முந்தைய பதிவில் உய்யக்கொண்டாரை அனுபவித்தோம். இப்பொழுது ஓராண் வழி ஆசார்யர்களில் அடுத்த ஆசார்யனைப் பற்றிக் காண்போம்.

மணக்கால் நம்பி மாசி மாதம், மக
நக்ஷத்திரத்தில், ஸ்ரீரங்கத்துக்கு
அருகிலே அமைந்துள்ள மணக்கால்
என்னும் சிறிய கிராமத்திலே
அவதரித்தவர். இவருடைய இயற்
பெயர் ராம மிஸ்ரர்.

அவதார ஸ்தலம்: மணக்கால் (ஸ்ரீரங்கம் அருகே காவிரி நதிக்கரையில் இருக்கும் கிராமம்)

ஆசார்யன்: உய்யக்கொண்டார்

சிஷ்யர்கள்: ஆளவந்தார், திருவரங்கப் பெருமாள் அரையர் (ஆளவந்தாருடைய திருக்குமாரர்), தெய்வதுக்கரசு நம்பி, பிள்ளை அரசு நம்பி, சிறு புள்ளூருடையார் பிள்ளை, திருமாலிருஞ்சோலை தாஸர், வங்கிபுரத்து ஆச்சி.

ஸ்ரீராமமிஸ்ரர் மணக்கால் என்ற கிராமத்தில் அவதரித்தார். நமது ஸம்ப்ரதாயத்தில் இவருக்கு மணக்கால் நம்பி என்ற திருநாமமே மிகவும் ப்ரஸித்தியாக உள்ளது.

மணக்கால் நம்பி அவருடைய ஆசார்யரான உய்யக்கொண்டாருடன் வாழ்ந்து, அவருக்கு 12 வருடம் கைங்கர்யம் செய்தார். அந்த சமயத்தில் உய்யக்கொண்டருடைய தர்ம பத்தினி பரமபதித்து விட்டார். அதனால் மணக்கால் நம்பி அவருடைய ஆசார்யன் திருமாளிகை மற்றும் அவருடய குழந்தைகளை நன்கு கவனித்து வந்தார்.

 ஒருமுறை அவருடைய ஆசார்யனுடைய திருக்குமாரத்திகள் காவேரியிலிருந்து திரும்பி வரும்பொழுது, வழியில் சேற்று நீர் ஒரு பெரிய குட்டை போல் இருக்க அதைக் கடக்க அவர்கள் தயங்கினார்கள். அப்பொழுது நம்பி சேற்றில் படுத்து, அவர் மேல் அந்த குழந்தைகளை நடக்க சொல்லி அந்த சேற்றை கடக்க வைத்தார்.

 இதை கேட்டவுடன் உய்யக்கொண்டார் மிகவும் மகிழ்ந்து அவருடைய திருவடித்தாமரைகளால், நம்பியினுடைய திருமுடியை அலங்கரித்தார். உடனே உய்யக்கொண்டர் நம்பிக்கு என்ன வேண்டும் என்று கேட்க, தன் ஆசார்யருக்கு கைங்கர்யம் பண்ணுவதே தனக்கு விருப்பம் என்று கூறினார்.

 இதைக் கேட்ட உய்யக்கொண்டார், தன் சிஷ்யனுடைய நடத்தையையும் / விருப்பத்தையும் கண்டு மிகவும் மகிழ்ந்து, உடனே மீண்டும் ஒரு முறை த்வ்ய மஹாமந்த்ரோபதேஸம் செய்தார் (தனது சிஷ்யர்களுடைய கைங்கர்யத்தைக் கண்டு மிகவும் மகிழ்ந்தால், அவர்களுக்கு த்வய மஹாமந்த்ரோபதேஸம் பண்ணுவது என்பது நமது பூர்வாசாரியர்களுடைய பழக்கமாக இருந்தது).

