வையத்து வாழ்வீர்காள் நாமும்நம் பாவைக்கு
செய்யும் கிரிசைகள் கேளீரோ* பாற்கடலுள்
பையத் துயின்ற பரம னடிபாடி*
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி**
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்முடியோம்*
செய்யா தனசெய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்*
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி*
உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.

இப் பூமண்டலத்தில்
வாழ்ந்து கொண்டுள்ளவர்களே!
(எம்பெருமானாலேயே பேறு என்ற அத்யவஸாய முடைய) நாமும் உஜ்ஜீவிக்கும் வழியை ஆராய்ந்து, திருப்பாற்கடலில் அவதாநத்துடன் கண் வளர்ந்தருளி நின்ற பரமபுருஷனுடைய திருவடிகட்கு மங்களாசாஸணம் பண்ணி
(ஆசார்யாதிகளுக்கு இடுகையாகிற) ஐயத்தையும், (ஆர்த்தர்கட்கு இடுகையாகிற) பிக்ஷையையும் சக்தியுள்ளவளவும் இட்டு
மகிழ்ந்து நமது நோன்புக்கு (அங்கமாகச்) செய்யவேண்டிய
க்ரியைகளை காது கொடுத்துக் கேளுங்கள்.
நோன்பு நோற்கத் தொடங்கின நாம் நெய், பால் உண்ணக்கடவோமல்லோம்;
விடியற் காலத்திலேயே ஸ்நாநம் செய்துவிட்டு
(கண்ணில்) மையிட்டு அலங்காரம் பண்ணக்கடவோமல்லோம்;
(குழலிற்) பூ வைத்து முடிக்கக் கடவோமல்லோம்;
(மேலைத் தலைவர்கள்) செய்யாதவற்றை
செய்யக் கடவோமல்லோம்;
கொடிய கோட்சொற்களை
(எம்பெருமானிடத்துச்) சென்று கூறக் கடவோமல்லோம்;
ஏல் ஓர் எம்பாவாய்

ஒரு விசேஷ காரியத்தில் ஈடுப்பட்டவர்கள் அக்காரியம் தலைக்கட்டுமளவும் சிலவற்றைப் பரிஹரிக்க வேண்டுமென்றும் சிலவற்றைப் பற்றவேண்டுமென்றும் அந்த வீடுபற்றுக்களை முதலில் ஸங்கல்பித்துக்கொள்ள வேண்டுமென்றும் சாஸ்திரங்களில் கூறியுள்ளதனால், அதற்கேற்ப, நோன்பு ஆகிற விசேஷ காரியத்தில் ஒருப்பட்ட இவ்வாயர் மங்கைகள் தாங்கள் விடுமவற்றையும் பற்றுமவற்றையும் ஸங்கல்பிக்கிறார்கள், இப்பாட்டில்.

பாற்கடலுள் பையத்துயின்ற பரமனடிபாடுகை, நாட்காலே நீராடுகை, ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டுகை ஆகிற இம்மூன்றும் செய்யப்படுமவை. நெய்யுண்ணாமை, பாலுண்ணாமை, மையிட்டெழுதாமை, மலரிட்டு முடியாமை, செய்யாதன செய்யாமை, தீக்குறளை சென்றோதாமை என்பன விடப்படுமவை.

(நம்மை விட உயர்ந்தவர்களுக்குத் தருவது ஐயம் எனப்படும்.)

விஜயலஷ்மி ராஜ் அவர்கள் வழங்கிய
திருப்பாவை பாடல் மற்றும் விளக்கம்
ஆடியோ வடிவில்