ஒரு முறை யுதிஸ்டிர மன்னர். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் . ஓ! கிருஷ்ணா, மாசி மாத (பிப்ரவரி / மார்ச்) தேய்பிறையில் தோன்றக்கூடிய ஏகாதசியைப் பற்றி எனக்கு தயவுசெய்து விவரியுங்கள் என்று கேட்டார் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் மன்னர் யுதிஷ்டிரிடம் ,  மன்னா, இந்த புனிதமான ஏகாதசியின் பெயர்  விஜய ஏகாதசி எனப்படும். இந்த ஏகாதசியை அனுஷ்டிப்பதால் ஒருவரின் அனைத்து பாவ விளைவுகளும் அழிக்கப்படும். ஒரு முறை மாமுனிவரான நாரதர் பகவான் பிரம்மா தேவரிடம் . ஓ! தேவர்களில் சிறந்தவரே, மாசி மாத (பிப்ரவரி/மார்ச்) தேய்பிறையில் தோன்றக்கூடிய, விஜய ஏகாதசியை அனுஷ்டிப்பதால் ஒருவர் அடையும் பலனைப் பற்றி எனக்கு விளக்கி அருள வேண்டும்  என்று கேட்டார்.

பிரம்ம தேவர் பதிலளித்தார், ஓ! எனதருமை புத்திரனே, இந்த ஏகாதசி விரதம், மிகவும் பழமையானதும், தூய்மையானதும், மற்றும் எல்லா வித  பாவச் செயல்களை அழிக்கக் கூடியதும் ஆகும். இந்த விஜயா ஏகாதசி ஒருவருக்கு அரிய பலனை கொடுக்கக் கூடியதாகும். அதன் பெயரிற்கேற்ப  ஒருவருக்கு வெற்றியை கொடுக்கிறது. ஸ்ரீராமச்சந்திரர், தன் தந்தையின் கட்டளையை நிறைவேற்றும் வகையில் தன் மனைவி சீதாதேவி மற்றும் தன் சகோதரன் லஷ்மணனுடன் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் சென்றபோது, அவர்கள் கோதாவரி நதிக்கரையில் பஞ்சவடி என்ற அழகான காட்டில் சில காலம் வாழ்ந்தனர். அவர்கள் இக்காட்டில் தங்கியிருக்கையில் ஒருநாள், அசுரர்களின் மன்னனான இராவணன் தவசியான சீதாதேவியைக் கடத்திச் சென்றான். இதனால் இராமச்சந்திரர் மிகுந்த துயரத்தில் ஆழ்ந்தார். சீதாதேவியை தேடி காடு முழுவதும் அலைந்து கொண்டிருக்கையில், இராமச்சந்திரர், பறவைகளின் மன்னனான ஜடாயுவை சந்தித்தார். மரணதருவாயில் இருந்த ஜடாயு, இராமச்சந்திரரிடம், சீதாதேவியை பற்றிய முழுவிவரத்தையும் கூறிவிட்டு, இவ்வுலகில் இருந்து விலகி வைகுண்டத்திற்குத் திரும்பியது. 

அதன்பிறகு இராமச்சந்திரர், சுக்ரீவனுடன் நட்பு கொண்டார். இராமச்சந்திரருக்கு உதவ, மிகபெரிய வானர சேனை தயாரானது. இதற்கிடையில் அனுமான் இலங்கையில் உள்ள அசோக வனத்திற்குச் சென்று சீதாதேவியை சந்தித்து, இராமச்சந்திரரின் மோதிரத்தைக் கொடுத்து அன்னை சீதா தேவியை சமாதானப்படுத்தும் மிகப்பெரும் பணியை நிறைவேற்றினார். பிறகு அனுமான் இராமச்சந்திரரிடம் திரும்பி வந்து எல்லா நிகழ்ச்சிகளையும் விவரித்தார். அனுமானின் வார்த்தைகளைக் கேட்ட இராமச்சந்திரர் தன் நண்பன் சுக்ரீவனை சந்தித்து இலங்கையை தாக்குவதென தீர்மானித்தார். பின்னர் பகவான் ஶ்ரீ இராமச்சந்திரர் மிகப்பெரிய வானர சேனையுடன் கடற்கரையை அணுகினார். பிறகு லக்ஷ்மணனிடம் . ஓ! சவுமித்ரா, முதலைகளும், திமிங்கலங்களும் நிரம்பிய இப்பெருங்கடலை எவ்வாறு கடக்கப்போகிறோம் என்று கூறினார். அதற்கு லக்ஷ்மணன் .ஓ! முழு முதற்கடவுளே, பகதால்ப்யா என்ற ஒரு பெருமுனிவர் இத்தீவில் வசிக்கிறார். அவருடைய ஆசிரமம் இங்கிருந்து நான்கு மைல் தொலைவில் உள்ளது, இந்த முனிவர் பிரம்மாவை நேரில் தரிசித்தவர். இக்கடலை கடக்கும் உபாயத்தை அவரிடம் கேட்போம். என்று கூறினார். 

