ஆயிரம் ஆண்டுகள் முன்பு...
ஶ்ரீபெரும்புதூரில் 1,017 ஆம் ஆண்டில் சித்திரை மாதம், திருவாதிரை நட்சத்திரத்தில் அவதரித்தார் இராமானுஜர் . இவர் இந்து மதம் மற்றும் சமூகத்தைச் சீர்திருத்தம் செய்த வைணவ மகான். இவர் ஆழ்வார்களின் பாசுரங்களை பெருமாள் கோவில்களில் இசையுடன் பாடிட வழிவகுத்தவர். இதனால் இவர் தமிழ் வேதமான திருவாய் மொழியின் செவிலித்தாய் எனப் போற்றப்படுகிறார்.
இராமானுஜர் பன்மொழிப் புலமைமிக்கவர். இவர் தமிழ் மறையை தழைக்கச் செய்தவர். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே ஜனநாயகம், சமத்துவம், சமதர்மம், சாதி மத பேதமின்மை ஆகிய கொள்கைகளை மக்களிடையே உபதேசித்து அதனை நடைமுறைப்படுத்தியும் காட்டினார். இவர் ஆன்மிகத்தோடு சமூக ஒற்றுமையையும் வலியுறுத்திய சிறந்தச் சமூக ஆன்மீக சீர்திருத்தவாதி.
ஆதிதிராவிடர்களைத் "திருக்குலத்தவர்" என்று புகழ்ந்தார் இராமானுஜர். இவரை "உடையவர், ஸ்ரீபாஷ்யக்காரர், எம்பெருமானார், திருப்பாவை ஜீயர், யதிராஜமுனி, இளையபெருமாள்" எனப் பல பெயர்களால் அழைக்கின்றனர். இவர் ஶ்ரீரங்கம் கோவிலின் நிர்வாகத் திட்டங்களை சீரமைத்து, தொகுத்து வகுத்தார்.
இந்து தத்துவப் பிரிவுகளில் ஒன்றான விசிஷ்டாத்துவைதத் தத்துவத்தைத் தோற்றுவித்து, அதை இந்தியா முழுவதும் பரப்பினார் இராமானுஜர். ஏழை எளிய மக்களிடமும் வைணவம் பரவக் காரணமாக இருந்தார்; பரிபூரணமான பக்தியும் சரணாகதியுமே இறைவனை அடைவதற்கான எளிய வழி என்று கூறி மக்களை எளிய வழியில் நெறிப்படுத்தினார் இராமானுஜர்.
தமிழ்நாட்டில் ஶ்ரீபெரும்புதூரில் சோமயாஜி தீட்சிதர் மற்றும் காந்திமதி அம்மாளுக்கு மகனாகப் பிறந்தார் இராமானுஜர். இவர் தனது தந்தையிடம் இருந்து வீட்டிலேயே வேதங்களைக் கற்று வந்தார்.
சிறு வயதிலேயே வேதங்களிலும், உபநிடதங்களிலும் இருக்கும் மிக நுணுக்கமான தத்துவங்களை எளிதாகப் புரிந்து கொண்டார் இராமானுஜர். இவர் தனது 16வது வயதில் தஞ்சம்மாள் என்ற பெண்ணைத் திருமணம் செய்தார். திருமணமான சிலமாதங்களில் தனது தந்தையை இழந்தார் இராமானுஜர்.
கல்வி கற்கும் ஆர்வத்தினால்
ஸ்ரீ பெரும்புதூரிலிருந்து காஞ்சிபுரத்திற்கு குடி பெயர்ந்தார் இராமானுஜர். இவர் காஞ்சிபுரத்தில் "யாதவ பிரகாசர்" என்கிற பண்டிதரிடம் சீடராகச் சேர்ந்தார். கல்வி, கேள்வி, ஞானங்களில் தேர்ச்சி பெற்றவரான யாதவ பிரகாசர் அளித்தச் சில அத்வைத விளக்கங்களில் இராமானுஜருக்கு உடன்பாடு ஏற்படவில்லை.
