மார்கழி 2ம் நாள் 
'பையத்துயின்ற பரமன்'

வில்லிபுத்தூரில் நந்தவன ஆஸ்ரமத்தில் அந்த காரிருள் சூழ்ந்த அதிகாலை நேரத்தில் ஒரு தீபம் சுடர் விட்டு எரிகிறது. ஒரே அந்தகாரம். வழக்கமாக உலவும் நாய்களோ, மற்ற விலங்குகளோ கூட எங்கோ குளிருக்கு ஒண்டி க்கொண்டிருக்கிறதோ?.

அந்த விளக்கில் நிறைய எண்ணெய் வழிய வழிய வார்த்து தடிமனான திரி அதில் ஊறி எரிந்து தன்னால் முடிந்தவரை பிரகாசத்தை தந்து கொண்டிருந்தது.

இழுத்துப் போர்த்திக் கொண்டு தலையை மட்டும் வெளியே நீட்டியவாறு, இருமல்களுக்கிடையே விஷ்ணு சித்தர் குரல் கேட்டது.

''எப்போ பொழுது விடியும்னு காத்திண்டிருக்கேன் கொழந்தே. இன்னிக்கு என்ன பாசுரம் எழுதியிருக்கே. படி. கேக்கறேன். ''

''இதோ முடிச்சுட்டேன் பா'' வீணையை பழிக்கும் குரலில் கோதை ஆதுரமாக பதில் சொன்னாள் .

 சுடர் விளக்கை தூண்டி விட்டு கடைசி வார்த்தையை ஓலையில் திருத்தி எழுதிவிட்டு தனக்குள் மனதில் ஒரு தடவை பாடிப் பார்த்துக்கொண்டே கோதை படிக்கிறாள் தனது கையில் உள்ள ஓலைச்சுவடியை.

அவள் குனிந்து விளக்கிற்கு அருகே அமர்ந்து எழுதிக்கொண்டிருக்கும் போது, தனது அழகிய தெய்வ மகளின் நிழல் தீபத்தின் ஒளியில், சுவற்றில் விழுகிறதை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார் அப்பா விஷ்ணுசித்தர். .

கோதையின் வீணையை நிகர்த்த கர்ணாம்ருதமான குரல் அந்த ஆஸ்ரமத்தின் அமைதியை கிழித்துக்கொண்டு புறப்பட்டது.கோதை மார்கழி ரெண்டாம் நாள் தான் இயற்றிய பாசுரத்தை கணீரென்று அப்பாவுக்கு பாடிக்கட்டுகிறாளா , அரங்கா உன்னைப்பற்றி என்ன எழுதினேன் என்று நீயும் கேள் என்று உரக்க சொல்கிறாளா?

''வையத்து வாழ்வீர்காள் நாமும்நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரம னடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்முடியோம்
செய்யா தனசெய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமாற் எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்''

கோதை பாடி முடித்தாள். ஒரு அமிர்த மழை -- அமிர்த வர்ஷிணி - அங்கே இத்தனை நேரம் ஆனந்தத்தை அளித்துக் கொண்டி ருந்ததே. அதற்குள் ஒரு யுகமா ஆகிவிட்டது?  

''ஹா ஹா'' தலையை அசைத்து விஷ்ணு சித்தர் புளகாங்கிதம் அடைந்தார்.

'இன்னொருதரம் பாடும்மா. கேட்டு தலையசைத்து புளகாங்கிதத்தோடு 'ரங்கநாதா'' என்று சாஷ்டாங்கமாக பெருமாளுக்கு நமஸ்காரம் பண்ணுகிறார் விஷ்ணு சித்தர்.

கோதை மீண்டும் தான் இயற்றிய பாசுரத்தை, திருப்பாவையை ரெண்டாம் முறை பாடுகிறாள்.தந்தையை பார்க்கும் பார்வையில் ''அப்பா எப்படி ??"" என்று கேள்வி தெரிகிறது.

''அம்மா தாயே, எவ்வளவு சுலபமாக ஒன்றுமறியாத குக்கிராமத்து இடைப்பெண்கள் புரிந்து கொள்ளும்படியாக எளிய வார்த்தையில் எப்படி காத்யாயனி விரதம் அனுஷ்டிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறாயே. எவ்வளவு நேர்த்தி! எவ்வளவு அழகு! . எப்படி உனக்கு ''ஆண்டாள்'' என்ற ஒரு ஆயர்குல சிறுமியை உண்டாக்கி அவள் மூலம் இதை சொல்லவேண்டும் என்று தோன்றியது?'' ''

பூரித்துப் போனார் விஷ்ணுசித்தர்.

