ஆன்மீக ரீதியல் மட்டுமல்ல அறிவியல் பூர்வமாகவும் விளக்கேற்றவது நல்லது. தீபாவளி பண்டிகை குளிர் காலத்தில் கொண்டாடப்படுகிறது. அப்போது காற்றில் நுண்ணிய பாக்டீரியாக்கள் பரவியிருக்கும். இதனால் நோய்த்தொற்று ஏற்பட ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. இதனைத் தவிர்க்க, வீடுகள் தோறும் விளக்கினை ஏற்றி வைத்தால் சின்ன சின்ன பூச்சிகள் மற்றும் பாக்டீரியாக்கள் அழிந்திடும். இதனால் மக்கள் ஆரோக்கியத்துடன் வாழ முடியும் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.
அனைத்து மக்களாலும் சிறப்பாக கொண்டாடப்படக்கூடிய மிக முக்கிய பண்டிகை தீபாவளி திருநாள். ஒரே மாதிரியாக கொண்டாடப்படும் சில பண்டிகைகள் நாட்டில் பல்வேறு இடங்களில், அந்த பகுதிக்கு ஏற்ப பல பெயர்களில் கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் இந்த தீபாவளி பண்டிகை மட்டும் இந்த ஒரே பெயரில் கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை திதியில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அமாவாசை அன்று தான் தீபாவளி வரும். ஆனால் ஒரு சில வருடங்கள் அமாவாசைக்கு முதல் நாளே தீபாவளி வரும்.

தீபாவளி என்றால் தீபங்களின் வரிசை என்று அர்த்தம். வாஸ்து சாஸ்திரப் படி, தீபாவளி தினத்தன்று பசு நெய் விட்டு விளக்கேற்றுவது என்பது மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்களை அகற்றுவதாக கருதப்படுகிறது. விளக்குகள் நம்முடைய ஆன்மாவைக் குறிப்பதாக ஒரு நம்பிக்கை.

தீபங்கள் ஏற்றுவதன் மூலம் வீட்டிலும் நம் மனதினலும் உள்ள எதிர்மறை விஷயங்களை அகற்றி, நேர்மறை எண்ணங்கள், நல்லவை வீட்டுக்குள்ளும் மனதுக்குள்ளும் நுழையும் என்பது ஐதீகம்.

இருளை போக்க தீபம்

தீபாவளி பண்டிகையை அமாவாசை நாளில் கொண்டாடுகிறோம். அதனால் இரவின் இருளைப் போக்கவும், ஒளியை அளிக்கவும் விளக்குகள் ஏற்றப்படுகின்றன. இன்றைய நாளில் லட்சுமி, குபேர பூஜை செய்து வழிபடுவது வழக்கம். அதுமட்டுமல்லாமல் நாம் நம்முடைய வீட்டுக்குள் நேர்மறை சிந்தனையை வரவேற்க விளக்கேற்றும் முறைகளும் சில கவனிக்க வேண்டிய விஷயங்களும் உள்ளன.

விளக்கேற்ற தகுந்த இடங்கள்:

1. முதல் விளக்கை வீட்டின் பூஜை அறையில் ஏற்ற வேண்டும்.

2.துளசி செடி பெருமாளுக்கு உகந்ததாகும். அதில் மகா லட்சுமி வாசம் செய்கிறார். எனவே, அடுத்தது துளசி செடி உள்ள இடத்தில், துளசி மாடத்தில் விளக்கேற்ற வேண்டும். அடுக்குமாடி குடியிருப்பில் துளசி செடி வளர்க்க வாய்ப்பு இல்லை என்று உள்ளவர்கள் சமையல் அறையில் விளக்கேற்றலாம்.

3. செல்வம், வளத்தை வரவேற்க விளக்கை வடகிழக்கு பார்த்தபடி வைக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்க கிழக்கு பக்கம் பார்த்தபடியும் விளக்கேற்றலாம்.

4. வீட்டு தண்ணீர் தொட்டி அருகில் விளக்கேற்ற வேண்டும். இது வீட்டில் உள்ள எதிர்மறை எண்ணங்கள், விஷயங்களை அகற்றி, நலம், வளத்தை அதிகரிக்கச் செய்யும்.

5. இந்திய பாரம்பரியத்தில் விளக்கேற்றும் நேரம் மிக முக்கியமானதாகும். வீட்டில் விளக்கேற்றி ஒளி வீடு முழுவதும் பரவினால்தான் மகாலட்சுமி வீட்டுக்குள் நுழைவாள் என்பது நம்பிக்கை. எனவே, கடமைக்கு விளக்கு வைத்துவிட்டு அனைத்துவிட வேண்டாம். குறைந்தது பூஜை அறையில் பற்ற வைத்த நெருப்பாவது இரவு முழுவதும் எரியும் வகையில் வைக்க வேண்டும்.

6. பாசிடிவ் வைப்ரேஷன் கிடைக்க பித்தளை அல்லது மண் விளக்குகளை வைக்க வேண்டும். நேர்மறை ஆற்றலை வீட்டுக்குள் ஈர்க்கும் ஆற்றல் பித்தளை விளக்குகளுக்கு உண்டு. தெய்வீகத் தன்மையை ஈர்க்கும் ஆற்றல் மண் விளக்குகளுக்கு உண்டு.

7. விளக்கேற்றும் எண்ணெய், நல்லெண்ணய்க்கு பதில் பசு நெய் வைத்து விளக்கேற்ற வேண்டும். பசு நெய் ஊற்றி ஏற்றப்படும் விளக்குகள் வீட்டுக்குள் மகிழ்ச்சியை கொண்டு வரும். நெய் விளக்கு ஏற்ற முடியாவிட்டால் நல்லெண்ணெய், கடுகு எண்ணெய்யில் விளக்கு ஏற்றலாம்.