விக்ஷ்வக்ஸேனர் என அழைக்கப்பெரும் ஸேனை முதலியார், ஐப்பசி மாதம் பூராட நக்ஷத்திரத்திலே அவதரித்தவர். 

எப்படி ஒரு அரசனுக்கு தளபதி என்று ஒருவர் இருப்பாரோ அதைப் போல
பெருமாளுக்கு தளபதியாக இருப்பவர் இவர். கூர்ம புராணத்தில் இவர் பெருமாளின் ஒரு அம்சமே என்று கூறப்பட்டுள்ளது. மஹாவிஷ்ணுவைப் போலவே நான்கு கைகளுடனும், சங்கு, சக்கரம், கதை, தாமரையுடன் காட்சியளிப்பார். இவரின் மறு அவதாரமாக நம்மாழ்வார் கருதப்படுகிறார். ஸ்ரீ வைகுண்டத்தில் எம்பெருமானின் வாயில் காப்பானாக இருக்கிறார்.

அர்ச்சாவதார ரூபியாக எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் திருக்கோயில்களின் ப்ரம்மோற்சவங்களின் போது அங்குரார்ப்பணத்தன்று விக்ஷ்வக்ஸேனர் மாட வீதிகளில் புறப்பாடு கண்டருளி, நகர சோதனை செய்கிறார். இதன் மூலம் இவர் எம்பெருமான் தளபதியாக கருதப்படுவது நமக்கு புலப்படுகின்றது.

மேலும் இங்கே அடியேன் ஒரு செய்தியினையும் குறிப்பிட விரும்புகிறேன். முற்காலங்களில் திருநக்ஷத்திர தொடக்கம் இவர் அவதரித்த பூராட நக்ஷத்திரத்தில் தொடங்கி , குருபரம்பரையின் ஈடாக இருக்கும் ஸ்வாமி மணவாள மாமுனிகள் அவதார நக்ஷத்திரமான மூலத்துடன் முடிவடைவதாக முன்னோர் கூறுவர். பிறகு தான் இது மாறி அஸ்வினி நக்ஷத்திரத்தில் தொடங்கி ரேவதி நக்ஷத்திரத்தில் முடிவு பெருவதாகவும் அதுதான் இப்பொழுதைய வழக்கமாகவும் தொடருகிறது.

ஸேனை முதலியார் திருவடிகளே சரணம்