27 கூடாரை வெல்லும் கோவிந்தா

இந்த தீஞ்சொல் பாசுரத்தின் முதலடியே பண்டிகையாகி விட்டது. 'கூடாரை வெல்லி'' கரைந்து தேய்ந்து கூடார வல்லி ஆகிவிட்டது திரு அல்லிக்கேணி ''ட்ரிப்ளிகேன்'' ஆனமாதிரி.

''கோதையே, நீ என் பெண்ணல்ல. என்னை உய்விக்க வந்த அந்த மகாலட்சுமி தாயார் தான் என்பதில் எள்ளளளவும் எனக்கு சந்தேகமில்லை என்று பூரிக்கிறார் விஷ்ணுசித்தர்.

இதையே எதிரொலிக்கிறார் சுவாமி தேசிகன் கோதா ஸ்துதியில்.''துளியும் எனக்கும் கூட சந்தேகமில்லை பெரியாழ்வார் ஆன விஷ்ணுசித்தர் சொன்னது வாஸ்தவம் தான் என்று பறை சாற்றுகிறார் கோதா ஸ்துதியில் சுவாமி வேதாந்த தேசிகன். இதோ அந்த ஸ்லோகம்:

''ஸ்ரீவிஷ்ணுசித்த குலநந்தந கல்பவல்லீம்

ஸ்ரீ ரங்கராஜ ஹரிசந்தன யோக த்ருச்யாம்!

ஸாக்ஷாத் க்ஷமாம் கருணயா கமலாமிவாந்யாம்

கோதாமநந்யசரண: சரணம் ப்ரபத்யே!!

''கோதையே, நீ ஸ்ரீ விஷ்ணுசித்தருடைய குலத்தில் பெண்ணாக வந்தவள் , கேட்பதை அனைத்தும் வாரித் தரும் கற்பகக் கொடி. அரங்கன் இருக்கிறானே அவன் ஒரு சந்தன மரம். நீ அவனைச் சுற்றிப் படர்ந்திருக்கின்ற கற்பகக் கொடி. பூமிதேவியே கோதையாக அவதரித்தாளோ அல்லது ஸ்ரீலக்ஷ்மியே கோதையாக வடிவெடுத்தாளோ, யாராக இருந்தால் என்ன. வேறு புகலற்ற நான், கோதை நாச்சியாரைச் சரணடைகிறேன் .(கோதா ஸ்துதி, ஸ்வாமி ஸ்ரீ தேசிகர்).

ஆண்டாள் என்று ஒவ்வொரு பெருமாள் கோவில் சந்நிதியிலும் பெருமாளோடு தரிசனம் தருபவள் கோதை தான். சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என்று பெயர் வாங்கியவள். பூமாதேவியின் அவதாரம்.கலியுகத்தில், பக்தர்களை உய்விக்க வேண்டி, எம்பெருமானின் கட்டளையை ஏற்று, ஸ்ரீவில்லிப்புத்தூரில், விஷ்ணு சித்தரின் (பிற்காலத்தில் பெரியாழ்வார்) திருமகளாக, துளசி வனத்தில் தோன்றியவள் கோதை. சகல வேதங்களையும் பிழிந்து வடிகட்டினால் கிடைக்கும் சாரம் தான் திருப்பாவை. வேதத்தின் வித்து. 

மார்கழி 27ம் நாள் நம் எதிரே தோன்றுவது இந்த இருபத்தாறு நாட்களாக கண்டு மகிழும் நீண்ட அழகிய கண்ணைக்கவரும் யமுனை ஆறு. இதோ கேட்கிறதே ஆண்டாளின் குரல் இந்த விடியற்காலையில். அவள் பாடும் அற்புதப் பாடல் நம் காதில் தேனாகப் பாய்கிறது. உண்மையில் ''தேன்'' என்பது பொருத்தமே. இன்று இனிய சுவையான அக்கார அடிசில் பற்றியல்லவோ ஆண்டாள் பாடுகிறாள்.

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா! உன் தன்னைப்

பாடிப்பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்

நாடு புகழும் பரிசினால் நன்றாக

சூடகமே தோள் வளையே தோடே செவிப்பூவே

பாடகமே யென்றனைய பல்கலனும் யாமணிவோம்

ஆடையுடுப்போம் அதன் பின்னே பாற்சோறு

மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்

கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.

