கும்பலாக வந்தவர்கள் அந்த காட்டில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட குலத்தினர். அவர்களது கையில் பழங்களும், விறகும் இருந்தன. அவற்றை ராமானுஜர் முன்பு அவர்கள் வைத்தனர். ஜாதியில் தாழ்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களது அன்பான காணிக்கையை ஏற்றுக்கொண்டார் ராமானுஜர்.

 இதனிடையே ராமானுஜருக்குப் பதிலாக மன்னன் கிரிமிகண்டனிடம் சிக்கி கண்களை இழந்த கூரத்தாழ்வான், ராமானுஜரைத் தேடி வந்தார். இச்சம்பவத்துக்கு பிறகு கிரிமிகண்டன் இறந்து விட்டதாக அவர் அறிந்தார். ராமானுஜருக்கு இனி எந்த ஆபத்தும் ஏற்படாது என்பதை உணர்ந்த அவர் ராமானுஜரை தரிசித்தார். தனக்காக கண் இழந்த கூரத்தாழ்வானை ராமானுஜர் அன்புடன் தழுவிக் ண்டார். 

 கூரத்தாழ்வா! கலங்காதே, உனக்கு மீண்டும் கண் கிடைக்கும். நீ காஞ்சிபுரத்திற்கு சென்று வரதராஜப்பெருமாளிடம், கண்களை மீண்டும் தா எனக்கேள். அவன் உனக்கு கொடுப்பான்,என்றார்.  அதன்படியே கூரத்தாழ்வான் அங்கு சென்று கண்களைப்பெற்றார். இரண்டாண்டுகள் இப்படியே கழிந்தன. கூரத்தாழ்வான் நோய்வாய்ப்பட்டார். படுத்த படுக்கையான அவர் பெருமாளின் திருவடிகளை அடைந்தார். 

அவரது மறைவால் ராமானுஜர் மிகுந்த வருத்தத்திற்கு உள்ளானார். கண்களில் நீர் பெருக,கூரத்தாழ்வானின் மகன் பராசர பட்டர் இனி உங்களது தலைவராக இருப்பார். அவரை ஏற்றுக்கொள்ளுங்கள்,என்று கூறி தலையில் மலர்க்கிரீடம் சூட்டினார். அவரை அணைத்துக் கொண்டு தன் சக்தி முழுவதையும் அவருக்குள் செலுத்தினார். 

இந்த சம்பவம் நடந்த போது ராமானுஜருக்கு 60 வயது ஆகியிருந்தது. அதன் பிறகு அவர் ஸ்ரீரங்கத்தை விட்டு வெளியே எங்கும் செல்லவில்லை. 120 வயது வரை அங்கேயே இருந்தார்.  ஒருநாள் தன்னுடைய சீடர்களிடம் பல ஆன்மிக ரகசிய தத்துவார்த்தங்கள் பற்றி விளக்கி கொண்டிருந்தார்.

திடீரென யாரும் எதிர்பாராத வகையில் மௌனமானார், ஜடம் போல அசைவற்று இருந்தார். சீடர்கள் கலங்கிப்போனார்கள். அவரை அசைத்துப்பார்த்தும் பலனில்லாமல் போனது.  பதைபதைப்புடன், அவர் சுயநினைவுக்கு வரும் வரையில் பொறுத்திருந்தனர். சற்று நேரம் கழித்து அவர் கண் திறந்த பிறகே, அவர்களுக்கு சென்ற உயிர் திரும்பி வந்தது போல் இருந்தது. திடீரென ஜடநிலைக்கு சென்றது குறித்து அவர்கள் அவரிடம் விசாரித்தனர்.

