(பக்தர்களின் வாழ்வில் பெருமாள் நடத்திய நெகிழ்ச்சியான சம்பவங்கள்)
அனுப்பியவர் : சுதா திருநாராயணன்.ஸ்ரீரங்கம்

மூன்று வருடங்களுக்கு முன்னால் என் கணவர் ஸ்ரீ பாஷ்ய பாராயணத்திற்காக  மேல்கோட்டை சென்றிருந்தார். நானும் உடன் சென்றிருந்தேன். தினமும் காலையிலும் மாலையிலும் பாராயணம் நடக்கும். பாராயணம் ஏற்பாடு செய்திருந்தவர்கள் மிகவும் ஆசாரம் என்பதால் விறகடுப்பில் அவர்கள் வீட்டு பெண்மணிகளே சமையல் செய்து எல்லோருக்கும் அமுது படைத்தனர். ஒருவாரமாக பாராயணம் நிகழ்ந்து கொண்டிருந்தது. மேல்கோட்டையில் ஸ்ரீராமானுஜரால் தோற்றுவிக்கப்பட்ட 'கல்யாணி சரஸ்' என்ற குளம் மிகவும் பிரசித்தி பெற்றது. எல்லோரும் அதில் தினமும் நீராடச் சென்றனர். குளிரும் மழையும் அதிகமாக இருந்ததால் நானும் என் கணவரும் ஒரு நாள் கூட செல்லவில்லை. ஒரு நாள் நாங்கள் தங்கியிருந்த அறையில் குழாயில் தண்ணீர் வரவில்லை. என் கணவர் குளத்தில் தீர்த்தமாடிவிட்டு வருவதாக சொல்லிவிட்டு சென்றார்.  சிறிது நேரத்தில் மிகுந்த படபடப்புடன் திரும்பி வந்தார். கொஞ்சம் ஆசுவாசம் செய்துகொண்டு அவர் கூறிய விஷயம் இதுதான். அவர் தீர்த்தமாட சென்றபோது குளத்தருகில் யாருமே இல்லை. மழை வேறு பெய்து கொண்டிருந்தது. அவருக்கு குளத்தில் நீராடி பழக்கமும் இல்லை. யோசித்துக்கொண்டே படியில் இறங்க எத்தனித்தபோது பின்னால் இருந்து ஒருவர் "இந்தப் பக்கம் பாசி அதிகம், வழுக்கும். அந்தப் பக்கமாக போங்கோ." என்று கூறியிருக்கிறார். யாருமே இல்லாத குளத்தருகில் எப்படி குரல் கேட்கிறது என்று என் கணவர் திரும்பி பார்த்த பொழுது அங்கு யாருமே இல்லையாம். விதிர்விதிர்த்து போன என் கணவர் அந்தக் குரலின் கட்டளைக்கு கீழ்படிந்து மறுபக்கம் சென்று ஸ்நானம் செய்துவிட்டு வந்தார். அறைக்கு வந்தவுடன் ஆனந்த பாஷ்பம் பெருக "என்னே பெருமானின் கருணை! எம்பெருமான் ராமானுஜரே என்னை வந்து இன்று காப்பாற்றினார்" என்று கூறினார். கண்ணீர் மல்க ஸ்ரீமன் நாராயணனையும், ஸ்ரீ ராமானுஜரையும் நாங்கள் இருவரும் சேவித்து பணிந்தோம். இன்றும் அந்த நிகழ்ச்சியை நினைக்குங்கால் மேல்கோட்டை பெருமாளின் அருளுக்கு பாத்திரம் ஆனோமே என்று பாதாதிகேசம் சிலிர்க்கிறது.  

நீங்களும் உங்கள் வாழ்வில்  பெருமாளின் அற்புதங்களை எங்களுக்கு அனுப்பலாம் உங்கள் பெயருடன் அதை பதிவு செய்வோம்

அனுப்ப வேண்டிய வாட்ஸ்அப் எண்
9500074173