பாவங்கள் போக்கி, நன்மைகள் அருளும் பெருமாளின் சயன திருக்கோலங்கள்,

1. ஜல சயனம்
2. தல சயனம்
3. புஜங்க சயனம் (சேஷசயனம்)
4. உத்தியோக சயனம் [உத்தான ]
5. வீர சயனம்
6. போக சயனம்
7. தர்ப்ப சயனம்
8. பத்ர சயனம் (பத்ர எனில் ஆலமரத்து இலை)
9. மாணிக்க சயனம்

பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் பரந்தாமன், தன் திரு உருவத்தைப் பூவுலக மாந்தர்கள் அனைவரும் தரிசிக்க வேண்டுமென்று திருவுள்ளம் கொண்டு, அர்ச்சா மூர்த்தியாகப் பூவுலகில் பல திவ்யதேசங்களில் எழுந்தருளியிருக்கிறார். அவற்றுள்ளும் பல தலங்களில் பாற்கடலைப்போலவே சயனக் கோலத்தில் காட்சிதருகிறார். உலக மக்களில், பெருமாளை வழிபடும் அன்பர்கள் அனைவரும் வாழ்க்கையின் நிறைவில் வைகுண்டத்திலிருக்கும் பரந்தாமனின் திருவடிகளை அடைய வேண்டுமென்றே விரும்புவார்கள். அதன் பொருட்டே பூவுலகின் 108 திவ்ய தேசங்களில் எழுந்தருளியிருக்கும் பெருமாந்த் தரிசித்து வழிபடுகிறார்கள். திவ்ய தேசங்களில் பெருமாள் ஸ்தாபனா (நின்ற திருக்கோலம்) ; அஸ்தாபனா (அமர்ந்த கோலம்); ஸமஸ்தாபனா (படுத்திருக்கும் கோலம்); பரஸ்தாபனா (வாகனத்தில் எழுந்தருளியிருக்கும் கோலம்) போன்ற பல்வேறு சயனத் திருக்கோலங்கள் மூலம் காட்சிதருகிறார். `108 திவ்ய தேசங்களையும் தரிசிப்பவர்களுக்கு, வைகுண்ட பதவி கிடைக்கும்’ என்பது வைஷ்ணவர்களின் நம்பிக்கை.  

இங்கே, சயனக் கோலத்தில் பெருமாள் காட்சிதரும் திருத்தலங்களையும், பெருமாளின் சயன வகைகளையும் பார்ப்போம்.

ஜல சயனம் - பாற்கடல்

மனிதனாகப் பிறப்பெடுத்தவர்கள் அனைவரும் காண விரும்பும் அற்புதக் காட்சி இது. திருப்பாற்கடலில் ஆதிசேஷன் மீது பள்ளிகொண்டிருக்கும் திருமாலின் சயனக் கோலமே, ஜல சயனம். ஜல சயனத்தில் பெருமாள் கடல் மகள் நாச்சியார், பூமி தேவி மற்றும் திருமகளுடன் காட்சிதருவார். மண்ணில் பிறந்தவர்கள், தங்கள் பூத உடலுடன் சென்று தரிசிக்க முடியாத பெருமாளின் சயனக் காட்சி இது ஒன்று மட்டுமே.  

அனந்த சயனம் - பத்மநாபசாமி, திருவனந்தபுரம்

`அனந்தன்’ எனும் இந்திர உலகத்தின் தேவன் ஆதிசேஷன். ஆயிரம் தலைகொண்ட ஆதிசேஷ நாகத்தின்மீது, பெருமாள் பாற்கடலில் யோக நித்திரை கொள்வதையே `அனந்த சயனம்’ என்பார்கள்.   திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி, அனந்த சயனக் கோலத்தில்தான் பக்தர்களுக்குக் காட்சிதருகிறார்.  தூய்மையான பக்தியுடன் அனந்த பத்மநாபரை வணங்கினால் பாவம் நீங்கி, செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.

தல சயனம் - மாமல்லை

திருமால், உபதேச முத்திரையுடன் வலது கையை மார்பின்மீது வைத்தபடி ஆதிசேஷன்மீது கடல் மல்லையில் பள்ளிகொண்டிருக்கும் காட்சியை `தல சயனம்’ என்பார்கள். இங்கு, மூலவரே `ஸ்தல சயனப் பெருமாள்’ என்றுதான் அழைக்கப்படுகிறார். புண்டரீக மகரிஷிக்குக் காட்சியளித்ததைப்போலவே தரையில் படுத்து, பக்தர்களுக்கும் காட்சியளிக்கிறார். ஸ்தல சயனப் பெருமாளை வணங்கினால் முற்பிறப்பில் செய்த பாவங்கள் விலகும் என்பது நம்பிக்கை.

புஜங்க சயனம் - திருவரங்கம்

'அரங்கனைக் கண்டதும் பண்ணிய பாவமெல்லாம் என்னைவிட்டுப் பறந்தோடிவிட்டது' என்று திருமங்கையாழ்வாரால் பாடப்பட்ட பெருமாளின் சயனம்தான், திருவரங்கம் புஜங்க சயனம். இதை, `சேஷ சயனம்’ என்றும் கூறுகிறார்கள். `பூலோக வைகுண்டம்’ எனப் போற்றப்படும் திருவரங்கநாதனைத் தரிசித்தால், பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் ஜல சயனப் பெருமாளை வணங்கிய புண்ணியம் கிடைக்கும். 

