''கனாக்கண்டேன் தோழி நான்''

சிலருக்கு  கனவில்   எப்போதும் திருடன் வீட்டுக்குள் வருவது போல், யாரோ துரத்துவதால் துண்டைக்
காணோம் துணியைக் காணோம் என்று ஓடுவது போல், போலீஸ்காரனிடம் பிடிபடுவதுபோல், பஸ்ஸிலிருந்து விழுவதுபோல், மனைவியை கோபித்துக் கொள்வது போல், (இது கனவில் தான் சாத்தியம்)  காட்சிகள் வரும்.  தூக்கத்தில் வாய்  உளறும் .

ஆண்டாள்  அப்படி இல்லை. நாளெல்லாம் வாயினிக்க அந்த கண்ணனைப் போற்றிப் பாடினாலும் இரவு தூங்கும் போதும்  அந்த அழகிய சிறுமிக்கு  இடைவிடாத கனவில்   கண்ணனே அவளை கல்யாணம் பண்ணிக்கொள்ள வந்தான்.  வாருங்கள்.  ஆண்டாள்  தன் தோழிகளிடம் மறுநாள் அதை பற்றி விவரமாக சொல்வதை நாமும் "உம் " கொட்டிக் 
 கொண்டே “அப்புறம், அப்புறம்" என்று கேட்போம்:

'' நிறைய யானைக் கூட்டம்.   நடுவில் ஜம் என்று அந்த அழகன் வருகிறான். எங்கே பார்த்தாலும் தென்னை,பாக்கு மர இலை, மாவிலைத் தோரணம். வேதியர் கூட்டம் மந்திர கோஷத்துடன் பூரண கும்பத்தோடு வரவேற்க காத்திருக்கிறார்கள்.  பிரம்மாண்டமான பெரிய பந்தல், வாழை,பாக்கு போன்ற மரங்கள் அங்கங்கு கட்டப்பட்டு. குறையொன்று மில்லாத அந்த கோவிந்தன்  தனக்கே உரித்தான பீதாம்பர பட்டாடை உடுத்தி முக மலர்ச்சியோடு இதோ பந்தலில் நுழைகிறான். 

கல்யாணத்துக்கு நாள் பார்த்து எல்லா ஏற்பாடுகளும்  செய்தாகிவிட்டதே.  ''என்னை அவனுக்கு பெண் பார்க்க யாரெல்லாம் வந்தார்கள் தெரியுமா? இந்திரன்,வருணன்,அக்னி, வாயு போன்ற தேவர்கள் கூட்டமே வந்து அவனுக்காக என்னைப் பெண் கேட்டார்களே உங்களுக்குத்  தெரியாதா? மறந்து விட்டதா? இதோ,எனக்கு மந்திரங்கள் சொல்லி ஆசிர்வாதத்தோடு புது கூறைப் புடவை கூட கட்டியாச்சு.  தூக்க முடியாத கனமான இந்த மாலையைக் கூட என் கழுத்திலே போட்டாச்சு. 

அப்பப்பா! எத்தனை வேத கோஷ பிராமணர்கள், எங்கெங்கோ புண்ய  நதிகளின்  தீர்த்தம் கொண்டு வந்து ப்ரோக்ஷணம் செய்து, மங்கல நாண் அதில் தோய்த்து என் கையில் காப்பு கூட அந்த மாயாவி கட்டியாச்சே! கல்யாணத்துக்கு சதிர் ஆட பெரிய பெரிய நாட்டியக்காரிகள் வந்தாச்சு.  வரிசை வரிசையாக   எல்லோர் கையிலும் தீபங்கள் எவ்வளவு அழகாக மின்னுகிறது? 

 கல்யாண ஏற்பாடுகள் ஒழுங்காக நடக்கிறதா என்று யார் மேற்பார்வை தெரியுமா?.வேறு யார்?. இந்த மதுரை ஊருக்கு ராஜாவான பாண்டியன் தான்.

முகூர்த்த நேரம்  நெருங்கியாச்சு.  நாதசுரம், தவில், மங்கள வாத்யங்கள், சங்கு எல்லாம் முழங்கும் போது, இதோ இந்த முத்துப் பந்தலில் என்னருகில் வந்து என் கையை தானே எடுத்துப்  பிடித்து அந்த கிருஷ்ணன் என்னைக் கைப்பற்றிவிட்டான். ''மாங்கல்யம் தந்துனானேனா.''.....மந்திரம்  காதில் கேட்கிறதா?.

மந்திர கோஷங்கள் வானைப் பிளக்க அந்த கோவிந்தன் என் காலைப் பற்றினான். அம்மி மிதித்தேன். அருந்ததி பார்த்தேன். என் கையை அவன் பற்றிக்கொண்டு என்னை அணைத்து வர நானும் அவனும் அக்னி வலம் வந்தோம்.     என் கனவை ஒரே வார்த்தையில் சொல்லவேண்டுமானால் தோழியரே, நான் அவன் மனைவியானேன்.    எனது “கண் அவன்” கணவன் ஆனான்”

ஆண்டாள் கனவைச் சொல்லி முடித்ததும்   தோழிகள் ஆண்டாளை கேட்டனர்.

'' உனக்கு நிஜமாக எப்போ டீ அந்த கிருஷ்ணனோடு கல்யாணம்?''
ஆண்டாள் கனவு கண்டாளே அது நிறைவேறியதா? கனவு நிறைவேறுமா?. ஓ ஆகுமே! மாசம் பூரா விரத மிருந்து ஆண்டாள் வேண்டிக்கொண்டது நிறைவேறியது. கனவுகாட்சியாகியது. போகியன்று சில இடங் களில், தை முதல் நாள் அன்று என்றெல்லாம் ஆண்டாள் திருக்கல்யாணம் ஊரெல்லாம் காலா காலமாக நடைபெறுகிறதே .  

கல்யாணம் முடிந்து இனி பெண் வீட்டுக்குப்போகவேண்டும் தயாராகுங்கள்.