எம்பெருமானார் ராமானுஜர் ஆற்றில் குளிக்கச் செல்லும் போது நடப்பதற்கு சிரமமாக இருந்ததால், பிராமண சீடர்களின் தோளில் கை போட்டுக் கொண்டு நடந்து செல்வார். ஆனால், குளித்து விட்டு கோயிலுக்குப் போகும் போது மறந்தும் அவர்கள் தோளில் கை போட்டுக் கொண்டு நடக்க மாட்டார். தாழ்த்தப்பட்ட குலத்தைச் சேர்ந்த தனக்கு பிடித்தமான உறங்கா வில்லியின் தோளில் கை போட்ட படியே மகிழ்ச்சியோடு நடந்து செல்வார். ராமானுஜரின் இந்தச் செயல் அந்தணச் சீடர்களுக்குப் பிடிக்கவில்லை.

ஒரு நாள் வேண்டுமென்றே ராமானுஜர் குளித்து விட்டு வரும் சமயம் உறங்காவில்லியை சூழ்ச்சி செய்து வர விடாமல் அவர்கள் தடுத்து விட்டனர். அதை எம்பெருமானார் தெரிந்து கொண்டார். பிராமண சீடர்கள் ஓடிப் போய் ராமாநுஜருக்குத் தோள் கொடுத்தனர். ராமாநுஜர் தனது மேல் துண்டை, தண்ணீரில் நனைத்து ஈரமாக்கி சீடர்களின் தோள் மேல் போட்டு அதன் மீது கை வைத்து நடந்தார். ‘ஈரத்துணியை ஏன் எங்கள் மேல் போட்டீர்கள்? என்று அவர்கள் கேட்டதும், “ உங்களைத் தொட்ட தீட்டு வராமல் இருக்கத்தான் இப்படிச் செய்தேன்” என்றார்.
“தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த உறங்காவில்லியைத் தொட்டால் தீட்டு இல்லை. உயர்ந்த ஜாதியில் பிறந்த எங்களைத் தொட்டால் தீட்டு வருமா?” என்று குமுறினர்.

அதற்கு அவர் “உயர்ந்த ஜாதி என்கிற அகம்பாவம் உங்களுக்கு இருக்கிறது. உங்களைத் தொட்டால் அது எனக்கு வந்துவிடும். உறங்காவில்லிக்கு அந்த அகங்காரம் இல்லை. அடக்கமும் பண்பும் அவனிடம் உள்ளது. அவனைத் தொட்டால் எனக்கு அந்த அடக்கம் வரும் அல்லவா? என்று முகத்திலடித்தாற் போல் கூறி விட்டு நடந்து சென்றார். இறைவனுக்கு முன்னால் அனைத்து உயிர்களும் சமம் மனிதரில் சாதி மதம் என்று கிடையாது என்று அன்றைக்கே கூறியவர். 

இத்தனைத் துணிச்சலுடனான செயலை அவர் 1000 ஆண்டுகளுக்கு முன்பே செய்திருக்கிறார் என்பதால் தான் அவர் எம்பெருமானார் என அழைக்கப் படுகிறார். சாதி பேதமெல்லாம் கேவலமான மனிதர்களால் உருவாக்கப்பட்டது. 

ஆனால் இறைவனுக்கு இவ்வுலக உயிர்களிடத்தில் எவ்வித பேதமும் கிடையாது. ஆகையால் ஆதியும் அந்தமுமில்லாத இறைவனை வணங்க அனைவருக்கும் உரிமையுண்டு என்பதை அன்றே வலியுறுத்தியவர்
எம் பெருமானார் இராமானுஜர்.