16 ''மா மாயன் மணிவண்ணன்''

இன்று விடியற்காலையில் சில பசுக்களும் கன்றுகளும் கூட அல்லவா ஆண்டாளுடனும் அவள் தோழிகளுடனும் சேர்ந்து நடக்கின்றன .

யமுனைக்கு சில்லென்று வீசும் இனிய குளிர் காற்றில் தன் சினேகிதிகளோடு ஆண்டாள் பேசிக்கொண்டே போகின்றாள், மற்ற பெண்களையும் எழுப்பி நீராட. வைக்க.

இன்று மார்கழி 16 நாள் ஆகிவிட்டதே. . இதுவரை விடாது அந்த பெண்கள் அன்றாடம் யமுனையில் நீராடி விரதமிருந்து,உள்ளும் புறமும் தூய்மையோடு கிருஷ்ணனையும் நாராயணனையும் அருள் வேண்டும் இச் சிறுமிகள் இப்போது யமுனையில் நீராடி நோன்பிருந்து விட்டு வீடு நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள்.

'ஆண்டாள், இப்போ எங்கேடி போகிறோம்?''

'நந்தகோபன் அரண்மனை போன்ற வீட்டுக்கு.

'' இன்று என்ன விசேஷம்.?

''என் கூட வாருங்கள், தானாகவே தெரியும்.''

இந்த பதினைந்து நாட்களாக எல்லோர் வீட்டிலேயும் சென்று பெண்களை துயில் எழுப்பிய ஆண்டாள் இன்று காலை யார் வீட்டுக்கு சென்றாள் தெரியுமா?

ஆயர்பாடியில் கண்ணன் வசிக்கும் அவன் தகப்பன் நந்தகோபன் அரண்மனைக்கே. எளிதில் உள்ளே போக முடியுமா? வாசலில் நந்தகோபனின் வாயில் காவலாளி கொடிய கூர்மையான வேல் போன்ற ஆயுதங்களோடு காவல் காத்துக்கொண்டிருக்கிறான்.

யாரும் உள்ளே நெருங்க முடியாது. ''கண்ணனை''க் ''கண்'' போல் பாதுகாக்கிறான் நந்தகோபன். ஏன்? நாளொரு அரக்கனும் பொழுதொரு ஆபத்தும் தான் அந்தச் சிறுவனைக் கொல்ல கம்சனால் எந்த நேரமும் அணுகுகிறதே அதனால் தான்.

''சிறுமிகளா, யார் நீங்கள் எல்லாம் ? அதுவும் இந்த வேளையிலே? இந்நேரத்தில் இங்கு என்ன வேலை உங்களுக்கு?''.

''அய்யா, வாயில் காப்போனே, இந்த உயர்ந்த மணிகள் பொருத்திய உங்களது பெரிய கோட்டை மணிக்கதவை திறவுங்கள். எங்களை உள்ளே விடுங்கள்'' என்கிறாள் ஆண்டாள்

'' சிறு பெண்களா முதலில் கேட்டதற்கு பதில் சொல்லுங்கள், யார் நீங்கள், எதற்கு உள்ளே போகவேண்டும்?''

''இந்த தெய்வீக மார்கழி மாதத்தில் விடியலில் நீராடி பாவை நோன்பு நூற்று எங்கள் தெய்வத்தை அந்த கிருஷ்ணனை தரிசிப்பதுடன் அவனைத் துயில் எழுப்பவும் வந்துள்ளோம். உள்ளே இருக்கும் உங்கள் தலைவன், எங்கள் மனம் நிறைந்த அந்த கண்ணன் நேற்று எங்களை இங்கே வரச்சொல்லி அனுமதி கொடுத்ததால் அல்லவா அவனை தரிசனம் செய்து அருள் ஆசி பெற வந்துள்ளோம். இது அவன் நேரம். நாங்கள் உள்ளே சென்று அவன் ஆயிர நாமங்களை சொல்லி அவனை துயிலெழுப்ப விழைகிறோம். எங்களைக் குறுக்கிடாது தயவு செய்து கதவை மட்டும் திறவுங்களேன்?''

''விசாரிக்காமல் நான் யாரையும் உள்ளே விடமுடியாது.''

''நாங்களோ சிறு பெண்கள் எங்களால் என்ன துன்பம் உங்களுக்கோ,அந்த மாயக் கண்ணனுக்கோ நேரும்?"