இதனால் இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கோபம் கொண்டு யாதவ பிரகாசர் இராமானுஜரை கங்கையில் தள்ளி ஜலசமாதி செய்ய எண்ணி காசிக்கு சீடர்களுடன் பயணமானார்.
காசியை நெருங்கும் போது தனது தம்பி கோவிந்தனின் மூலம் குருவின் திட்டத்தை அறிந்து, காசியிலிருந்து காஞ்சிக்குத் தப்பினார் இராமானுஜர். காசியிலிருந்து காஞ்சிக்கு ஒரே நாள் இரவில் பெருமாளின் கருணையால் தப்பித்ததாகக் கூறப்படுகிறதுபின்னர் "திருக்கச்சி நம்பி" என்பவரைக் குருவாக ஏற்றார்.
திருக்கச்சி நம்பி வைசிய குலத்தைச் சார்ந்தவர்.அது தனது மனைவிக்குப் பிடிக்கவில்லை என்பதைத் அவளது செயல்களின் மூலம் தெரிந்துக்கொண்டார் இராமானுஜர்.
தன் பக்தி மார்க்கத்திற்கும், மனித நேயத்திற்கும் உறுதுணையாக இவள் இருக்க மாட்டாள்! என்று தெரிந்துக் கொண்ட இராமானுஜர் துறவறத்தை மேற்கொண்டார்.
ஆச்சாரிய குரு பரம்பரையில் முதல் ஆச்சாரியர் நாலாயிர திவ்ய பிரபந்தத்தை தொகுத்த நாத முனிகள் ஆவார். அவருக்குப் பின் "யமுனாச்சாரியர்" என்ற "ஆளவந்தார"் ஆச்சாரியர் ஆனார். இவர் நாதமுனிகளின் பேரன் ஆவார். அடுத்து வந்தவர் இராமானுஜர் ஆவார்.
ஆளவந்தாரின் அழைப்பை ஏற்று அவரைப் பார்ப்பதற்கு, பெரிய நம்பியுடன் காஞ்சியிலிருந்து புறப்பட்டு காடு, மலை கடந்து ஶ்ரீரங்கத்திற்கு ஓடோடி வந்தார் இராமானுஜர். ஆனால் யமுனாச்சாரியாரின் உயிர் பிரிந்த உடலையே அவரால் காண முடிந்தது.
ஆனால் அவருடலில் மூன்று விரல்கள் மட்டும் மூடியிருந்தன. அதனைப் பார்த்த இராமானுஜர் யமுனாச்சாரியாரை மானசீகக் குருவாக ஏற்றுக்கொண்டு மூன்று இலட்சியங்களை நிறைவேற்றுவதாகக் கூறினார். அவை:
1. வேதாந்த சூத்திரத்திற்கு விசிஷ்டாத்துவைத் தத்துவம் முறையில் விளக்கம் எழுதுவது
2. பாரசர முனிவரின் விஷ்ணு புராணத்தை உலக்கு எடுத்து கூறுவது
3. விசிஷ்டாத்வைத்தை உலகிற்கு எடுத்து சொல்லி, அறியாமையால் மூழ்கி கிடக்கும் பக்தர்களுக்கு இறை அருள் கிடைக்கச் செய்வது.
இவ்வாறு இராமானுஜர் சொன்னதும் மூடியிஇருந்த யமுனாச்சாரியாரின் விரல்கள் ஒவ்வொன்றாகத் திறந்தன. பினனர் பல நாடுகளுக்கும் இராமானுஜர் சென்று தனது விசிஷ்டாத்வைத் தத்துவங்களை எடுத்துரைத்தார்; பண்டிதர்களுடன் வாதம் செய்து வெற்றி பெற்றார். அவரது தத்துவங்களை ஏற்றுக் கொண்ட பல பண்டிதர்கள் அவரின் சீடர்கள் ஆனார்கள்.