பகவான் ஶ்ரீ இராமச்சந்திரர் பக்தால்ப்யா முனிவரின் ஆசிரமத்திற்குச் சென்று தன் மரியாதை கலந்த வணக்கங்களை முனிவரிடம் சமர்ப்பித்தார். வந்திருப்பவர் முழுமுதற் கடவுளான பகவான் ஶ்ரீ இராமச்சந்திரரே என்றும், அசுரனான இராவணனைக் வதம் செய்யவும் பின்னர் தமது திவ்ய லீலைகளை புரிவதற்காக  இம்மண்ணுலகில் தோன்றியுள்ளார் என்பதையும்  அறிந்த முனிவர் உடனே புரிந்து கொண்டார். 

பகவான் ஶ்ரீ இராமச்சந்திரிடம்  முனிவர் கேட்டார், ஓ, இராமச்சந்திரரே  தாங்கள் எதற்காக இங்கு வந்தீர்கள்? உங்களுக்கு நான் என்ன  கைங்கர்யம் செய்ய வேண்டும் என்று கூறினார். பகவான் இராமச்சந்திரர் முனிவரிடம் , அந்தணரே, உம்முடைய கருணையால் அசுரர்களை வென்று இலங்கையை கைப்பற்றுவதற்காக நான் என்னுடைய சேனையுடன் இக்கடற்கரைக்கு வந்துள்ளேன். ஓ, முனிவர்களில் சிறந்தோரே, இந்த அளவிட முடியாத பொருங்கடலைக் கடப்பதற்கான ஒரு சுலபமான உபாயத்தை எனக்கு கூறுங்கள். இதற்காகத்தான் நான் உமது தாமரை பாதங்களிடம் வந்துள்ளேன்.என்று பதிலளித்தார்

பெருமுனிவர் கூறினார், ஓ! இராமச்சந்திரா, ஒரு உயர்ந்த விரதத்தைப் பற்றி உனக்குக் கூறுகிறேன். அதை அனுஷ்டிப்பதால் நீங்கள் நிச்சயமாக போரில் வென்று இவ்வுலகில் அசாதாரணமான புகழும், செல்வமும் பெறுவீர். இந்த ஏகாதசியை நிலை மாறாத கவனத்துடன் அனுஷ்டிக்க வேண்டும். ஓ, ராமா, மாசி மாத (பிப்ரவரி /மார்ச்) தேய்பிறையில் விஜய ஏகாதசி என்ற ஒரு ஏகாதசி தோன்றுகிறது. இந்த ஏகாதசியை அனுஷ்டித்தால் நீங்கள் நிச்சயமாக உமது வானர சேனையுடன் இந்த கடலைக் கடக்க முடியும். ஓ, இராமச்சந்திர பகவானே, இந்த ஏகாதசியை அனுஷ்டிக்கும் வழி முறையை இப்பொழுது கேளுங்கள். ஏகாதசிக்கு முன்தினம் தங்கம், வெள்ளி, பித்தளை அல்லது மண் கலசத்தில் நீர் நிரப்பி, மா இலைகளால் அதனை அலங்கரிக்க வேண்டும். 

பிறகு புனிதப்படுத்தப்பட்டு ஏழு வகையான தானியங்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு உயர்வான தலத்தில் இட வேண்டும். இதன் மீது பகவான் நாராயணரின் தங்க மூர்த்தியை இட வேண்டும். ஏகாதசியன்று அதிகாலையில் குளித்து இந்த நாராயண மூர்த்தியை பக்தியுடன் துளசி, சந்தனம் குழம்பு, மலர்கள், மாலை, ஊதுபத்தி, நெய்தீபம் போன்றவற்றைக் கொண்டு வழிபட வேண்டும். அன்று இரவு முழுவதும் விழித்திருக்க வேண்டும். ஏகாதசிக்கு மறுநாள் சூர்யோதயத்திற்கு பிறகு இந்த நீர் நிரப்பிய கலசத்தை ஒரு ஆற்றங்கரையிலோ அல்லது குளக்கரையிலோ இட்டு முறையாக வழிபட வேண்டும். அதன் பிறகு அந்த நீர் நிரப்பிய கலசம் மற்றும் நாராயண விக்ரகத்தை, பிரம்மச்சர்யத்தை உறுதியுடன் அனுஷ்டிக்கும் அந்தணருக்கு தானமளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் நீங்கள் நிச்சயமாக உம்முடைய எதிரியை வெற்றி கொள்வீர்.

முனிவரின் அறிவுரைப்படி பகவான் இராமச்சந்திரர் தன்னை ஒரு உதாரணமாக வெளிப்படுத்திக் கொண்டு இந்த ஏகாதசியை சரியான முறையில் அனுஷ்டித்து, வெற்றி பெற்றார். இந்த ஏகாதசியை சரியான முறையில் அனுஷ்டிப்பவர், இவ்வாழ்க்கையிலும் அதற்குப் பின்னரும் வெற்றி பெறுவார். பகவான் பிரம்மா, நாரதரிடம் தொடர்ந்து கூறினார். ஆகையால், ஓ, எனதருமை புத்திரனே, அனைவரும் இந்த விஜய ஏகாதசியை அனுஷ்டிக்க வேண்டும். இந்த ஏகாதசியை ஒருவரின் அனைத்து பாவ விளைவுகளையும் அழித்து விடும். இந்த ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி படித்தாலோ (அ) கேட்டாலோ, ஒருவர் வாஜ்பேய யாகத்தின் பலனை அடைவார்