''சூர்பனகை, பூதகி ஆகியோரும் பெண் தானே?'' என சிரித்தான் காவலாளி.

''அவர்கள் வெளியே இருந்து இங்கே வந்தவர்கள். நாங்கள் இதே ஊரில் கிருஷ்ணனுடன் பிறந்து வளர்ந்தவர்கள். கோப குடும்பப்பெண்கள். மேலும் நாங்கள் கொல்ல வந்தவர்கள் இல்லை. எங்கள் மனத்தை அவன் வெல்ல வந்தவர்கள். புரிகிறதா?''

''இங்கேயே சற்று இருங்கள். பொறுங்கள். நான் கிருஷ்ணனிடம் சென்று அனுமதி தருகிறானா என்று கேட்டுத்தான் உங்களை உள்ளே விடமுடியும்'' என்ற காவலாளி உள்ளே சென்றான். அவர்கள் அங்கேயே பாடிக்கொண்டு நின்றார்கள்.

உள்ளே சென்று வந்த அந்த காவலாளி அந்தப் பெண்களை உள்ளே விட்டான். ஆண்டாள் எதையும் சாதிப்பவளாச்சே.

ஆண்டாளும் ஆயர்பாடிச் சிறுமிகளும் கண்ணனின் அரண்மனையில் உள்ளே போகும் அதே நேரம் தான் வில்லிப்புத்தூரில் ஆஸ்ரமத்தின் தட்டி வாயிற் கதவைத் திறந்து வெளியே சென்று அழகிய பெரிய கோலம் போட்டுக்கொண்டிருந்த கோதை ஆஸ்ரமத்தில் நுழைந்தாள்.

அவள் எதிரே அந்த அழகிய அரங்கனின் உருவச்சிலை அவளையே புன்னகையுடன் பார்த்துக்கொண்டி ருக்க அன்று எழுதிய பாசுரத்தை மனதிலிருந்து வாய்க்கு நகர்த்தி இனிமையான குரலில் அன்று இயற்றிய பாசுரத்தைப் பாடினாள். மேலே கண்ட காட்சி அவள் செய்த அற்புதக் கற்பனையாக, தீஞ்சுவைத் தமிழில் ஈடில்லா பாசுரமாக, பக்தி சொட்ட வெளிப் பட்டது.

'நாயக னாய் நின்ற நந்தகோபனுடைய கோயில் காப்பானே. கொடி தோன்றும் தோரண
வாயில் காப்பானே. மணிக் கதவம் தாள் திறவாய்
ஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை
மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா. நீ
நேய நிலைக் கதவம் நீக்கேலோர் எம்பாவாய்''

''அம்மா, கோதை, நீ இந்த 16 நாட்களாக என்னை வைகுண்டத்தில் ஆழ்த்தி விட்டாய் தாயே. நீ சாதாரண கவிதையாக சொல்லலங்காரமாக இதை இயற்ற வில்லை. ஒரு தத்துவத்தையே புகட்டி விட்டாய்.''

''அப்படி என்னப்பா எழுதினேன் ?'' சிரித்தாள் கோதை.

''சொல்கிறேன் கேள்: முதல் 15 நாட்களாக ஆண்டாளும் சிறுமிகளும் யாரை வேண்டி நோன்பிருந்தார்களோ', அவனை , ஏன் 16வது நாளன்று பார்க்க நேரிட்டது?'' -- விஷ்ணு சித்தர் கேட்டார்..

''தெரியவில்லையே அப்பா? நீங்களே சொல்லுங்களேன்?''

''கிருஷ்ணனை வேண்டித் தானே இந்த மார்கழி முப்பது நாளும் அவர்கள் நோன்பிருந்தார்கள். பாதி மாதம் (15 நாள்) ஆகிவிட்டதே. மீதியை அவர்கள் அவனைத் தேடி போகவேண்டாம். பக்தன் பாதி வழி கிருஷ்ணனை நோக்கி நடந்தால் மீதி வழியை கிருஷ்ணனே நடந்து வந்து அவனை எதிர்கொள்ளுவான் என்று சொல்லாமல் சொல்லிவிட்டாய் அம்மா. எனக்கு இப்படித்தான் படுகிறது ''என்றார் ஆழ்வார்.

எவ்வளவு ஆழமான அர்த்தம் பார்த்தீர்களா!