ஆளவந்தாரின் ஐந்து சீடர்களில் ஒருவரான திருக்கோட்டியூர் நம்பி என்பவரிடம் நாராயண மந்திரத்தின் இரகசியத்தை கற்க முயன்றார் இராமானுஜர். பதினேழு முறைகள் முயன்றும் முடியாமல் பதினெட்டாவது முறையாக ஶ்ரீரங்கத்திலிருந்து திருக்கோஷ்டியூருக்குச் சென்று நாராயண மந்திரத்தின் இரகசியத்தைத் தெரிந்துக் கொண்டார்.
ஆனால் திருக்கோட்டியூர் நம்பி, மந்திரத்தின் இரகசியத்தை எவருக்கும் வெளியிடக்கூடாது! என்றும், அவ்வாறு வெளியிட்டால் உனக்கு நரகமே கிடைக்கும் என்றும் இராமானுஜரிடம் சத்தியம் வாங்கினார். இராமானுஜரும் சத்தியம் செய்துவிட்டு, திருக்கோட்டியூர் கோவில் கோபுரத்தின் மீதேறி நின்றவாறே எல்லோரும் கேட்கும்படி உரக்க நாராயண மந்திரத்தைக் கூறினார்.
குருவின் வார்த்தையை மீறி, நரகத்திற்குச் செல்வாய்! எனக் குரு கூறியபோதும் "எல்லோரும் சொர்க்கம் செல்ல, நான் ஒருவன் நரகம் செல்வது என்றால் அது என் பாக்கியம் தான்" என்று கூறினார் இராமானுஜர்.
இந்தப் பதிலைக் கேட்ட திருக்கோட்டியூர் நம்பி இந்த எண்ணம் எனக்கு ஏன் ஏற்படவில்லை? என்று வருந்தி அரங்கனின் கருணையையும் இவரின் கருணை மிஞ்சிவிட்டது எனக்கூறி எம்பெருமானார் என்று கூறி இராமானுஜரைக் கட்டி தழுவினார்.
இராமானுஜர், ஶ்ரீரங்கம் கோயிலின் நிர்வாகத்தை ஏற்று அதை முற்றிலும் சீர்படுத்தி, அன்றாடம் நடக்க வேண்டிய ஒழுங்கு முறைகளை உண்டாக்கினார். இதனால் அவருக்கு எதிர்ப்புகள் முளைத்து, அவரைக் கொல்லும் முயற்சிகள் கூட நிகழ்ந்தன என்பர்.
தற்போது வைணவக் கோவில்களில் நடைபெறும் பழக்கவழக்கங்கள், வழிபாட்டு முறைகள் ஆகியவற்றை வகுத்தவரும் இராமானுஜரே ஆவார். ஶ்ரீரங்கம் கோயில் நிர்வாகம், வைஷ்ணவ மட நிர்வாகம் இரண்டையும் திறம்பட நடத்தினார் இராமானுஜர்.
ஶ்ரீரங்கம் கோயிலின் உடைமைகளைச் சிறப்புற மீட்டெடுத்து, நிர்வாகம் செய்ததால் திருவரங்கன் இராமானுசரை "உடையவர்" என அழைத்தாராம். ஶ்ரீரத்திலுள்ள தலைமை மடத்திற்கு மடாதிபதியாக வரவேண்டிய விதி முறைகளையும் நெறிப்படுத்தினார் இராமானுஜர்.
ஶ்ரீரங்கத்தைவிட்டுச் செல்ல வேண்டிய சூழல் இராமானுஜருக்கு ஏற்பட்டப்போது, ஶ்ரீரங்கத்திலிருந்து, நீலகிரி காடுகளைச் சென்றடைந்தார் இராமானுஜர். அங்கு நல்லான் சக்கரவர்த்தி என்பவன் அங்குள்ள எல்லாத்தரப்பு மக்களுக்கும் வைணவ மதத்தை கற்று தருவதைப் பார்த்து மெய்சிலிர்த்தார் இராமானுஜர்.