இரண்டாவது பாசுரத்தில், பாவை நோன்பு விதிகளைபற்றி சொல்லுகிறாள் கோதை நாச்சியார்,

(இதையே பின்னால் 27வது பாசுரத்தில், இந்த பெண்களின் நோன்பை சிறந்த விதமாக முடித்தால் அதன் பயனாக‌, நல்ல ஆடை, அணிமணிகள் அணிந்து கொள்வோம், நெய் மற்றும் அதோடு கலந்து நிறைய பால் சாதம் உண்ணுவோம். அதாவது எவற்றை எல்லாம் நோன்புக்காகத் விட்டுக் கொடுத்தோமோ அதையெல்லாம் மீண்டும் கைக்கொள்வோம் என்கிறாள் ஸ்ரீ கோதை நாச்சியார்).

நோன்பு நோற்கும்போது பக்தி ,நம்பிக்கை மட்டுமே கலந்து, அழகு சாதனங்கள், நல்ல அலங்காரங்கள்,ருசியான உணவு வகைகளைத் தொடாமல் மனதில் உறுதியோடு 'செய்யாதன செய்யோம், தீக்குறளைச் சென்றோதோம்' அதாவது, விரத காலத்தில், செய்யக்கூடாதவற்றைச் செய்ய மாட்டோம்,தீமையானவற்றை, அதாவது, பொய் சொல்லுதல், புறங்கூறுதல் முதலியவற்றைச் செய்யாது, நல்லன வற்றையே பேசுவோம் என்ற திட மனது தேவை'' என்று கோதை கூறுகிறாள்.

இது எவ்வாறு ஆயர்பாடியில் நடந்தது என்று பார்க்கவேண்டாமா?

"'இதென்னடி ஆண்டாள், புதுசா இத்தனை நாள் இல்லாமல் இப்போ "பாவை நோன்பு? நாமெல்லாம் இதை செய்ததே கிடையாதே. தெரியாதே'' என்கிறாள் ஒரு ஆயர்குலப் பெண்.

''நோன்பு என்கிறாயே, அதை எப்படி பண்ணுவது, எதற்காக என்று சொன்னால் புரிந்து கொண்டு ' சாஸ்திரம் என்ன சொல்கிறதோ அப்படியே " ஆசாரமாக செய்யலாம். ஆண்டாள் நீ தான் விவரமெல்லாம் தெரிந்தவள்.எங்களுக்கு விளக்கமாக சொல்லு? என்றனர் அந்த ஆயர் பாடி சிறுமிகள். எல்லோருமே விடிகாலையில் ஆண்டாளோடு சேர்ந்து கொண்டவர்கள்.
யமுனையில் நீராடி விரதமிருக்கும் சிறுமிகள். 

"கேளுங்கடி சொல்றேன், என்று அந்த துடுக்குப் பெண் ஆண்டாள் சொல்கிறாள்;

''பாற்கடலில் அந்த பெரிய நாராயணன் பாம்புமேலே படுத்துக்கொண்டு உலகத்தில் நம் எல்லோரையும் ரட்சிக்கிறான் என்று உங்களுக்கு சொல்லியிருக்கிறேனே .. நாம் செய்யும் பாவை நோன்பு அவனைப் பாடி போற்றி விரதமிருந்து நோன்பு நோற்பது எப்படி யென்றால், நாம் குளித்து தலையை ஈரம்போக துவட்டிவிட்டு, தலையை வாராமல் அள்ளி முடிந்து கொண்டு, மை, பவுடர் எல்லாம் போட்டுக்காமல், விரதம் இருக்கணும் .அப்போ பால், பழம்,தயிர், வெண்ணை இதெல்லாம் வயிற்றில் ரொப்ப கூடாது. உள்ளே மட்டும் இல்லை,வெளியேயும், பொய், பித்தலாட்டம், கோபம், ஆத்திரம் எல்லாம் யார் கிட்டயும் கூடாது.புரிகிறதா. எண்ணம் பூரா அவன் மேலேயே இருக்கணும். ''

"ஏண்டீ, நாம இதுக்கு இவ்வளவு கஷ்டப்படணுமா? என்றாள் ஒரு சிறுமி.

"எனக்கு தெரியலை, ஆண்டாளையே கேட்போம்'' என்றாள் இன்னொருவள் .

''சரி ஆண்டாள், அப்படியென்ன அந்த நாராயணன் பெரிய கடவுள், நீயே சொல்லேன்? என்றாள் மற்றொருவள். அதற்குள் அவர்கள் யமுனைக்கு நடந்து சென்று குளித்து விட்டு நாராயணன் மேல் பாடி வீடுதிரும்பினர்.

“என்னடி நான் கேட்டேன் நீ ஒன்றும் சொல்லவே இல்லை?

“நாளைக்கு காலம்பர உங்களுக்கு விவரமா சொல்றேன் நேரமாச்சு இப்போ. கன்னுக்குட்டி காத்திண்டிருக்கும் பசியாக. அதுக்கு பால் ஊட்டணும் முதல்லே. பசு மடி நிறைய பால் சேர்த்து வைத்துக் கொண்டு கறக்க காத்திருக்கும். இன்னும் சற்று நேரத்தில் குரல் கொடுக்க ஆரம்பித்து விடுமே. ' என்றாள் ஆண்டாள்.