"எது மரியாதை? எது சுய மரியாதை?

"நமது அன்றாட வாழ்வில் ‘மரியாதையாகப் பேசு’ ‘மரியாதை கொடுத்து மரியாதை வாங்கு’ போன்ற சொற்களை கேட்டு இருக்கிறோம். 

மரியாதை என்றால் என்ன? 

நம்முடைய நற்குணங்கள்/நற்செயல்கள்/ நன்னடத்தை சமுதாயத்தில் நமக்குதேடித்தரும் நன்மதிப்புதான் மரியாதை.பணம், பதவியினால் வரும் மதிப்பு நிலையானதன்று; 

காரணம் பணமும், பதவியும் நம்மை விட்டுச்செல்லும் போது, மதிப்பும், மரியாதையும் நம்மை விட்டுச்சென்று விடும்.

உடல்நலம்குன்றி ஒருவர் ஓய்வு எடுக்கும்போது, நாம் அவரைச்சந்தித்து நலம் விசாரிப்பது மனிதநேயம்,மனிதப்பண்பாடு அதுதான். அதேநேரம் செல்வ,செல்வாக்கு,உடையவரை சிலர் சந்திப்பதை நாம் அடிக்கடி பார்க்கிறோம். இப்படி சாதாரண மனிதரை யாரும் சந்திப்பதில்லையே ஏன்? எண்ணிப்பார்க்க வேண்டும். பணம் , பதவி படைத்தோரை மரியாதை நிமித்தம் என்று சந்திப்பதில் ஒரு சுயநலம் இருக்கிறது. இன்று வணக்கம் போட்டு வைத்தால், நாளை பயன்படும் என்னும் நினைப்பில் தன்னலம்தானே இருக்கிறது? இது நமக்கு சுயமரியாதை இல்லை.

நாம் ஒருவரை இயல்பாகச் சந்திக்கும் போது வணக்கம் செலுத்துவதில் தவறில்லை. ஆனால் வணக்கம் செலுத்துவதற்காகவே, வலியச்சென்று சந்திப்பது சரியன்று. நாம் ஒருவருக்கு அதிக மரியாதை கொடுத்து நமது'சுயமரியாதை'யைக் காயப்படுத்தி விடக்கூடாது. நாட்டில் தாங்களே பெரியவர்களென்று சிலர் இருக்கிறார்கள். அவர்களைச் சந்திக்கச் செல்பவர்களை, நாற்காலியில் அமரச்செய்து பேசமாட்டார்கள். ஆனால் சுய மரியாதை உணர்வுடன் ஒரு சிலர் துணிந்து அவர்களாகவே அமர்ந்து விடுவார்கள். அப்போது அந்த பெரியவர்களின் கண்களில் தீப்பொறி பறப்பதை காணலாம்.நம்முடைய நற்செயல்கள், நன்னடத்தை குறித்து நாம் பெருமையும், பெருமிதமும் கொள்வது நமக்குச் சுய மரியாதை உணர்வை உருவாக்கும் அடிமை மனத்தை அகற்றும். ஆகவே சந்திக்க வருபவர்களை உட்காரச்செய்து உரையாடினால் அவர்களை நமக்கு சமமாக மதித்தது போலாகிவிடும் என்று எண்ணி நிற்க வைத்தே பேசி அனுப்பிவிடுவார்கள், வந்தர்களை நிற்க வைத்துப்பேசும் போது இவர்கள் உயர்ந்து நிற்கிறார்கள் என்ற போலியான எண்ணம்! இது மிக மட்டமானது என்ற உண்மை விளங்கும் நாள் எந்நாளோ?

‘மதியாதார் வாசல் மிதியாமை’ என்பதை மனதில் நிறுத்தி, போலிப் பெரியோர்களைச் சுயமரியாதை உடையவர்கள் சந்திக்க விரும்புவதில்லை. சுயநலம் மிக்கவர்களும் சுயமரியாதையை தொலைத்தவர்களும் அவ்வளவு எளிதில் அடிமைப்புத்தியைக் கை விட மாட்டார்கள்.  

அவர்களைபொருத்தமட்டில்'காலில்நெடுஞ்சான்கிடையாகவிழுவதை' ஒரு கலையாகவே கொண்டவர்கள். இப்படிக்காலில் விழுந்து கிடப்பவனைப் பெரியவர்கள் சிலர் விரும்பி ,வரவேற்று மகிழலாம். ஆனால் காலப்போக்கில் காலைத்தொட்டுத் தொழுது கிடப்பவன், காலை வாரி விடவும் தயங்க மாட்டான்,என்று காலமாறுதலில், எதிர்பாராதவை சில நடக்கக்கூடும்.காலில் விழுந்து கிடப்பவனின் பண்பு அறிந்து எட்டி உதைத்து ஒதுக்கிவிடுவது நடக்கக்கூடும். சுயமரியாதை இல்லாதவனின் நடிப்பும் நயவஞ்சகமும் நீண்டநாள் வெற்றி பெற முடியாது. சுய மரியாதை இழந்து குனிந்து கும்பிட்டுக் கிடப்பவர் வாழ்விலொருநாள் கூனிக்குறுகி நிற்கும் நிலை ஏற்படும், சுயமரியாதை உணர்வுடன் நிமிர்ந்து நடந்தால், சமுதாயத்தில் மரியாதை நம்மை நாடி ஓடி வரும்.சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு, எழிலார்ந்த ஏற்றமிகு வாழ்வு, உயிரனைய உரிமை வாழ்வு என்பதை மனதில் நிறுத்தி மாண்புற வாழ்வோம்.