 அன்பர்களே! என்னை யாரோ கட்டிப்போட்டது போல இருந்தது. கண்மூடி அதுபற்றி சிந்தித்தேன். என்னையே மறந்து விட்டேன். நான் பிறந்த ஸ்தலமான ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அன்பர்கள் எனக்கு ஒரு விக்ரகம் செய்துள்ளனர். கல்லால் செய்யப்பட்ட அந்த விக்ரகத்தை சற்று முன் பிரதிஷ்டை செய்து, அவர்களது அன்பால் என்னைக்கட்டிப்போட்டு விட்டனர். அதனால் தான் அப்படி இருந்தேன்,என்றார்.  

இப்படி 120 ஆண்டுகள் இந்த உலகத்தில் ராமராஜ்யத்தை நடத்திய ராமானுஜர் பரந்தாமனின் திருவடிகளை அடைவதற்கு சித்தமானார். தன்னுடைய சீடர்கள் அனைவரையும் அழைத்து தன் கருத்தை சொன்னார். சீடர்களும் பக்தர்களும் அதைக்கேட்டு மனம் குலைந்தனர். கண்ணீர் விட்டு அழுதனர்.  ராமானுஜர் அவர்களை தேற்றினார்.  

என் அன்புக்குரிய குழந்தைகளே! ஞானிகள் மரணம் கண்டு துன்பப்படுவதில்லை. ஆனால், நீங்கள் ஏதோ மயக்கத்தில் இப்படி நடந்து கொள்கிறீர்கள். மரணத்திற்காக யாரும் அழக்கூடாது,என்றார். சீடர்களால் ஆறுதல் அடைய முடியவில்லை. அழுது கொண்டே இருந்தனர். 

குருவே! உங்கள் பிரிவைத் தாங்கும் சக்தி எங்களிடம் இல்லை. இன்னும் சில நாட்களாவது எங்களோடு இருந்து அருள் செய்ய வேண்டும். உங்கள் திருமேனி இவ்வுலகில் வாழும் காலத்தை நீட்டிக்க வேண்டும்,என்றனர். 

ராமானுஜர் அவர்களிடம்,உங்கள் கோரிக்கையை ஏற்கிறேன். ஆனால், இன்னும் 3 நாட்கள் மட்டுமே உங்களுடன் இருப்பேன்,என்றார்.  அந்த 3 நாட்களிலும் தன் சீடர்களுக்கு 72 போதனைகளை செய்தார். இந்த உபதேசங்களில் ஏதாவது ஒன்றையாவது பின்பற்றி நற்கதி அடைய வலியுறுத்தினார்.

வைஷ்ணவர்களுக்கு ராமானுஜரின் 72 கட்டளைகள் !

1. ஆச்சார்யர் திருவடி பணிந்து போவது போல் அனைத்து வைஷ்ணவர்களிடமும் நடக்க வேண்டும்.

2. ஸம்ப்ரதாய குருக்கள் வார்த்தையில் நம்பிக்கை வேணும்.

3. புலன்கள் இழுத்த வழி செல்லாமல் இருக்க வேண்டும்.

4. மதச்சார்பற்ற ஞானம், அறிவுடன், போதும் என்று இராமல் இருக்க வேண்டும்.

5 . பகவத் சரித்ரங்கள் சேஷிடிதங்கள் வாக்யங்களில் உகந்த ஈடுபாடுடன் இருக்க வேண்டும்.

6. ஆச்சார்யர் உயர்ந்த பிரம ஞானம் அருளிய பின்பு . மீண்டும் புலன்கள் கவர்ச்சியில் ஈடு படாமல் இருக்க வேண்டும்.

7. அனைத்து இந்திரிய வியாபாரங்களிலும் ஒதுங்கி இருக்க வேண்டும்.

8. சந்தனம்,மலர்,நறுமணம் இவற்றில் அதிக ஈடுபாடு கொண்டு இருக்க கூடாது.

9. கைங்கர்யபரர் திருநாமங்களை உபயோக்கிக்கும் பொழுது,எம்பெருமானின் திருநாமங்களை உபயோக்கிக்கும் பொழுது அடையும் இன்பம் அடைய வேண்டும்.

