள். என் சிரமே பறிபோனாலும் தாங்கள் இட்ட கட்டளையை நிறைவேற்றுவேன், என்றார். தொண்டைமானே! நானும், பத்மாவதியும் அகத்தியர் ஆஸ்ரமத்தில் எங்கள் வாசத்தை முடிக்கும் காலம் நெருங்கி விட்டது. நாங்கள் சேஷாசலம் திரும்புவதற்குள் நீர் எனக்கு ஒரு கோயில் கட்ட வேண்டும். வராகசுவாமி எனக்கு கொடுத்த நிலம் அங்கிருக்கிறது. அங்கே கோயில் எழுப்பலாம். கலியுகம் முடியும் வரை நான் அங்கே தங்குவேன், என்றார். தொண்டைமான் அதை ஏற்றான். சீனிவாசனுக்கு கோயில் கட்டும் பணியை பறையறிந்து அறிவித்தான். தேவலோகச் சிற்பி விஸ்வகர்மாவை வரவழைத்தான். சேஷாசலத்தில் அழகிய கோயில் எழுப்பப் பட்டது. அதுவே, நாம் இன்று காணும் திருப்பதி மலைக் கோயில்.

ஏழுமலையான் பகுதி-24

இதற்குள் சீனிவாசனுக்கும், பத்மாவதிக்கும் திருமணமாகி ஆறு மாதங்கள் கடந்து விடவே அவர்கள் அகஸ்தியரின் ஆஸ்ரமத்தில் இருந்து (சீனிவாசமங்காபுரம்) கிளம்பினர். தொண்டைமானால் எழுப்பப் பட்ட இருப்பிடத்தில் அவர்கள் தங்கினர். அப்போது கலக முனிவரான நாரதர் வைகுண்டத்தில் லட்சுமியை சந்தித்தார். தன் தாயிடம் ஆசி பெற்றார். பின்னர், ஒரு கலகத்தை ஆரம்பித்து வைத்தார். லட்சுமி! நீ நன்றாக ஏமாந்துவிட்டாய். உன் கணவர் சீனிவாசன் பூலோகத்தில் பத்மாவதி என்ற பெண்ணை மணந்துகொண்டார். நீ உடனே பூலோகம் சென்று சேஷாசலத்தில் தங்கியுள்ள அவரை தட்டிக்கேள், என்று சொல்லிவிட்டு அகன்றுவிட்டார். லட்சுமிக்கு கடும் கோபம் ஏற்பட்டது. சீனிவாசனை சந்தித்து பிரச்னையை துவங்கிவிட்டாள். என்னை மணந்துவிட்டு, பத்மாவதியை இரண்டாம் தாரமாக ஏமாற்றி மணந்திருக்கிறீர்களே! இது எந்த வகையில் நியாயம்? என படபடவென பொரிந்தாள். சீனிவாசன் அவளைத் தேற்றினார். லட்சுமி! நீயே பத்மாவதியாக மானிடப் பிறவி எடுத்துள்ளாய். பழைய நினைவுகளை நீ மறந்துவிட்டாயா? அந்த கதையை சொல்கிறேன் கேள். ராமாவதார காலத்தில் நீ சீதையாக பிறந்தாய். நாம் கானகத்திற்கு செல்லவேண்டிய நிலைமை ஏற்பட்டது. அப்போது ராவணன் என்ற அசுரன் உன் மீது ஆசைகொண்டு உன்னைத் தூக்கிச்செல்ல முயன்றான். அப்போது அக்னிபகவான் உன்னைப்போலவே உருவம் கொண்ட மற்றொரு பெண்ணை படைத்தான். அவளை நீ தங்கியிருந்த குடிசையில் வைத்துவிட்டு, உன்னை காப்பாற்றி சென்றான். நீ வேதவதி என்ற பெயரில் அங்கு தங்கியிருந்தாய். உங்கள் உருவ ஒற்றுமையை பார்த்த ராவணன் உன்னை கடத்தி சென்றுவிட்டான். அவனிடமிருந்து நான் உன்னை மீட்டேன். அப்போது நீ என்னிடம் திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டாய். ராமாவதார காலத்தில் நான் ஏகபத்தினி விரதம் அனுஷ்டித்தேன்.