உய்யக்கொண்டார் பரமபதிக்கும் பொழுது, மணக்கால் நம்பியை தர்ஸன ப்ரவர்தகராக நியமித்து, ஈஸ்வர முனியினுடைய திருக்குமரரை நமது ஸம்ப்ரதாயத்தின் அடுத்த தலைவராக நியமிக்குமாறு கட்டளையிட்டார். ஈஸ்வர முனி யமுனைத்துறைவரை பெற்று எடுக்க, நம்பி அவருக்கு பஞ்ச ஸம்ஸ்காரத்தில் முதன்மையான தாப ஸம்ஸ்காரம் செய்து வைக்கிறார் (அந்த காலத்தில் நாமகரணம் பண்ணும்பொழுதே (11ஆம் நாள்) ஸங்கு சக்ர லாஞ்சனம் செய்வது ஒரு பழக்கமாக இருந்திருக்கிறது. 

சிஷ்யர்களும் திருமந்திரார்த்த உபதேசம் மற்றும் திருவாராதனத்தை அதற்கான வயது முதிர்ச்சி வரும்பொழுது கற்றுக்கொள்வார்கள்).
யமுனைத்துறைவர் (பிற்காலத்தில் ஆளவந்தார்) மிகவும் அறிவுத்திறம் வாய்ந்தவராக இருந்தார். அவர் ராஜாவாக இருந்தமையால் (இதைப் பற்றி அவருடைய வைபவத்தில் காண்போம்) தனது உண்மை நிலையை (நமது ஸம்ப்ரதயத்தை) மறந்து ராஜ்ய நிர்வாகத்திலேயே இருந்தார். மணக்கால் நம்பி, ஆளவந்தாரை சந்திக்கச் செல்லும்பொழுதெல்லாம் காவலர்கள் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை.

மணக்கால் நம்பி ஆளவந்தரை திருத்த வேண்டும் என்று நினைத்து, அவர் தினமும் தூதுவளைக் கீரையை அரண்மணையில் உள்ள திருமடப்பள்ளியில் கைங்கர்யம் செய்பவரிடம் கொடுத்து வந்தார். ஆளவந்தாருக்கு அது மிகவும் பிடித்திருந்தது. நம்பி திடீரென்று ஒரு நாள் கீரை கொடுப்பதை நிறுத்திவிட்டார்.

 ஆளவந்தர் கைங்கரயபரர்களிடம் ஏன் கீரை இல்லை என்று கேட்க, ஒரு வயதான ஸ்ரீவைஷ்ணவர் தினமும் கொடுத்து வந்தார், இப்பொழுது அவர் கொடுப்பதை நிறுத்திவிட்டார் என்று கூறினார்கள். பிறகு மணக்கால் நம்பியை அழைத்து வந்து, ஆளவந்தார் அவருக்கு ஒரு இருக்கையை கொடுத்து ஏதேனும் செல்வம் வேண்டுமா என்று கேட்டார்.

 அதற்கு மணக்கால் நம்பி “நாதமுனிகள் கொடுத்த உண்மையான செல்வம் (ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ) என்னிடம் உள்ளது, அதை கொடுக்கத்தான் வந்தோம்” என்று கூறினார். இதைக் கேட்ட ஆளவந்தார், அவரது காவலர்களிடம் நம்பி எப்பொழுது வந்தாலும் உள்ளே அனுப்புமாறு கூறினார்.

மணக்கால் நம்பி பகவத்கீதையினுடைய அனைத்து விசேஷ அர்த்தங்களையும் ஆளவந்தாருக்கு கற்றுக்கொடுத்தார். அதை கேட்டதும் ஆளவந்தார் கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலைமைக்கு மாறினார். ஆளவந்தார் பகவத் சரமஸ்லோகார்த்ததை பெறுவதற்கு கீதையின் ஸாரமான பொருளை விளக்குமாறு கேட்க நம்பி சரமஸ்லோகார்த்தத்தை அவருக்கு விரிவாக உபதேசித்தார். 