ஆண்டாள் இப்போது இடைச்சிறுமியா? அல்லது பழுத்த ஞானியா? என்று சந்தேகிக்கும் அளவிற்கு அவள் கண்ணனுடன் கலந்து விட்டாள். இந்தத் ''திருப்பாவை'' யில் கண்ணன் ஆண்டாளின் ''கைப்பாவை'' ஆகிவிட்டதல்லவோ அதிசயம்! என்னமாய் அவள் கண்ணனிடம் பேசுகிறாள் பாருங்களேன்.

''கண்ணா! உன் புகழ் பாடி நோன்பு நோற்று அது நிறைவேறும் நிலையில், உன்னிடம் வேண்டுவன எல்லாம் கேட்டு அவற்றைப் பெற்று, நோன்பின் பயன் அடைந்தோமே, இந்த சிறுமிகளுக்கு நீ தக்க சன்மானம் தர வேண்டுமல்லவா? முதலில் இந்த ஆயர்குல சிறுமிகள் நோன்பு முடியும் இந்த தருணத்தில் அவர்கள் நல்ல புத்தாடைகள் உடுத்தி, கை, கால், கழுத்து நிறைய நகைகள் அணிந்து (அந்த கால நகைகள் பெயர்கள் தோள்வளை, செவிப்பூ -- நெக்லஸ் வராத காலம்) மலர்கள் சூட்டிக்கொண்டு இனிப்பான கம கம வென மணக்கும் நெய் , பால்,சர்க்கரை கலந்து உனக்கு ''நெய்' வேத்யம் கொண்டு வந்திருக்கிறார்களே, வாசனை மூக்கைத் துளைக்க வில்லையா உனக்கு ?

உடனே வந்து அக்கார அடிசில் கை நிறைய எடுத்துக் கொள். இதை உண்ணும்போது உன் கையிலிருந்து முழங்கை வழியாக நெய் கீழ் நோக்கி ஓடி வழிய வழிய ருசித்து உண்ண நீயும் எங்களோடு வா, கண்ணா, வா ! எங்களுடன் நீயும் மகிழ்சசியோடு உண்ண வாயேன் !! நாம் எல்லோரும் கூடி இருந்து மனம் குளிர களிப்போமே.'' நீ நல்லவர்களோடு (இருக்கக் ) கூடாதவர்களை, ''வென்று'' அவர்களையும் திருந்தக் ''கூடிய'' வர்களாகப் பண்ணுபவனாச்சே . எங்களோடு ''கூடி'' உண்ண வா'' என்று அழைக்கிறாள் கோதை வில்லிப்புத்தூரில் ஆண்டாள் என்கிற இடைச்சிறுமியாக கற்பனை உருவெடுத்து!.

ஆண்டாளின் இந்த 27 வது பாசுரம் மிக அருமையான ஒன்று. கோதை ஆண்டாளாக சொல்கிற ஒவ்வொரு சொல்லும் நெய், பால் சர்க்கரை பொங்கலைப் போன்று இனிக்க வல்லது என்பதில் ஏதேனும் ஐயம் உண்டோ?

இதுவரை நாம் ரசித்த, ருசித்த, திருப்பாவையின் ஒவ்வொரு பாசுரமும், பாவை நோன்பு நோற்க வேண்டுகின்ற தோழியரே, காத்யாயனி விரதத்தில் பங்கு கொள்ள வாருங்களேன். இன்னுமா தூக்கம்? என்று மற்ற பெண்களை ஆண்டாள் தூக்கத்திலிருந்து எழுப்புவது போன்று அமைகிறது. ஆஹா, என்னே இந்த விந்தை. நம்மை அஞ்ஞான இருளில், தாமச குணத்திலிருந்து மீட்டு உயர் சத்வ குணம் அடைய, உள்ளும் புறமும் தூய்மை பெற, ''யமுனை நதி நீராட்டலை'' உதாரணமாக காட்டி ''நோன்பு நோற்பது'' என்கிற ஏகாக்ர விடா முயற்சியில் ஈடுபட்டு அந்த பரமனை அடையச் செய்து, அவன் அருளாகிய '' அக்கார அடிசிலை'' அவனுடனேயே ''கூடி 'மனம் குளிர்ந்து '' இனிமையாக அனுபவிக்கும் சுகானுபவத்தை அல்லவோ போதிக்கிறது அந்த சிறுமியின் பாசுரம். கோதை வாக்கு உபநிஷத் தான் என்பதில் இன்னுமா சந்தேகம்?