10. அடியார் அடியானே, அவனை அவன் அடியானை விட சீக்கிரம் அடைகிறான், என்பதில் உறுதி கொள்ள வேண்டும்.

11. ஞானவான் அவன் கைங்கர்யாமோ அவன் அடியார் கைங்கர்யாமோ இன்றி அழிவான்.

12. வைஷ்ணவர் வாழ்வுமுறை அவனை அடையும் உபாயம் என்று கருத கூடாது.

13. அவன் ஒருவனே அடையும் குறிக்கோள்.

14. கைங்கர்ய பரர்களை மரியாதை இன்றி நடத்த கூடாது.

15. ஸ்ரீ வைஷ்ணவரை பார்த்ததும் முதலில் அடி பணியாமல் இருக்க கூடாது.

16. பகவத் சன்னதியிலோ அவன் அடியார்கள் இருந்தாலும் ஆன்மிகர் கூட்டத்திலோ காலை நீட்டி இருக்க கூடாது.

17. திரு கோவிலை நோக்கியோ . ஆசார்யர் திரு மாளிகை நோக்கியோ கைங்கர்ய பரர் திரு மாளிகை நோக்கியோ காலை நீட்ட கூடாது.

18. காலையில் எழுந்ததும் குரு பரம்பரை அனுசந்திகவும்.

19. பெருமாள் எழுந்து அருளும் பொழுது முன் வரும் திவ்ய பிரபந்த கோஷ்டி பார்த்ததும் த்வயம் மகா மந்த்ரம் அனுசந்தித்து கொண்டு சேவிக்கவும்.

20. திருநாம சங்கீர்த்தனத்தின் நடுவிலோ,கைங்கர்யபரர் களை பாராட்டும் பொழுதோ நன்றாக அடிபணிந்து வணங்க வேண்டும்.நடுவில் கூட்டத்தில் இருந்து போவது மிக பெரிய பாவமாகும்.

21. உன்னை தேடி  வைஷ்ணவர் வருகிறார் என்று அறிந்தால் முன்னமே சென்று வர வேற்க வேண்டும் . அவர் விடை கொள்ளும் பொழுது நடுவழி வரை கூட செல்ல வேண்டும் . இதை செய்யாவிடில் மிக பெரிய பாவமாகும்.

22. அடியார் அடியானாக இருக்க ஆசை கொள்ள வேண்டும்.அவர்கள் திருமாளிகை சென்று கைங்கர்யம் செய்து,அவர்களை உனக்கு முன், மரியாதையாக நடத்தவேண்டும்.

23. திருகோவிலையோ, திரு கோபுரத்தையோ, திரு விமானத்தையோ கண்டால் கைகூப்பி வணங்கவேண்டும்.

24. மறந்தும் புறம் தொழாமல்,அப்படி பட்ட கோவில்கள் கலை நயங்களுடன் இருந்தாலும் காணாமல் இருக்கவேண்டும்.

25. மற்றை தெய்வ சேஷிடிதங்கள் ஆச்சர்யமாக இருந்தாலும் ஈர்க்க கூடாதவை.

26. அவனை புகழ்ந்து பேசி கொண்டு இருக்கும் பொழுதோ அவன் அடியார் கைங்கர்ய பரர்களை புகழ்ந்து பேசிக் கொண்டு இருக்கும் பொழுதோ, நடுவில் குருக்கேபேசி தடங்கல் செய்ய கூடாது.

27. ஸ்ரீ வைஷ்ணவர் நிழலை கூட தாண்ட கூடாது.

28. நம் நிழலும் அவர்கள் மேல் படாமல் இருக்கும் படி கவனம் வேண்டும்.

29. நன்றாக நீராடிய பின்பே ஸ்ரீ வைஷ்ணவரை தொட்டு பரிமாற்ற வேண்டும்.