பிறகு ஆளவந்தரை திருவரங்கத்திற்கு அழைத்துச் சென்று பெரிய பெருமாளை ஸேவிக்க வைத்தார். பெரிய பெருமாளுடைய அழகைக் கண்டு மெய்மறந்து, ஆளவந்தார் உலகப் பற்று அனைத்தையும் விட்டார்.
இதன்மூலம் மணக்கால் நம்பி நாதமுனிகளுடைய ஆசையை நிறைவேற்றினார்.

காலம் செல்லச் செல்ல இவரின்
திருமேனியும் தளர்வடைந்து
போக, நாதமுனிகள் இவருடைய
ஸ்வப்னத்தில் தோன்றி, தான்
மணக்கால் நம்பியிடம் அளித்து, பின்
இவரிடம் அளிக்கப் பெற்ற
' பவிஷ்யாதாசார்யரின்"
விக்ரஹத்தை ஆளவந்தாரிடம்
ஒப்படைக்கச் சொன்னார்.

மேலும் அவரை ஸ்ரீ ராமாநுஜரின்
அவதாரத்தை எதிர் நோக்கி, அவரை
நேரில் கண்டு, ஸ்ரீ வைஷ்ணவ
தர்மத்தை அவர் மூலம் வளர்க்க
ஏற்பாடு செய்யும்படியும் உரைத்தார்.
பின்னர் மணக்கால் நம்பி,
ஆளவந்தாரிடம் தான் ஸ்வப்னத்தில்
கேட்ட விஷயத்தை சொல்லி,
கோயிலை நன்றாக பேணிக் காத்து,
தீர்க்காயுசுடன் இருப்பாய் என்று
ஆசிர்வதித்தார்.

 எப்பொழுதும் நாதமுனிகளை தியாநித்துக்கொண்டு ஆளவந்தாரை நமது தரிஶனத்தைப் பாதுகாத்து பரப்புமாறு கட்டளை இட்டார். அத்தோடு ஆளவந்தாரை அடுத்த தர்ஶன ப்ரவர்த்தகரைத் தேர்ந்தெடுத்து நியமிக்குமாறு கட்டளையிட்டார். இதை நினைத்துக்கொண்டு மிகவும் ஸந்தோஷமாக பரமபதம் சென்றார். ஆளவந்தார் எம்பெருமானாரை கடாக்ஷித்து அடுத்த தர்ஶனப்ரவர்த்தகராக நியமித்தார்.

தம் ஆச்சார்யர் உய்யக் கொண்டார்
அவர்களின் திருவடிகளை த்யானித்து
பரமபதம் அடைந்தார்.

மணக்கால் நம்பியினுடைய தனியன்:

அயத்நதோ யாமுநம் ஆத்ம தாஸம் அலர்க்க பத்ரார்ப்பண நிஷ்க்ரயேண
ய: க்ரீதவான் ஆஸ்தித யௌவராஜ்யம் நமாமிதம் ராமமேய ஸத்வம்

*#மணக்கால்_நம்பியினுடைய_வாழி_திருநாமம்*:

தேசமுய்யக் கொண்டவர் தாள் சென்னிவைப்போன் வாழியே
தென்னரங்கர் சீரருளைச் சேர்ந்திருப்போன் வாழியே
தாசரதி திருநாமம் தழைக்கவந்தோன் வாழியே
தமிழ் நாதமுனியுகப்பைத் தாபித்தான் வாழியே
நேசமுடனாரியனை நியமித்தான் வாழியே
நீள் நிலத்தில் பதின்மர் கலை நிறுத்தினான் வாழியே
மாசிமகம் தனில் விளங்க வந்துதித்தான் வாழியே
மால்மணக்கால் நம்பி பதம் வையகத்தில் வாழியே

ஶ்ரீ மணக்கால் நம்பி திருவடிகளே சரணம்