அரங்கமா நகருள்ளானே...

அரங்கனைக் காண முடியாமல் குலசேகரர் தவிக்கிறார்! அரங்கனோ, அவரிடம் கருணை காண்பிக்க மறுக்கிறான்! கருணை காட்ட மறுக்கும் அரங்கனை விட்டு, மற்ற தெய்வங்களைப் பற்றும் சாமானியர்களைப் போல் அல்லாது, 'நீ என்னை எவ்வளவு சோதித்தாலும், வெறுத்து ஒதுக்கினாலும், அது நல்லதற்கே என்று நினைத்து, மீண்டும் மீண்டும் உன் திருவடிக்கே வருவேன்' என்று, திருவித்துவக் கோட்டு எம்பெருமானான உய்ய வந்த பெருமாளைப் பார்த்துச் சொல்கின்றார் குலசேகரர்:

வித்துவக் கோட்டு அம்மானே! கோபத்தால், தனது சிறு குழந்தையை வெறுத்துத் தள்ளினாலும், மீண்டும் தாயிடமே வந்து சேரும் குழந்தையைப் போல், உன்னிடமே மீண்டும் வருவேன் (தந்தை-தனயன் உறவு)!

என் கண்ணா! கணவன், எல்லோரும் வெறுக்கத் தக்க செயல்களைச் செய்தாலும், அவனைத் தவிர வேறு ஆண்மகனை ஏறெடுத்தும் பார்க்காத பதிவிரதையைப் போல், உன்னிடமே மீண்டும் வருவேன் (நாயகன்-நாயகி உறவு)!

அபய வரதா! அரசன் எத்தனை துயரம் செய்தாலும், அவன் நல்லது செய்வான் என்று காத்திருக்கும் (இந்தக் கால வழக்கப்படி, மீண்டும் ஓட்டுப் போடும்) குடிமகனைப் போல், உன்னிடமே மீண்டும் வருவேன் (உடல்-உயிர் உறவு - 'மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்' - புறநானூறு)!

மருத்துவனாய் நின்ற மாமணி வண்ணா! மருத்துவர், கத்தியால் எவ்வளவு அறுத்தாலும் (சட்டை Pocket-ஐ எவ்வளவு சுரண்டினாலும்) மீண்டும் அவரிடமே செல்லும் நோயாளி போல், உன்னிடமே மீண்டும் வருவேன் (காப்பாறுபவன்-காப்பாற்றப் படும் பொருள் உறவு)!

புட்கொடியானே! கடலில் செல்லும் கப்பலின் கூம்பு மேல் உள்ள பறவை, எல்லா இடங்களிலும் அலைந்து திரிந்து, கரையைக் காண முடியாமல், மீண்டும் அந்தக் கூம்பு மேல் வந்து உட்காருவது போல், உன்னிடமே மீண்டும் வருவேன் (தாங்குபவன்-தாங்கப்படும் பொருள் உறவு)!

தாமரைக் கண்ணா! சூரிய கிரணங்கள் எவ்வளவு எரித்தாலும், சந்திரனுக்கு மலராது, சூரியனுக்கு மட்டுமே மலரும் தாமரையைப் போல் உனக்காகவே காத்திருப்பேன் (ஆண்டான்-அடிமை உறவு)!

மழைக் கண்ணா! எவ்வளவு தான் மழை பெய்யாமல் இருந்தாலும், மழை மேகத்தையே எதிர்பார்த்துக் காத்திருக்கும் பயிர்கள் போல, உன்னையே எதிர்பார்த்துக் காத்திருப்பேன் (அறிபவன்-அறியப்படும் பொருள் உறவு)!

கடல் வண்ணா! ஆறுகள் எவ்வளவு வளைந்து, பாய்ந்து, நீண்டு ஓடினாலும், கடைசியில் கடலிடம் வந்து சேர்வது போல், உன்னிடமே வந்து சேர்வேன் (சொத்துக்கு உரியவன்-சொத்து உறவு)!

திருமகள் கேள்வா! செல்வம் வேண்டாம் என்று வெறுத்து ஒதுக்குபவனிடம், அந்தச் செல்வமே தானாக வந்து சேர்வது போல், உன்னையே அடைய விரும்புவேன் (போகத்தை அனுபவிப்பவன்-போகப் பொருள் உறவு)!

எனக்கும், இந்த உலகத்தில் உள்ள வேறு எந்தப் பொருளுக்கும், ஒன்றோ, அல்லது, சில உறவுகளோ இருக்கலாம்! ஆனால், எனக்கு, உன்னிடத்தில் மட்டும் தான் இந்த 9 உறவுகள் அனைத்தும் ஒரு சேர இருக்கின்றன! எனவே, உன்னிடமே மீண்டும் மீண்டும் வருவேன்