பின்னர் அங்கிருந்து கர்நாடக மாநிலம் செல்லும் வழியில் தொண்டனூர் என்னும் ஊரில் ஏரி ஒன்றை அமைத்தார் இராமானுஜர். பின்னர் அங்கிருந்து மேலக்கோட்டை சென்று பன்னிரெண்டு ஆண்டுகள் தங்கினார். இராமானுஜர்.அவ்வூரில் இருந்த அத்வைத்தவாதிகளை வாதில் வென்று வைணவராக்கினார் இராமானுஜர். அவ்வூரில் இருந்த தாழ்ந்த குலத்தைச் சார்ந்தோரைத் "திருக்குலத்தார்" என்று அழைத்து அவர்களுக்கு பூனூல் அணிவித்து வைணவராக்கினார் இராமானுஜர்.
பின்னர் தனது சக்தி அனைத்தையும் ஸ்ரீபெரும்புதூரில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விக்ரகத்தில் புகுத்திவிட்டு, திவ்யமந்திரத்தை உச்சரித்தபடியே வைகுண்டம் சேர்ந்தார் இராமானுஜர். இப்போதும் இராமானுஜரின் திருஉடல் ஸ்ரீரங்கம் கோயிலில் அப்படியே உள்ளது.
இராம அனுஜ என்ற வடமொழிச் சொல்லுக்கு இராமரின் தம்பி எனப் பொருளாகும். (அனுஜ=தம்பி). இவரை "இலட்சுமணரின் அவதாரம்" என்கின்றனர் இறை தொண்டையும், மக்கள் தொண்டையும் இரு கண்களெனக் கொண்டு வாழ்ந்த இராமானுஜரைப் போற்றுவோம்.
என்றென்றும் நிலைத்திருக்கும் இராமானுஜர் ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள ஸ்ரீராமானுஜர் பூத உடல் சுமார் ஆயிரம் ஆண்டுகளாக இருக்கிறது.
இராமானுஜரின் பூதவுடல் கெடாமல் பாதுகாக்கப்பட்டு, இன்றளவும் வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. இந்தப் பூத உடலுக்கு வருடத்திற்கு இரண்டு முறை மட்டும் பச்சைக் கற்பூரமும், குங்குமப்பூவும் கொண்டு அபிஷேகம் செய்து வருகிறார்கள். அமர்ந்த நிலையில் சற்றே பெரிய திருமேனியாக இராமானுஜரை இன்றும் நாம் ஶ்ரீரங்கத்தில் உடையவர் சந்நிதியில் தரிசிக்கலாம் (உடையவர் என்பது இராமானுஜரின் சிறப்புப் பெயர்). இந்த அதிசய செய்தியை இந்துக்களிலேயே பலரும் அறிந்திருக்கவில்லை. ஸ்ரீராமனுஜர் சந்நிதி ஸ்ரீரங்கம் கோவிலில் இருப்பதே பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
அப்படியே ஸ்ரீராமனுஜர் சந்நதியை பார்ப்பவர்கள் ஸ்ரீராமானுஜரின் பூத உடல் என்று அறிவது இல்லை, சந்நதியில் உள்ளது கருங்கல் சிலை என்றே பலர் நினைத்து கடந்துப் போகிறார்கள்.
தானான திருமேனி (இராமனுசர் பூதஉடல்) இராமானுஜர் ஸ்ரீரங்கத்தில் பரமபதம் அடைந்தவுடன், அரங்கனுடைய வசந்த மண்டபத்திலேயே அவருடைய திருமேனியை (பூத உடலை) பிரதிஷ்டை செய்தார்கள்.
இராமானுஜர் தமது 120-ஆவது வயதில், தாம் பிறந்த அதே பிங்கள வருடம் மாசி மாதம் வளர்பிறை தசமி திதியில், சனிக்கிழமை நண்பகலில், ஜீயர் மடத்தில் பரமபதம் சேர்ந்தார். (பகவத் சாயுஜ்யம்) அடைந்தார்.
