ஸ்ரீமன் நாராயணனின் கல்யாண குணங்கள் எண்ணில் அடங்காதவை!
நம்முடைய கல்யாண குணங்களும் எண்ணில் அடங்காதவை!
ஸ்ரீமன் நாராயணனின் தோஷங்கள் எண்ணில் அடங்காதவை!
நம்முடைய தோஷங்களும் எண்ணில் அடங்காதவை!
மேலே குறிப்பிட்ட வாக்கியங்களை வாசித்தால், நாமும் ஸ்ரீமன் நாராயாணனும் ஒன்றோ அல்லது நாம் தான் ஸ்ரீமன் நாராயணனோ என்று நினைக்க தோன்றுவது நியாயமே.

சற்று ஆழ்ந்து யோசித்தால் அதற்கான அர்த்தம் இவ்வாறாக விரியும்.

பெருமானிடம் கல்யாண குணங்கள் எண்ண முடியாத அளவுக்கு அதிகமாக இருக்கிறது அதனால் எண்ணில் அடங்காதவை, நம்மிடமோ ஒன்று கூட இல்லை அதனால் எண்ண முடியாதவை, ஆகையால் எண்ணில் அடங்காதவை.

நம்மிடம் தோஷங்கள் எண்ண முடியாத அளவுக்கு அதிகமாக இருக்கிறது அதனால் எண்ணில் அடங்காதவை, பெருமானிடமோ ஒன்று கூட இல்லை அதனால் எண்ண முடியாதவை, ஆகையால் எண்ணில் அடங்காதவை.

சரி அப்படி என்ன கல்யாண குணங்கள் கொண்டிருக்கிறான் பெருமான், வாருங்கள் சிலவற்றை அறிவோம்.

பரத்துவம்:

பிரம்மனை போன்று எவ்வளவு மேன்மையானவரும் சரணாகதி அனுஷ்டிக்க தகுந்தவன், அனைத்துக்கும் மேன்மையானவன் நாராயணன், அனைத்துக்கும் இருப்பிடம், அனைத்திலும் இருப்பவன்.

ஸௌலப்யம்:

நம்மை போன்று அவ்வளவு சிறியவரும் அணுகி மோக்ஷத்தை யாசித்து பெற்று கொள்ள கூடிய அளவில் எளிமையாக நமக்காக மேலிருந்து கீழ் இறங்கி அவதரித்து நம்முடனே வாழ்ந்து காட்டி எங்கும் வியாபித்து அந்தர்யாமியாய் இருக்கிறான்.

சரணாகதி பண்ணுவதற்கும் மற்றும் மோக்ஷம் அளிக்கவல்லவன் அவன் ஒருவனே என்பதை உணர்த்துவதற்கும் அவன் கொண்டிருக்கிற இரு கல்யாண குணங்களே பரத்துவம் & ஸௌலப்யம்.

ஸ்வாதந்த்ரியம்:

மற்ற அனைத்து கல்யாண குணங்களை மறைத்து நம்முடைய புண்ணிய பாவங்களை ஆராய்ந்து அதனால் கோபமுற்று மோக்ஷத்தை அளிக்கா தன்மையை ஏற்படுத்தும் செருக்கு இந்த குணம். 

ஆனால் கலி யுகத்துக்கு இந்த கூற்று பொருந்தாது என்பதே அடியேனின் கூற்று.

கலி யுகத்தில் அவருக்கு கோபமோ செருக்கோ இருக்காது என்பது அடியேனின் கூற்று அல்ல, கண்டிப்பாக இருக்கும் இன்னும் அதிகமாவே இருக்கக்கூடும். ஆனால் காரணம் ஒருவனுமே மோக்ஷம் கேட்டு தன்னிடம் வரவில்லையே என்று தான் இருக்கும், ஒரு ஜீவனாவது வந்தால் தானே புண்ணிய பாவத்தை ஆராய்ந்து கோபப்படுவதற்கு.

ஒரு வேளை ஏதாவது ஓர் ஜீவன் சரணடைந்து இந்த குணம் கொண்டு பெருமான் மோக்ஷம் தராவிட்டால் அந்த ஜீவன் என்ன செய்வது அல்லது என்ன செய்ய முடியும், கவலையே வேண்டாம் ஸ்ரீதேவி தாயார் அந்த ஜீவனுக்காக மன்றாடி பெற்று தந்து விடுவாள்.

ஆகையால் தான் ஸ்ரீ உடன் சேர்த்தே ஸ்ரீமன் நாராயணன் என்று நம் சம்பிரதாயத்தில் போற்றப்படுகிறது. ரஹஸ்ய த்ரயத்தில் ஸ்ரீ யுடன் கூடிய த்வயத்துக்கே மதிப்பு மற்ற இரண்டை காட்டிலும்.

வாத்ஸல்யம்:

நம்முடைய குற்றத்தை கண்டு தண்டிக்காமல் அதையே குணமாக ஏற்று கொண்டு ரக்ஷிப்பதே இந்த குணம். இக்குணம் ஆச்சர்யகரமானது, நம்மை போன்ற அடியார் மனத்தை ஈர்ப்பது. இந்த குணம் பெருமானிடம் இல்லையென்றால் நாம் யாராவது அவனிடம் நெருங்குவோமா?

ஸ்வாமித்துவம்:

சொத்தை உடையவன் ஸ்வாமி. இந்த மொத்த உபய விபூதிக்கும் ஸ்வாமி அவன் ஒருவனே. நாம் என்ன காரியத்தோடு அவன் முன் நின்றாலும் நடத்தி குடுக்க கூடிய சக்தி கொண்ட வல்லமையே இந்த குணம்.

ஸௌசீல்யம்:

பெருமான் தனது மேன்மை பாராமல் மற்றும் நமது சிறுமை பாராமல் நம்மூடம் கலப்பதே இந்த குணம். எனவே அவனது மேன்மை கண்டு அகல வேண்டிய தேவை நமக்கு இல்லை.

ஸர்வக்ஞன்:

சகல ஞானமும் கொண்டவன் என்பதை குறிக்கும் குணம் இது.

ஸர்வசக்தன்:

நினைத்தபடி எதையும் செய்து நிறைவேற்றவல்லவன். நம்மை நொடிப்பொழுதில் வைகுண்டத்தில் சேர்க்க கூடிய குணம் இது.

ப்ராப்த்தி:

நம் மீது முழு உரிமை கொண்டவன் பெருமான் ஒருவனே. அவன் ப்ராப்தன் நாமெல்லாம் அவனுக்கு ப்ராப்த்தி.

பூர்த்தி:

அவன் பூர்ணன். முழுவதும் நிறையே ஒரு குறையும் இல்லாத குணம் இது. நம்மிடம் அவன் எதிர்பார்த்து ஒன்றும் இல்லை.

அகல கில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறைமார்பா

நிகரில் புகைழாய் உலகமூன்று உடையாய் என்னை ஆள்வானே 

நிகரில் அமரர் முனிகணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே 

புகழ் ஒன்றில்ல அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே