விதுரர் திருதராஷ்டிரனுக்கு தொடர்ந்து உபதேசம் செய்கிறார். பஞ்ச லோகங்களையும் ஆளும் வல்லமை கொண்ட பஞ்ச பாண்டவர்களுக்கு ராஜ்யத்தை பிரித்துக் கொடுத்துவிடு திருதராஷ்டிரா என்று கூறுகிறார்.  ஆனால் அவனோ ராஜ்யத்தை பிரித்துக் கொடுப்பதாக இல்லை. எனவே தனது உபதேசத்தை மேற்கொண்டு தொடர்கிறார். கீழ் கண்ட எட்டும் வெண்ணை சாப்பிட்டது போன்ற சந்தோஷத்தை கொடுப்பவை என்று கூறுகிறார். 

1.நல்லோர்களின் நட்பு - நாம் எப்போதும் நல்லோர்களிடம் நட்பு வைத்திருக்க வேண்டும். நமக்கு அதனால் நன்மைகள் பல கிடைத்துக் கொண்டே இருக்கும். மேலும் அது நமக்கு இன்பத்தை கொடுத்துக் கொண்டே இருக்கும். நம்மை அவர்கள் நன்றாக வழி நடத்துவர். இதுவே நமது நட்பு கெட்டவர்களிடம் இருந்தால் அது நமக்கு தீமையும் அதனால் நமக்கு துன்பத்தையுமே கொடுக்கும்.

2. நிறைய பண வரவு -  பண வரவு வந்தால் அது சந்தோஷத்தை கொடுக்கும்.  அதற்காக நாம் பணத்தை சம்பாதிப்பதே நமது நோக்கம் என்று கொள்ளக் கூடாது.

3. பிள்ளையை அனைத்துக் கொள்ளுதல். - நமது பிள்ளையை அனைத்துக் கொள்ளும் ஒவ்வொரு க்ஷணமும்  நமக்கு சந்தோஷத்தை கொடுக்கும். அப்போது நமது கவலைகள் நமக்குத்  தெரியாது.

4. கருத்தொருமித்த இல்லறம் - இது அமைவது கடினம். நல்ல இல்லறம் அமைந்து விட்டால்  அது நமக்கு எப்போதும் சந்தோஷத்தை கொடுத்துக் கொண்டே இருக்கும். ஒருவர் செய்யும் செயல் மற்றொருவருக்கு தொல்லையாக இருக்காது.

5. கஷ்டமான நேரத்தில் கேட்கப்பட்ட நல்வார்த்தை. - நமக்கு எதாவது கஷ்டம் வந்து விட்டால் அந்த நேரத்தில் நமக்கு ஆறுதலாக சொல்லும் நல் வார்த்தைகள் துன்பத்தை நீக்கி சந்தோஷத்தைக் கொடுக்கும்.  அது போன்று நமக்கு ஆறுதல் சொல்ல நினைக்கும் நண்பர்களோ உறவினர்களோ வேண்டும்.

6. தன்னுடன் கூட உள்ளவர்களின் நடுவில் பெருமையாக வாழுதல். - நமக்கு நல்ல உத்தியோகம் கிடைத்து அதுவும் சொந்த ஊரில் கிடைத்து விட்டால் அது நமக்கு ஆனந்தத்தைக் கொடுத்துக் கொண்டு இருக்கும். அதுவே நம்மை யாரும் தெரியாத ஒரு ஊரில் பெரிய உத்தியோகத்தில் இருந்தால் நமக்கு பணம் கிடைக்குமே ஒழிய பெருமை கிடைக்காது.

7. நாம் நினைத்தது நடந்தால் - நினைத்தது நடக்கும் போது அது வெண்ணை சாப்பிட்டது  போன்ற சந்தோஷத்தைக் கொடுக்கும்.

8. நம்மை சுத்தி உள்ள மக்களிடையே பூஜிக்க தகுந்தவர்களாக வாழ்வது - நமது தொழில், செயல் பிறருக்கு நன்மை தருவதாக இருந்தால் அதனால் மக்கள் நம்மை பூஜித்துக் கொண்டு இருப்பார்கள். அது நமக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும்.

இவ்வாறு அந்த காலத்திலேயே எக்காலத்துக்கும்  பொருந்தக் கூடிய விஷயங்களை அழகாக எடுத்துரைத்தார். மேற்கொண்டு ஒன்பது பற்றி என்ன தெரிவித்தார் என்று அடுத்த அத்தியாயத்தில் காண்போம்.