அவருடைய சீடர்களான கந்தாடையாண்டான், அருளாளப்பெருமாள் எம்பெருமானார், வடுகநம்பி முதலானோர் வேரறுந்த மரம் போல் விழுந்து கிடந்து துடித்தனர்.
அவரது உயிர் பிரிந்த உடனே:
தர்மோ நஷ்ட (தர்மத்திற்கே பெருத்த நஷ்டம்) என்று அசரீரி ஒலித்ததாம். அப்போது நடந்த நிகழ்வுகள் எல்லாம் அதிசயத்திலும் அதிசயமானது! என்பர்.
நம்பெருமாள் என்னும் அரங்கன் தான் உடுத்திக் களைந்த ஆடையையும், சூடிக்களைந்த துழாய் மலரினையும், எண்ணெய்க் கிண்ணத்தையும் தம் இறுதி மரியாதையாக ஒரு பொற்கிண்ணத்தில் இட்டு உத்தம நம்பி என்ற சீடர் மூலம் ஜீயர் மடத்திற்கு அனுப்பினாராம்.
உத்தம நம்பிகள் ஜீயர் மடத்தில் இருந்த சீடர்களுக்கு ஆறுதல் சொல்லி, அதன் பிறகு எண்ணெயை இராமானுசரின் திருமுடியில் தேய்த்துப் பின் அவர் திருவுடலை நீராட்டி, அரங்கன் உடுத்திக் களைந்த ஆடையையும் சூடிக்களைந்தத் தொடுத்த துழாய் மலரினையும் திருமேனியில் சாற்றினாராம்.
பின்பு எண்ணெய் மற்றும் ஸ்ரீசூர்ணங்களும் பிரசாதமாக அங்கிருந்தோருக்கு வழங்கப்பட்டதாம். இதை வைணவ மொழியில் “பிரம்மமேத ஸம்ஸ்காரம்” என்கிறார்கள்.
இதன் பின்பு இராமானுஜரின் திருமேனி ஒரு வாகனத்தில் (திவ்ய விமானத்தில்) அமர்த்தப்பட்டு, இதன் முன்னின்று அவருடைய முக்கிய சீடர்களும், ஜீயர்களும் பரஹ்மவல்லி, ப்ருகுவல்லி, நாராயணானுவாகம் போன்ற மந்திரங்களை ஓதினராம்.
பல்லாயிரக்கணக்கான சீடர்கள், பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் புடை சூழ இராமானுஜர் திருமேனி தாங்கிய வாகனம் இறுதிப்பயண ஊர்வலத்தைத் தொடங்கியது. திருவரங்கப் பெருமாளரையர் தலைமை தாங்கி திருவாய்மொழியரையர், ஆப்பான், திருவழுந்தூரரையர், திருநறையூரரையர், அழகிய மணவாரரையர் முதலிய எழுநூறு திருவாய்மொழி ஓதும் அரையர்கள் திருவாய்மொழியினை ஓதியபடி பின் தொடர்ந்தனர். தொடர்ந்து ‘இராமானுஜர் நூற்றந்தாதி” ஓதியபடி ஶ்ரீரங்கத்து அமுதனார், பெரியகோவில் வள்ளலார் முதலியவர்கள் வாகனத்தின் பின் வந்தனர்.
ஸ்ரீரங்கத்தில் ஜீயர் மடத்திலிருந்து நகரின் நான்கு உத்திர வீதி, சித்திரை வீதிகளிலும் வாகனம் ஊர்ந்தது. மக்கள் கூட்டம் வீதியெங்கும் நிரம்பி வழிந்தது. பெண்கள் தங்கள் வீதிகளில் நீர் தெளித்துக் கோலமிட்டுக் கூடி நின்றனர். மக்கள் பூவும் பொரியும் கலந்து தூவினார்களாம். அரங்கன் கோவில் திருநடை மூடி, கரும்பும் குடமும் ஏந்தினராம்.