30. ஏழை ஸ்ரீவைஷ்ணவன் உன்னை முதலில் வணங்கினால்,அவரை அவமரியாதை உடன் நடத்த கூடாது.அப்படி நடத்தினால் மிக பெரிய பாபம் வரும்.

31. ஸ்ரீவைஷ்ணவர் உன்னை முதலில் வணங்கி அடியேன் என்றால்,அவருக்கு அவமரியாதை காட்டக் கூடாது . அப்படி செய்தால் மிக பெரிய பாபம் ஆகும்.

32. ஸ்ரீ வைஷ்ணவர் பற்றிய குற்றம் குறைகள். சோம்பல்தனம் . தூங்கி வழிவது . தாழ்ந்த பிறவி . போன்றவை . அறிந்தால் அது பற்றி மற்றவர் இடம் பேசாமல் நமக்கு உள்ளேயே வைத்துகொள்ள வேண்டும் . அவர்களின் நல்ல பண்பை மட்டுமே பேச வேண்டும்.

33.  பெருமாள் தீர்த்தமும் ஸ்ரீவைஷ்ணவர் ஸ்ரீபாத தீர்த்தமும் சமாச்ரண்யம் ஆகாதவர் முன்னிலையில் சுவீகரித்து கொள்ள கூடாது.

34. தத்வ த்ரயம் ரகஸ்ய த்ரயம் அறியாத ஸ்ரீ வைஷ்ணவர் ஸ்ரீபாத தீர்த்தம் சுவீகரித்து கொள்ள கூடாது.

35. ஞானம் அனுஷ்டானம் நிறைந்த ஸ்ரீ வைஷ்ணவர் ஸ்ரீபாத தீர்த்தம் நித்யம் எப்பாடு பட்டாலும் சுவீகரிக்க வேண்டும்.

36. கைங்கர்ய பரர்கள் உடன் நம்மை தாழவே பண்ணி கொள்ள வேண்டும்.

37. அறியாமல் நாஸ்திகர் மேல் தீண்ட பெற்றால் நீராடி ஸ்ரீ வைஷ்ணவர் ஸ்ரீ பாத தீர்த்தம் சுவீகரித்து சுத்தி படுத்தி கொள்ள வேண்டும்.

38. பற்றற்ற ஞானவான்கள் பகவான் என்று எண்ணி அவர்களுக்கு கைங்கர்யம் செய்ய வேண்டும்.

39. அப்படி பட்டவர்களின் பிறப்பு போன்றவற்றை மதியாமல்,நம்மை உய்ய கொள்ள வந்தவர்கள் என்று எண்ணி போக வேண்டும்.

40. நாஸ்திகன் வீட்டில் பெருமாள் தீர்த்தம் சுவீகரிக்க கூடாது.

41. அப்படிபட்டவர்கள் வீட்டில் பெருமாளை சேவிக்க கூடாது.

42. ஆனால் திரு கோவில்களில் அப்படி பட்டவர்கள் இருந்தாலும் பெருமாள் பிரசாதம் ஸ்வீகரிக்காமல் இருக்கக் கூடாது.

43. விரதம் அனுஷ்டிக்கும் பொழுதும் திரு கோவில் பிரசாதம் கொடுத்தால் மறுக்க கூடாது.

44. பெருமாள் பிரசாதம் மிகவும் புனிதம். பாபங்களை போக்கும். வேண்டாதவர் கொடுக்கும் பிரசாதம் என்றாலும் மறுக்க கூடாது.

45. ஸ்ரீ வைஷ்ணவர் கூட்டத்தில் தற் புகழ்ச்சி கூடாது.

46. மற்றவரை வெட்க படுத்தும் படி செய்ய கூடாது.

47. அவன் அடியாரை புகழவும் கைங்கர்யம் செயவும் எல்லா பொழுதும் போக வேண்டும்.