எனவே அப்போது உன்னை மணக்க முடியவில்லை. ஆனால் நான் உனக்கு ஒரு வாக்கு கொடுத்தேன். கலியுகத்தில் நான் சீனிவாசனாக சேஷாசலத்தில் அவதரிக்கும் போது, நீ பத்மாவதியாக பிறந்து என்னை அடைவாய் என்பதே அந்த உறுதிமொழி. அதன்படியே இப்போது நீ என்னை அடைந்தாய், என்று விளக்கமளித்தார். இதைக்கேட்ட லட்சுமி சாந்தமடைந்தாள். பத்மாவதியை மார்போடு அணைத்துக்கொண்டு நாம் இருவரும் இனி சீனிவாசனின் மார்பில் இடம்பிடிப்போம் எனக்கூறி அவரது மார்பில் ஐக்கியமாயினர். பத்மாவதி இடது மார்பிலும் லட்சுமி வலது மார்பிலும் அமர்ந்துகொண்டனர். சீனிவாசன் லட்சுமியிடம், நான் எனது திருமணத்திற்காக குபேரனிடம் கடன் வாங்கியுள்ளேன். இதற்குரிய வட்டியை மட்டும் கலியுகம் வரையில் செலுத்துவதாக உறுதிமொழி பத்திரம் கொடுத்திருக்கிறேன். அந்த வட்டியை எப்படி செலுத்துவது என்கிற வழிமுறையையும் நான் உனக்கு சொல்கிறேன். என்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு உன் அருள் கடாட்சம் படவேண்டும். பொதுவாகவே இங்கு வரும் அனைவருமே செல்வம் வேண்டியே வருவார்கள். அவர்களின் தகுதிக்கு ஏற்ப நீ செல்வத்தை கொடு. அந்த செல்வத்தை பெறும் பக்தர்கள் ஆணவம் காரணமாக தறிகெட்டு அலைவார்கள். ஏராளமான பாவ கர்மாக்களை செய்வார்கள். பெரும் ஆபத்துகளை சந்திப்பார்கள். அப்போது என்னை நினைப்பார்கள். நான் அவர்களது கனவில் தோன்றி, வட்டிக்காசு, தேவையில்லாமல் கையிலிருக்கும் பணம் ஆகியவற்றை எடைக்கு எடை சமர்ப்பித்தல், உண்டியலில் இடுதல் ஆகியவற்றின் மூலம் சேர்த்துவிடுமாறு கூறுவேன். நீ ஒரு ஏழைக்கு பணம் கொடுத்தால்கூட அதை அவன் தவறான வழியில் செலவிடுவான் என்றால் அவர்களிடம் முடி காணிக்கையாக பெற்றுவிடுவேன். அதில் சேரும் பணத்தை குபேரனுக்கு செலுத்திவிடுவேன்.

கலியுகம் முடியும் வரையே நமக்கு இங்கு வேலை. அதன்பிறகு அசலை அடைத்துவிட்டு நாம் வைகுண்டம் சென்றுவிடலாம். நீ இனிமேல் என் மார்பில் தங்குவதில் உனக்கு எந்த தடையும் இருக்காது. பிருகு முனிவரால் மிதிக்கப்பட்ட என் மார்பு இப்போது பவித்திரமாகிவிட்டது. ஆகையால் உன் இடத்தில் நீ தாராளமாக வசிக்கலாம், என கூறி ஆசீர்வதித்தார். பின்னர் பத்மாவதியிடம், நீயும் லட்சுமிதான். இங்கிருந்து சற்று தூரத்தில் பத்மசரோவர் என்ற ஏரி இருக்கிறது. அந்த ஏரிக்கரையில் நீ வசிப்பாயாக. அங்கு வரும் பக்தர்களுக்கு செல்வத்தை வாரி வழங்குவாயாக! உன்னை அலமேலு என்று மக்கள் அழைப்பார்கள். அலமேலு என்றால் வாரி வழங்குபவள் என பொருள். உன் இருப்பிடம் அலமேலுமங்காபுரம் என அழைக்கப்படும். இங்கே வரும் பக்தர்கள் முதலில் உன்னை தரிசித்த பிறகே என்னை தரிசிக்க வரவேண்டும் என ஆணையிடுகிறேன். உனக்காக விஸ்வகர்மா பத்மசரோவர் ஏரிக்கரையில் ஒரு கோயில் நிர்ணயித்து உள்ளார். அங்கு சென்று நீ தங்குவாயாக! என்றார். பத்மாவதியும் அவரிடம் விடைபெற்று அலமேலுமங்காபுரம் சென்றாள். கோயிலுக்குள் சென்று சிலை ரூபமானாள். சீனிவாசனும் லட்சுமியும் சேஷாசலத்தில் தொண்டைமானால் எழுப்பப்பட்ட கோயிலுக்குள் சென்று சிலை வடிவமாயினர். இத்தனை விஷயமும் வகுளாதேவிக்கு தெரியாமல் போய்விட்டது. தன் மகன் சீனிவாசனும் மருமகள் பத்மாவதியும் இன்னும் வீடு வந்து சேரவில்லையே என அவள் கவலைப்பட்டாள். தனது மூத்த மகன் கோவிந்தராஜனிடம் சென்று, மகனே! சீனிவாசனையும் பத்மாவதியையும் அகத்தியரின் ஆஸ்ரமத்தில் விட்டு வந்தோமே! அவர்களை இதுவரை காணவில்லையே. ஆறு மாதங்கள் கடந்தும் ஏன் வராமல் இருக்கிறார்கள்? அவன் எங்கிருக்கிறான் என தேடிப் பிடித்து வா, என்றாள். கோவிந்தராஜன் அவளிடம் நடந்த விஷயங்களை எல்லாம் விளக்கினார். உன் மகன் சிலை வடிவமாகி விட்டான். பத்மாவதி பத்மசரோவர் கரைக்கு சென்றுவிட்டாள். லட்சுமிதேவி உன் மகனின் மார்பில் அடைக்கலம் புகுந்துவிட்டாள். நீ நம் வீட்டின் அருகில் உள்ள ஆனந்த நிலையத்திற்கு செல். அதன்கீழே உன் மகன் சிலையாக இருக்கிறான், என்றார். பதறிப்போன வகுளாதேவி ஆனந்த நிலையத் திற்குள் சென்று சிலையாக நின்ற தன் மகனைக்கண்டு கதறிக் கண்ணீர் வடித்தாள்.

திருப்பதி ஏழுமலையான் திருவடிகளே சரணம் ஓம் நமோ வெங்கடேசாய ஓம் நமோ நாராயணாய              

ஓம் நமோ நாராயணாய! கோவிந்தனே சரணம்!