அடியார்கள் சாமரம் வீச, வானில் கருடன் வட்டமிட இராமானுஜர் இறுதி ஊர்வலம் திரும்ப கோவில் வாயிலை அடைந்தபோது
தரிஸனத்தில் எம்பெருமானார் திருநாட்டுக்கு எழுந்தருளினார்! என்று அசரீரி மீண்டும் ஒலித்ததாம்.
தொடர்ந்து அரங்கன்
“இராமானுஜன் என்தன் மாநிதி
என்றும் இராமனுஜன் என்தன் சேமவைப்பு”
என்றும் திருவாய் மலர்ந்தருளினாராம்! அரங்கன். அதாவது "இராமானுஜர், எனது மிகப் பெரும் செல்வம்; எனது சேமநிதி" என அரங்கன் திருவாய் மலர்ந்தருளினார்.
நமது பணத்தை. நாம் வங்கியில் நிரந்தர சேமிப்பு வைப்பு நிதியாகப் பாதுகாப்பதைப் போல; அரங்கன், இராமரின் தம்பி இலட்சுமணரின் அவதாரமான இராமனுஜரை என்றென்றும் பாதுகாத்து வைத்திட அருள் செய்தார். அப்படியானால் பிற சிரஞ்ஜீவிகளைப் போல இவரையும் ஏன் என்றென்றும் உயிரோடிருக்கச் செய்யவில்லை? என்றால், கலியுகம் அந்தப் பாக்கியத்தைப் பெறவில்லை! எனலாம்.
உயிர் பிரிந்து பூதவுடலானாலும் திருமேனி எப்போழுதும் அழியாதிருப்பதே இறைபக்தி மற்றும் இறை நம்பிக்கையற்ற அறிவிலிகள் இதைக் கண்ணாரக் கண்டு, அறிவு பெற்றிட வேண்டும்! என்பது திருமாலின் திருவுள்ளமாக இருக்கலாம்.
எனவே இராமனுஜரின் பூத உடல் என்ற அந்த நிதி வெளியே எங்கும் போகலாகாது என்று அரங்கன் தன் திருக்கோவில் வளாகத்திலேயே (ஆவரணத்துக்குள்ளேயே) எவ்வாறு ஒரு அரசன் தன் பெண்டிரை தன் அந்தபுரத்திலே அடக்கி வைப்பானோ அதுபோல தன்னுடைய சந்நதிக்குள்ளேயே, (யதிஸம்ஸ்காரவிதியின் படி), பள்ளிப்படுத்தினர்! பெரியோர்கள்.
பல வருடங்களுக்கு முன் வைணவ மரபில், துறவிகளை எரிக்கும் வழக்கம் கிடையாது. மாறாக அவர்களை திருப்பள்ளிப் படுத்துவார்கள் (புதைத்தல்). இராமானுசரின் பூதவுடலை ஸ்ரீரங்கம் கோவில் வளாகத்தில் (முன்னாள் வசந்த மண்டபம் என்றழைக்கப்பட்ட இடத்தில்) திருப்பள்ளிப்படுத்தி அதன் மேல் எழுப்பப்பட்டது தான் தற்போதைய உடையவர் சந்நிதி.
இன்றும் நாம் இவருடைய பூத உடலை தரிசிக்கலாம் இவரின் திருமேனியில் தலைமுடி கைநகம் போன்றவற்றைக் கூட எளிதாகக் காண இயலும். ஸ்ரீரங்கத்தில் இராமானுஜரின் சந்நதியில் எழுந்தருளியுள்ள திருமேனிக்குத் தானான திருமேனி என்று பெயர்.
ஆதிசேஷனின் அவதாரமல்லவோ இராமானுஜர்! இலட்சுமணரின் மறுபிறவி அல்லவோ இராமனுஜர்,(இராம + அனுஜர்
அனுஜ = தம்பி) அவரது திருமேனி. இன்றளவும் நிலைத்திருக்கத் தானே செய்யும்?
ஆயிரம் ஆண்டுகளாக ஜீவித்திருக்கும் இராமானுஜர்.
ஓம் நமோ நாராயணாய