48. நித்யம் ஒருமணி நேரமாவது ஆசார்யர் புகழை பாட வேண்டும்.

49. திவ்ய பிரபந்தங்களிலும் குருபரம்பரையிலும் நித்யம் பல மணி நேரம் ஈடுபட்டு அனுபவிக்க வேண்டும்.

50. தன்னை பற்றியே எண்ணி இருப்பாருடன் சேர வேண்டாம்.

51. வெளியில் மட்டும் ஸ்ரீ வைஷ்ணவ சின்னம் கொண்டு உள்ளே ஸ்ரீ வைஷ்ணவ சிந்தனை இல்லார் உடன் நட்பு கூடாது.

52. பழி சொல்வார் வதந்தி பரப்புவார் உடன் நட்பு கூடாது.

53. மற்ற சமயத்தார் உடன் கலந்த பாபம் போக்க, நல்ல ஸ்ரீ வைஷ்ணவர் சேர்க்கை வேண்டும் .

54. அவன் அடியாரை களங்க படுத்தும் ,ஆச்சர்யர்களை இகழும், புலி தோல் போத்திய மானிடரை மதிக்க கூடாது.

55. த்வயம் அனுஷ்டான நிஷ்டர்கள் கூட்டம் நாடி போக ஆசை பட வேண்டும்.

56. உபாயாந்தரன்களை நாடுவாரி விட்டு பிரபத்தி நிஷ்டர் சகவாசம் கொள்ள வேண்டும்.

57. தத்வ த்ரயம் ரகஸ்ய த்ரயம் அறிந்தார் உடன் சேர ஆசை கொள்ள வேண்டும்.

58. ஐச்வர்யார்திகள் சேர்க்கை தவிர்த்து பகவல் லாபார்திகள் சேர்க்கைக்கு ஆசை பட வேண்டும்.

59. ஸ்ரீ வைஷ்ணர் நம் பக்கல் செய்த குற்றம் கணிசியாமல் அவர்களை பழி வாங்க எண்ணாமல் கட்டு பட்டு இருக்க வேண்டும்.

60. பரம பத கைங்கர்யம் ஆசை பட்டால் ஸ்ரீ வைஷ்ணவர் நலத்துக்கு பாடு பட வேண்டும்.

61. சரணாகதன். கைங்கர்ய பரர் வித்திக்கு கட்டளை படிக்கு மாறாக தனக்கு நன்மையே பயத்தாலும் நடக்க கூடாது.

62. பெருமாள் கண்டு அருளாத பிரசாதமோ . பெருமாளுக்கு சாத்தாத சந்தனமோ வெத்தலையோ புஷ்பமோ பானகமோ சுவீகரித்து கொள்ள கூடாது.

63. ஐஸ்வர்யார்திகள் தானாகவே கொடுப்பவற்றை சுவீகரித்து கொள்ளக் கூடாது.

64. நல்ல அனுஷ்டானம் குல பிறப்பு கொண்டவர் பிரசாதம் மட்டுமே ச்வீகரிகலாம்.

65. சாஸ்திரம் விதித்த ஒன்றையே, பகவானுக்கு சமர்ப்பிக்க வேண்டும். கண்ணுக்கு அழகாக இருப்பவை விதிக்க படாவிடில் சமர்ப்பிக்க கூடாது.

66. சாஸ்திரம் விதித்த படியே கண்டு அருள பண்ண வேண்டும்.

67. பெருமாள் பிரசாதம், புஷ்பம், புனிதம் என்ற உணர்வுடன் சுவீகரிக்க வேண்டும். போக பொருளாக கொள்ள கூடாது.

68. சாஸ்திரம் விதித்த படி நடப்பதே அவனுக்கு நாம் செய்யும் கடமை என்று உணர வேண்டும்.

69. ரகஸ்ய த்ரய நிஷ்டர்களை அவமதித்தால்,பேரு இழப்பு நிச்சயம். அவர்கள் அனுக்ரஹத்தால் பேரு சீக்கிரம் நிச்சயம் பெறுவோம்.

