மாசி மாதம் என்பது வழிபாட்டுக்கு உரிய மாதம். மாசி மாதம் என்பது புதிய கலைகளையும் கல்விகளையும் கற்கத் தொடங்குகிற மாதம்.

மாசி மாதத்தின் முப்பது நாட்களுமே விசேஷமான நாட்கள்தான். எல்லா தெய்வங்களுக்கும் சிறப்பு மிக்க மாதம் என்று போற்றப்படுகிறது மாசி மாதம்.

மாசி மாத பிறப்பு விஷ்ணுபதி புண்ணிய காலம் 

விஷ்ணுபதி புண்ணிய காலம். அதாவது, விஷ்ணு வழிபாட்டுக்கு உரிய மிக முக்கியமான தினம் ஆகும். வைகாசி, ஆவணி, கார்த்திகை மற்றும் மாசி ஆகிய மாதங்களின் முதல்நாள் விஷ்ணுபதி புண்ணியகாலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை பெருமாள் வழிபாட்டுக்கு உகந்தவை.  விஷ்ணுபதி புண்ணியகாலத்தில் பெருமாள் கோயில்களுக்குச் சென்று வழிபாடு செய்ய வேண்டியது மிகவும் அவசியம். குறிப்பாக சங்கு சக்ரதாரியாகப் பெருமாள் இருக்கும் ஆலயங்களுக்குச் சென்று பெருமாளை வழிபட வேண்டும்.

பெருமாள் சந்நதியை 27 முறை பிரதட்சிணம் வருவது விசேஷம். ஆலயங்களில் இந்த நாளில் நடக்கும் அபிஷேக ஆராதனைகளைக் கண்டு வழிபாடு செய்ய, மனம் அமைதி பெறும். இந்த நாளில் மகாலட்சுமி பூஜை, கோபூஜை ஆகியவை செய்வது மிகவும் பலன் தரும். வீடுகளில் விளக்கேற்றி விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வதும், ஆழ்வார்கள் பாசுரங்கள் பாடுவதும் மிகுதியான பலன்களைக் கொடுக்கும். திருமண வரம் வேண்டும் இளைஞர்கள் தவறாமல் இந்த நாளில் ஆலயம் சென்று வேண்டிக்கொண்டால் விரைவில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.

ஊன் நேர் ஆக்கைதன்னை உழந்து ஓம்பி வைத்தமையால்
யான் ஆய் என்தனக்கு ஆய் அடியேன் மனம் புகுந்த
தேனே! தீங் கரும்பின் தெளிவே என் சிந்தை தன்னால்
நானே எய்தப் பெற்றேன் நறையூர் நின்ற நம்பீயோ!
என்ற பாசுரத்தை பாராயணம் செய்யவும்.
   
திருமால், மகாவிஷ்ணுவாக அவதாரம் எடுத்தது மாசி மக நட்சத்திரத் திருநாளில் தான் என்கிறது புராணம். .

மாசி மாதத்தன்று மந்திர உபதேசம் பெறுவதும் உபநயனம் செய்வதும் சிறந்து என்று சொல்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

ஆழ்வார்களில் ஒருவரான, குலசேகர ஆழ்வார் மாசி மாதம் புனர்பூச நட்சத்திர நாளில்தான் அவதரித்தார்.

அன்னதானத்தின் பெருமைகளை உணர்த்துவது மாசி மகம் தான். எனவே, மாசி மாதத்திலும் மற்ற அனைத்து மாதங்களிலும் எல்லா நாளிலும் நம்மால் முடிந்த அளவுக்கு அன்னதானம் செய்வது விசேஷம். மும்மடங்கு பலன்களைத் தரும்.

மாதந்தோறும் வருகிற ஏகாதசியே சிறப்புமிக்கதுதான். மாசி மாதத்தில் வருகிற ஏகாதசியில் விரதம் இருப்பது மகாபுண்ணியம். சகல தோஷங்களையும் போக்கும். பிரம்மஹத்தி போன்ற பெரும் பாவங்களைப் போக்கி பேய்க்கும் நற்கதி கொடுக்கும் இரு ஏகாதசிகள் வருவது மாசி மாதத்தில் தான் வருகின்றன.

உயர் படிப்பு படிக்க விரும்புபவர்கள் ஆராய்ச்சி செய்ய விரும்புபவர்கள் மாசிமக நாளில் அவற்றைத் தொடங்கினால் அதில் சிறந்து விளங்கலாம்.அந்தத் துறைகளில், எடுத்துக்கொண்ட கல்வியில் மிகப்பெரிய உச்சம் தொடலாம்.

மாசி மாதத்தில் தெய்வ வழிபாடுகளிலும் பூஜைகளிலும் ஆத்மார்த்தமாக ஈடுபடுங்கள். உங்கள் பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேறும்.