உத்தியோக சயனம் - சாரங்கபாணிப் பெருமாள் கோயில்

சாரங்கபாணிப் பெருமாள் திருமழிசையாழ்வாருக்காக சயனத்திலிருந்து எழுந்து பேசுவதுபோலவே, உத்தியோக சயனத்தில் காட்சி தருகிறார். வேறெங்கும் காண முடியாத இந்த அற்புதக் காட்சியை திருக்குடந்தை சாரங்கபாணிப் பெருமாள் கோயிலில் மட்டுமே தரிசிக்க முடியும்.

வீர சயனம் - வீரராகவப் பெருமாள் கோயில், திருவள்ளூர்

உண்ட மயக்கத்தில் 'எங்கு உறங்கலாம்?' என்று  சாலிஹோத்ர முனிவரிடம் பெருமாள் கேட்க, முனிவர் சுட்டிக்காட்டிய இடத்தில் தெற்கு நோக்கி ஆதிசேஷன்மீது பள்ளிகொண்டார் பெருமாள். 'ராவணனைக் கொன்ற ராமன்தான் பெருமாளாகக் காட்சியளிக்கிறார்' என்று பாடிய திருமங்கை ஆழ்வாருக்கு, வீரராகவப் பெருமாளாகவே திருவள்ளூரில் காட்சியளிக்கிறார். வீரராகவப் பெருமாளின் சயனம் 'வீர சயனம்' எனப்படுகிறது. இங்கு, வீர சயனத்தில் பள்ளிகொண்டிருக்கும் பெருமாளை வணங்கி, தானம் செய்தால், பலன் பன்மடங்காகப் பெருகும் என்பது நம்பிக்கை.

யோக சயனம் - கோவிந்தராஜப் பெருமாள், திருச்சித்திரக் கூடம்

சிதம்பரம் திருச்சித்திரக்கூடத்தில், கோவிந்தராஜப் பெருமாள் யோக சயனத்தில், தாயார் புண்டரீக வல்லியுடன் காட்சியளிக்கிறார். ஆதிசேஷன்மீது பள்ளிகொண்டிருக்கும் கோவிந்தராஜப் பெருமாள் யோக நிலையில் காணப்படுவதால், இவரது சயனத்தை 'யோக சயனம்' என்று கூறுகிறார்கள். யோக சயனப் பெருமாளை வணங்கினால், அனைத்துப் பாவங்களும் விலகும் என்று கூறுகிறார்கள். 

தர்ப்ப சயனம் - ஆதிஜகந்நாதர், திருப்புல்லாணி

மற்ற தலங்களில், பெருமாள்தான் பல்வேறு சயனக் கோலங்களில் அருள்கிறார். ஆனால், திருப்புல்லாணி திருத்தலத்தில் மகாவிஷ்ணுவின் அவதாரமான ஶ்ரீராமபிரான் சயனக் கோலத்தில் அருள்கிறார். ஆதிசேஷன் லட்சுமணனாக அவதரித்திருந்தபடியால், ராமபிரான் இந்தத் தலத்தில் தர்ப்பைப் பாயில் சயனக் கோலம் கொண்டிருக்கிறார். இந்தத் தலத்து ஆதிஜகந்நாத பெருமாளை வழிபட்ட பிறகே, தசரதர் புத்திரகாமேஷ்டி யாகம் செய்ததாகச் சொல்லப்படுகிறது.

பத்ர சயனம் (ஆலிலை சயனம்) - வடபத்ர சாயி, ஸ்ரீவில்லிப்புத்தூர்

`பத்ர’ என்றால் ஆலமர இலை என்று பொருள். பெயருக்கு ஏற்ப பெருமாள் வடபத்ர சயனத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூரில் காட்சியளிக்கிறார். அதனால், மூலவரும் 'வடபத்ர சாயி' என்றே வணங்கப்படுகிறார். பக்தர்களின் பாவத்தைப் போக்கவே வடபத்ரசாயி பெருமாள் சுதபா முனிவரின் வேண்டுகோளின்படி காட்சியளித்தார் என்கின்றன புராணங்கள். இவரை வழிபட்டால், கல்யாண வரம் கூடும் என்பது ஐதீகம்

மாணிக்க சயனம் -  நீர் வண்ணன், திருநீர்மலை

`நீர் வண்ணன்’, `நீலமுகில் கண்ணன்’ என பக்தர்களால் அழைக்கப்படும் பெருமாள், நான்கு கரங்களுடன் மாணிக்க சயனத்தில் திருநீர்மலையில் காட்சியளிக்கிறார். பூலோக அவதாரத்தை முடித்த பிறகு வைகுண்டம் செல்லும் பெருமாள் இங்கு நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தான் என்று அனைத்து நிலைகளிலும் காட்சிதருவதைத் தரிசிக்கலாம். மாணிக்க சயனப் பெருமாளை வணங்கினால் ஆயுள் விருத்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பெருமாளின் சயனக் காட்சிகளை வணங்கி, அவனது பேரருளைப் பெற்று, பெறற்கரிய பதவியான வைகுண்டப் பதவியை அடைவோமாக!