நமக்குத் தெரிஞ்ச ஒரு ஆசாமி, சரியான எடக்குமடக்குப் பேர் வழி. நாலு தெரு தள்ளி, ஒரு பூங்கா; அங்கேதான் நம்ம எடக்குமடக்கு தினமும் வாக்கிங் போவது வழக்கம்.

பூங்காவுக்கு அருகிலேயே, ஒரு ஆலயம் ஒன்று பாழடைந்து கிடந்தது. விளக்கு ஏற்றக்கூட யாரும் வருவதில்லை. கோவில் குருக்கள் ஒருத்தர், தினமும் கொஞ்சம் நேரம் கோயிலைத் திறந்து வைப்பார். எடக்குமடக்கின் மனைவி, ”பூங்காவைச் சுத்தும்போது, அப்படியே அந்தக் கோயிலையும்தான் ரெண்டு சுத்து சுத்திட்டு வாங்களேன்” என்பாள். உடனே எடக்கு மடக்கு, ”அந்த கடவுளுக்கு பவரே கிடையாது. பவர் இருந்தால், தன் கோயிலைப் பாழடைய விட்டிருப்பாரா?” என்று மடக்குவார்.

ஒருநாள் காலையில்… வழக்கமாக பெரிய டம்ளரில் காபி எடுத்து வரும் எ-ம மனைவி, மிகச் சிறிய டம்ளரைக் கொண்டு வந்தாள். ”ஏன்… ஸ்பூன்ல கொண்டு வரது தானே?!” என்று எரிச்சலானார் எடக்கு.
”இது காபி இல்லை; நல்லெண்ணெய். வாய்ல புண்ணுன்னு சொன்னீங்களே… அதான்!
நல்லெண்ணெயை அரை மணி நேரம் வாயிலே வெச்சிருந்து, பிறகு கொப் பளிச்சா, வாய் புண் குணமாகும்னு பத்திரிகையில படிச்சேன். நீங்க வாக்கிங் போகும் போது வாயில நல்லெண்ணெயை ஊத்திக்குங்க. வீட்டுக்கு வந்ததும் கொப்பளிச்சிடுங்க” என்று புரோகிராம் போட்டுக் கொடுத்தாள் மனைவி.

ஆனால், சோதனையாக, எடக்கு வாயில் எண்ணெயை ஊற்றிக்கொண்டு தெருவில் இறங்கிய ஐந்தாவது நிமிஷம், அவருடைய ஆபீசர் எதிரே வந்தார். ”அடடே! உன் வீட்டுக்குத்தான் வர்றேன்!” என்று ஸ்கூட்டரை நிறுத்தினார். வேறு வழியில்லாமல், எண்ணெயைத் துப்பிவிட்டு அவரிடம் பேசினார் எடக்கு. வீட்டுக்குப் போனதும், நடந்ததை மனைவியிடம் சொன்னார்.
அவள் விடுவாளா! மறுநாள், எக்ஸ்ட்ராவாக ஒரு சின்ன எவர் சில்வர் தூக்கில் எண்ணெய் ஊற்றித் தந்தாள். ”வாக்கிங் போகும்போது துப்பும்படி ஆயிட்டா, இதை வாயில் ஊத்திக்குங்க” என்றாள்.

தினமும் அவர் இப்படி எவர்சில்வர் தூக்கோடு நடந்து போவதை, அடுத்த தெருவில் உள்ள ஒரு பெண்மணி கவனித்துவிட்டு, ”தினமும் எண்ணெய் கொண்டு போறீங்களே, கோயிலுக்கா?” என்று கேட்டாள்.
அவளிடம், தான் எண்ணெயை வாயில் ஊற்றிக் கொப்பளிப்பதை யெல்லாம் விளக்க விரும்பாமல், ‘ஆமாம்’ என்று தலையாட்டி வைத்தார் நம்மாள்.
மறுநாள்… அந்தப் பெண்மணியின் கையில் ஒரு சொம்பு எண் ணெய். ”தயவுசெஞ்சு இதையும் சேர்த்துக்கங்க” என்று எண்ணெயை அவரது எவர்சில்வர் தூக்கில் ஊற்றினாள். இதே போலவே அடுத் தடுத்த நாளில் நிறையப் பேர் காத்திருந்து, எடக்குமடக்கின் தூக்கில் தங்கள் பங்காகக் கொஞ்சம் எண்ணெய் ஊற்றினார்கள்.

கோயிலுக்கு எண்ணெய் ஊற்றுவதை வேண்டாம் என்று சொல்ல மனமின்றி, அவரும் தட்டாமல் வாங்கிக் கோயிலுக்கு அந்த எண்ணெயைக் கொடுத்து வந்தார்.
நிறைய எண்ணெய் கிடைத்ததால், தினமும் கோயிலில் ஏராளமாக விளக்கேற்றி வைத்தார் குருக்கள். அதிகப்படியான எண்ணெயை விற்றுப் பிரசாதம் செய்து, வருபவர்களுக்கு விநியோகித்தார்.

பூங்கா கோயில் மாலை வேளையில் தீப ஒளியில் பிரகாச ஆரம்பித்துகாணிக்கைகள் ஏராளமாக வந்தன. கொஞ்ச நாளில் கோயில் புதுப்பிக்கப்பட்டுப் கும்பாபிஷேகமே நடந்தது.

எடக்குமடக்குவிடம் அவர் மனைவி சொன்னாள்… ”அந்த கடவுளுக்கு பவர் இல்லை; தன் கோயிலையே அவரால் கட்டிக்க முடி யலே’னு சொன்னீங்களே… இப்ப பார்த்தீங்களா, உங்களைக்கொண்டே அதை நிறைவேத்திக்கிட்டார்

எதை, எப்படி, எப்போது யாருக்குச் செய்ய வேண்டும் என்பதை தெய்வத்துக்கு நாம் சொல்லித்தர வேண்டியதில்லை. தனக்கே என் றாலும், அதற்குத் தெரியும். எனென்றால் அனைத்து உலகத்தும் தந்தை அவர்தானே