மஹா பாரதத்தில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அரிய பல விஷயங்கள் உள்ளன.  ராமாயணம் மற்றும் மஹா பாரதத்தை நாம் இரண்டு இதிகாசங்களாக ஏற்றுக் கொண்டுள்ளோம்.  

ஆத்மாவிர்க்கு நன்மை பயப்பதாய் சத் விஷயங்களை காட்டி கொடுப்பதாக மஹா பாரதம் விளங்குகிறது. அது பெரியதாக இருப்பதாலும் உயர்ந்ததாக இருப்பதாலும் தான் அது மகா பாரதம் என்று அழைக்கப் படுகிறது.  இதை தினமும் ஒரு சிறு பகுதியாவது நாம் படித்தால் நமக்கு நன்மைகள் பல கிட்டும்.  நாம் நமது பிறவிப்  பயனைப் பெற்று பிரம்மத்தை அடைவோம் என்பது நிச்சயம்.

விதுரர் தொடர்ந்து  செய்த போதனைகளை மேற்கொண்டு பார்ப்போம்.

நமது உடம்பை  ஒன்பது துவாரங்கள் (இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு மூக்குகள் , வாய் மல ஜல துவாரங்கள்)  கொண்ட பட்டினம் ஆக தெரிந்து கொள்ளவேண்டும்.   இது ரஜோ  தமோ மற்றும் சத்துவ குணம் அல்லது வாதம், பித்தம், கபம் போன்ற மூன்று தூண்களால் கட்டப் பட்டது ஆகும். 

இந்த மூன்று தூண்களை வைத்து ஐந்து புலன்களை சாட்சியாக வைத்து நல்ல விலை நிலமாக கொண்டு   இதில் நல்ல பயிர்களை (குணங்களை) வளர்ப்பவனே சிறந்த ஆத்மா.  உடம்பு விளைநிலம், ஆத்மாதான் உழவன். இதில் நல்ல பயிரை விளைவிப்பவனே நல்ல உழவன்.  இதில் நல்ல பயிரை வளர்த்தால் தான் லாபம். இதில் கெட்ட குணம் போன்ற கள்ளி செடியை வளர்த்து என்ன லாபம்? 

எனவே இதில் நல்ல குணங்களை வளர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.  மேற்கொண்டு என்ன உபதேசித்தார் என்று அடுத்த அத்தியாத்தில் காண்போம்.