70. அடியார் அடியார் கைங்கர்யமே நமது குறிக்கோள் ஆக கொள்ள வேண்டும் அவர்கள் மனம் கோனும் படி நடந்தால் நாம் இழப்போம்.

71. திவ்ய திருமேனியை வெறும் கல் என்றோ,ஆசார்யரை வெறும் மனிதர் என்றோ, பாகவதர்கள் பிறப்பை இழிவாக எண்ணுபவனோ, புனித நீரை வெறும் தண்ணீர் என்று நினைப்பவனோ, திருமந்த்ரங்களை சொல் கூட்டம் என்று மட்டும் நினைபவனோ, பரமாத்மாவை தேவர்களில் ஒருவன் என்று எண்ணுபவனோ, அகல பாதாள இருட்டு நரகம் புகுவான்.

72. ஆச்சார்யர் அபிமானமே உத்தாரகம். பெருமாள் திரு வடிகளை விட ஆச்சார்யர் அடி பணிபவனே நிச்சயம் பேரு பெறுவான். ஆச்சர்யர்களை மதிக்காதவன் பெருமாளை மதிக்காதவனை விட அதிக பாபம் செய்தவன் ஆகிறான்.

ஆச்சார்யர் ஸ்ரீ பாத தீர்த்தம் அவன் திருவடி தீர்த்தம் விட புனிதம் ஆனது. இதை நன்றாக நெஞ்சில் பதித்து கொண்டு ஆச்சார்யர் அடி பணிந்து வாழ வேண்டும்.

 இதைக்கேட்டபிறகு சீடர்களின் மனம் தெம்படைந்தது. மரணம் குறித்த பயம் நீங்கியது. அவர்கள் ராமானுஜரின் பாதங்களில் பணிந்து,குருவே! தங்கள் திருமேனி அழிந்தாலும் கூட அது அழியக்கூடாது. அத்திருமேனியைத் தினமும் தரிசிக்கும் பாக்கியம் எங்களுக்கு வேண்டும், என பணிவுடன் கேட்டனர். ராமானுஜர் அதற்கு ஒப்புக்கொண்டார். மூன்றே நாட்களில் அவரைப்போன்ற சிலை வடிக்கப்பட்டது. அந்த சிலையை காவிரியில் நீராட்டினர். அதை ஒரு பீடத்தில் நிலை நிறுத்தினர்.

 தன் சீடர்களிடம்,அன்புக்குழந்தைகளே! இது எனது இரண்டாவது ஆத்மா. நானும் இந்த வடிவமும் ஒன்றே. எனது நிஜமான திருமேனி வயது காரணமாக மெலிந்து விட்டது. எனவே இந்த புதிய திருமேனியில் நான் குடியிருக்கப் போகிறேன்,என்றார். தனது தலையை தனது சீடர் கோவிந்தன் எனப்படும் எம்பாரின் மடியில் சாய்த்துக்கொண்டார். திருவடிகளை மற்றொரு சீடரான வடுகநம்பியின் மடியில் வைத்தார். 

தனது குருவான ஆளவந்தாரின் இரண்டு பாதுகைகளையும் பார்த்தபடியே தியானத்தில் ஆழ்ந்தார். அந்த நிலையிலேயே பரமபதத்தை அடைந்தார்.  அன்று சக ஆண்டு 1059 (கி.பி. 1137) மாசி மாதம் வளர்பிறை தசமி திதியாகும். இதன் பிறகு அவர் நியமித்த பராசர பட்டரின் தலைமையில் வைணவர்கள் ராமானுஜரின் நல்லாசியுடன் எம்பெருமானுக்கு திருத்தொண்டு செய்து பேறு பெற்றனர்.

ஸ்ரீ மதே ராமானுஜாய நமஹ

தொடரும்....