மகாபாரத்தில் கங்கை மைந்தன் பீஷ்மரை அறியாதவர்கள் யாரும் இல்லை. அவர் தன் தந்தைக்காக செய்த தியாகத்தின் பலனாக பெறுதற்கரிய பேறு பெற்றார். அதாவது அவரே விரும்பாமல் அவரது உடலில் இருந்து உயிர் பிரியாது. யாரும் பெறாவரத்தை பெற்ற பீஷ்மர் இறுதியில் விதியின் சூழ்ச்சியால் கௌரவர்கள் பக்கம் போரிட நேர்ந்தது. அவரின் கர்ம வினைப்படி அனுபவிக்க வேண்டிய தண்டனைகளை அனுபவிக்க வைத்தது விதி. என்னதான் நல்லது செய்தாலும் நம்மை அறியாமல் அதர்மம் செய்து விட்டால் அதற்குரிய பலா பலன்களை அனுபவித்தே ஆக வேண்டும். பிறருக்கு நடக்கும் அநீதியை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாலும் பாவம் வந்து சேரும் என்பதை மிக அழகாக சுட்டி காட்டியுள்ளனர். அப்படி அவர் என்ன செய்தார்? துச்சாதனன் பாஞ்சாலியின் துகில் உரித்த போது துரியோதன அவையில் இருந்தவர்களில் பீஷ்மரும் ஒருவரே. கண்ணுக்கு முன்பு அநீதி இழைக்கபட்டதை பார்த்தும் தடுக்க வேண்டிய இடத்தில் இருந்து கொண்டு தடுக்காமல் வேடிக்கை பார்த்து பாவத்தை சேர்த்து கொண்டு விட்டார். இதன் பலனாக போரில் அம்புகளினால் வீழ்த்தபட்டார். தான் பெற்ற வரத்தினால் மோட்ச காலமான உத்தராயண காலத்தில் உயிர் துறக்க விரும்பி அம்பு படுக்கையில் காத்திருந்தார். அவரை சுற்றி கௌரவர்களும், பாண்டவர்களும் வணங்கி நின்றனர். அப்போது அவர் ஒரு அரசன் எவ்வாறு நடுநிலையில் நின்று நீதி வழங்க வேண்டும் என்பதை பற்றி இந்த உலகத்திற்கு எடுத்துரைத்தார்.

அரசன் அல்லது நீதி வழங்கக்கூடிய இடத்தில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் சரி தெரிந்தவர்-தெரியாதவர் என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் நியாயத்தின் பக்கம் நின்று தண்டிக்க வேண்டும் என்று போதித்தார். பின்னர் மஹா விஷ்ணுவை நினைந்து வேண்டினார். கிருஷ்ணர் தம் உண்மை ரூபத்தை தந்தருளினார். அப்போது பீஷ்மர் உரைத்ததே விஷ்ணு சஹஸ்ரநாமம் ஆகும்.

 உத்தராயண காலம் தொடங்கியும் அவர் நினைத்தபடி உயிர் பிரியாதது கண்டு வியந்து வருந்தி வியாச மகரிஷியிடம் வினவினார். அப்போது வியாசர் பீஷ்மர் செய்த பாவத்தை அவரிடம் எடுத்துரைத்தார். தன்னிலை உணர்ந்த பீஷ்மர் எனில் என் உடலை எரிக்க கூடிய சக்தியை சூரிய தேவரிடம் இருந்து பெற்று தருமாறு வியாசரிடம் வேண்டினார். வியாசர் சூரிய சக்திக்கு நிகரான எருக்கம் இலைகளால் பீஷ்மரை அலங்கரித்தார். இதனால் நிம்மதியடைந்து தியான நிலையில் மோட்சம் பெற்றார் பீஷ்மர்.

பீஷ்மர் பிரம்மச்சரியர் ஆதலால் அவருக்கு சிரார்த்தம் செய்ய சந்ததிகள் இல்லை. நேர்மை தவறாது ஒழுக்க நெறியில் பிரம்மச்சரியத்தை கொண்ட ஒருவருக்கு பிதுர்க்கடன் தேவையில்லை. பீஷ்மருக்காக இந்த நாடே தர்ப்பணம் செய்யும். அதனால் புண்ணியம் அடையும் என்று ஆசி வழங்கினார் வியாசர். பீஷ்மர் ரத சப்தமி திதி முடிந்த மறுநாளில் அஷ்டமி திதி அன்று உயிர் நீத்தார். எனவே அந்த அஷ்டமியை பீஷ்மாஷ்டமி என்று கூறப்படுகிறது. 
இந்நாளில் நாம் பீஷ்மருக்காகவும் நம் முன்னோர்களுக்காகவும் தர்ப்பணம் செய்தால் இப்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கி வாழ்வில் கட்டாயம் சுபீட்சம் பெறலாம் என்கிறது புராணங்கள்.

இதை யார் வேண்டுமானாலும் செய்யலாம். எளிதாக எப்படி செய்வது என்று பார்ப்போம். 

அன்றைய தினம் காலையில் நீராடி விட்டு, பித்தளை அல்லது செம்பு குவளையில் பால் கலந்த நீரை இடது கையில் எடுத்து கொள்ளவும். வலது கையில் அட்சதை, புஷ்பம், சந்தனம், குங்குமம் முதலியவற்றை வைத்து கொள்ளவும். கீழே தாம்பாளம் வைத்து அதில் கீழ்வரும் மந்திரத்தை உச்சரித்து இதமர்க்யம் என்று முடிக்கும் போது இடக்கையில் உள்ள நீரை வலக்கையில் இருந்து தம்பாளத்தில் விடவும். அவ்வளவு தான்.

வையாக்ரபாதி கோத்ராய ஸாங்க்ருதி ப்ரவராய ச
கங்காபுத்ராய பீஷ்மாய ஆஜன்ம ப்ரஹ்மசாரிணே
பீஷ்மாய நம: 

இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம் என்று சொல்லி நீர் விடவும்.

அபுத்ராய ஜலம் தத்மி நமோ பீஷ்மாய வர்மணே பீஷ்ம: 
சாந்தனவோ வீர: ஸத்யவாதீ ஜிதேந்த்ரிய:
ஆபி ரத்பி ரவாப்நோது புத்ரபௌத்ரோசிதாம் க்ரியாமி பீஷ்மாய நம: 

இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம் என்று சொல்லி நீர் விடவும்.

வஸூனா மவதாராய சந்தனோ ராத்மஜாய ச
அர்க்யம் ததாமி பீஷ்மாய, ஆபால ப்ரஹ்மசாரிணே பீஷ்மாய நம: 

இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம். என்று சொல்லி நீர் விடவும்.