மஹா பாரதத்தில் நமக்கு வேண்டிய பல விஷயங்கள் கூறப் பட்டுள்ளன. உறங்காமல் தவிக்கும் திருதராஷ்டிரனுக்கு சொல்லும் உபதேசமாக விதுரர் நீதி உரைக்கப்பட்டுள்ளது. அடுத்து விதுரர் தொடர்ந்து நான்கு நான்காக கீழ் வருமாறு அழகாக எடுத்துரைக்கிறார்.

1. இந்த நான்கு பேரிடமும் சேரக் கூடாது.
சிறுமதி படைத்தவன், எந்த ஒரு காரியத்தையும் இழுத்து முடிப்பவன், எந்த ஒரு காரியத்தையும் பதட்டமாக அவசரமாக தவறாக செய்பவன் மற்றும் வேலையே செய்யாமல் வெறும் பேச்சு பேசியே காலத்தை தள்ளுபவன்.

2. இந்த நான்கு பேரை வீட்டில் வைத்துக் கொண்டால் மிகவும் நன்மை கிட்டும்.

நமது குலத்தை சேர்ந்த வயோதிக பங்காளி - இவர் நமது குல தர்மத்தை எடுத்து சொல்லிக்கொண்டே இருப்பார். தொடர்ந்து நாம் செய்யவேண்டியதை நமக்கு ஞாபகப் படுத்திக் கொண்டே இருப்பார்.

உயர்ந்த குலத்தில் இருந்து இப்போது வறிய நிலையில் இருப்பவர். குல தர்மங்கள் பற்றியும் வாழ்க்கைக்கு நல்லது செய்யவேண்டியது பற்றியும் நமக்கு ஞாபக படுத்திக் கொண்டே இருப்பார்.

நண்பன் ஆனல் தற்போது மிகவும் வறிய நிலையில் இருப்பவன். இவன் நமக்கு நன்மைகளையே எடுத்து சொல்லிக் கொண்டே இருப்பன்.

கூடப் பிறந்த குழந்தை இல்லாத சகோதரி - இவள் நமது சொத்தை பத்திரமாக பார்த்துக் கொள்ளுவாள்.

3. இந்த நான்கும் உடனடியாக பலத்தை தரும்.
தேவதையின் சங்கல்பம், மகானின் திறமை, மெத்த படித்தவர்களின் பணிவு, பாபிகளின் அழிவு (தர்மத்தை நிலை நிறுத்தும்)

4. இந்த நான்கு ஒரே செயல்கள் செய்யும் நோக்கத்தில் இரண்டு விதமான பலன் தரும்.

அக்னி காரியம் (ஹிந்து தர்மத்தில் எந்த ஒரு காரியத்தை செய்யும் பொது அக்னி முன்பே செய்ய வேண்டும்) - செய்யவேண்டியதை அந்த கடமைக்கு செய்தால் நல்லது கிட்டும். பெருமைக்கு செய்தால் பாபமே வரும்.

மௌனம் - வைராக்கியத்துடன் இருந்தால் நல்லது நடக்கும். ஆனால் சொல்லவேண்டியதை சொல்லாமல் அல்லது வேண்டும் என்றே பேசாமல் இருந்தால் கெடுதலே நடக்கும்.

கல்வி - ஆசையுடன் கற்றல் நல்லது. அதையே சான்றிதழுக்காக படித்தால் அனர்த்தத்தில் முடியும்.

யாக யக்யங்கள். ஆச்சார அனுஷ்டதில் செய்தால் நல்ல பலன் கிட்டும். இல்லையேல் கெடுதலே நடக்கும்.

இவ்வாறு நாம் பின்பற்ற வேண்டிய தரும நீதிகளை நான்கு நான்காக எடுத்துரைக்கிறார். அடுத்து ஐந்து ஐந்தாக சொன்னதை மேற்கொண்டு அடுத்து அத்தியாயத்தில் பார்ப்போம்.