பல்லாயிரம் வருஷத்திற்கு முன் ஒரு கேள்வி பதில்!!

மகா பாரதம் ஒரு ஈடிணையற்ற காவியம் . அதில் எண்ணற்ற உப கதைகள் மனத்தைக் கொள்ளை கொள்ளும் வகையில் இருந்தாலும் சிலவற்றில் உயர்ந்த தத்துவங்களும் அறிவுரைகள் இன்றும் என்றும் புதிதானவை. பயனுள்ளவை. காலத்தால் அழியாதவை. ஒரு சம்பவம் அத்தகையது. அதையே இன்று தொடுகிறோம்;

பாண்டவர்கள் வனவாசம் சென்றனர். காட்டில் வாழ்ந்த அவர்கள் எண்ணற்ற துன்பங்களை எதிர்கொண்டனர். ஒருநாள் மான் வேட்டை ஆட சென்றபோது அந்த மாயமான் அவர்களுக்கு போக்கு காட்டிவிட்டு மறைந்தது. ஆடி ஓடி அலைந்து களைத்து அவர்கள் ஆயாசம் மேலிட்டு ஒரு இடத்தில் கlளைப்பாரினார்கள். அவர்கள் அனைவருக்குமே தாகமும் பசியும் வாட்டியது. தருமபுத்ரர் குடிக்க நீர் வேண்டியதால் சகா தேவன் நீர் தேடி சென்றவன் காட்டின் ஒரு அடர்ந்த பகுதியில் ஒரு சிறு குளத்தைப் பார்த்தான். அதில் இறங்கி தன இருகையாலும் நீர் மொண்டு குடிக்க முயன்றபோது அங்கு நின்றுகொண்டிருந்த ஒரு நாரை "இந்த நீரைக்குடிக்காதே. இது நச்சுப்பொய்கை. என் கேள்விகளில் சிலவற்றுக்குப்பதில் சொன்னால் உனக்கு நல்ல குடிநீர் தருகிறேன் என்றது. " குடிக்க ஒரு மனிதன் தவிக்கின்றபோது வேலை கெட்டுப்போய் உனக்கு கேள்விக்கு பதில் சொல்லும் நிலையில் நான் இல்லை" என்று அதைப் புறக்கணித்த சஹாதேவன் நீர் குடித்தான். மயங்கி விழுந்தான். மாண்டான்.

அடுத்ததாக அவனைத்தேடி வந்த நகுலனும் அவ்வாறே முடிந்தான். அர்ஜுனன் பீமன் இருவரும் கூட நாரையை அலட்சியம் செய்து நீர் குடித்து மாண்டனர். " எங்கே யாருமே திரும்ப வரவில்லையே" என கவலையோடு யுதிஷ்டிரர் அவர்களைத்தேடி நச்சுப்பொய்கை அடைந்து அங்கு அவர்களின் சடலங்களை பார்த்தார். நாரை அவரையும் எச்சரித்தது. 

சரி சீக்கிரம் உன் கேள்விகளைக் கேள்" என்றார் யுதிஷ்டிரர். நாரை உருவில் இதுவரை இருந்த அந்த பொய்கையின் காவலன் ஒரு யக்ஷன். அவன் தர்மரைக் கேள்விகள் கேட்கிறான். அவரும் பதில் சொல்கிறார். கடைசியில் அவர் பதில்களில் மகிழ்ந்து யக்ஷன் "யாரேனும் ஒரு சகோதரர் உயிர் பிழைக்க வைக்க முடியும் யார் வேண்டும் சொல்? என்றான். 

"நகுலன் "என்கிறார் தர்மர்.

"யுதிஷ்டிரா, மாவீரர்கள் அர்ஜுனன், பீமனை எல்லாம் விட்டு விட்டு நகுலனை ஏன் மீட்கப்பார்க்கிறாய்.?

"யக்ஷா, என் தந்தை பாண்டுவிற்கு இரு மனைவியர்கள். ஒரு மனைவி குந்தியின் புதல்வன் யான் இருக்கிறேன். மற்ற மனைவி மாத்ரியின் மூத்த புதல்வன் நகுலன். "தாய் தந்தைக்கு ஈமக்கடன் செய்யவாவது ஒவ்வொரு புதல்வன் வேண்டாமா சொல்?"

"யுதிஷ்டிரா , தர்ம புத்திரன் என்ற பேருக்கு பொருத்தமானவன் நீ. உன்னை சோதனை செய்து மகிழ்ந்தேன். உன்னுடைய நான்கு சகோதரர்களையுமே உயிர் பிழைக்க வைக்கிறேன். இது என் பரிசு உனக்கு " என்றான் யக்ஷன்.

இது தான் சம்பவம். இது முக்யமல்ல. யக்ஷன் சட்டென கேட்ட கேள்வியும் அதற்கு உடனேயே தர்மன் பட்டென சொன்ன பதிலும் தான் ஆச்சர்யமானவை. சில கேள்விகளை காலத்துக்கு ஒவ்வாததென ஒதுக்கிவிட்டு மற்றவற்றையெல்லாம் சுருக்கி எனக்குத் தெரிந்த தமிழில் தந்திருக்கிறேன்.

1.யாரால் சூர்யன் உதிக்கிறான்?
அருவமான பிரம்மம் ஒன்றினாலேயே.

2. சூரியனின் இரு பக்கத்திலும் யார்?
விண்ணுலகில் வாழ் தேவர்கள்

3. யாரால் சூரியன் அஸ்தமிக்கிறான்?
தர்மம் ஒன்றினாலேயே சூர்யன் அன்றாடம் அஸ்தமிக்கிறான்.

4. சூர்யன் எதில் நிலையாக உள்ளான்?
சத்யம் ஒன்றுதான் சூரியனை நிலை நிறுத்துகிறது.

5. எப்போது ஒருவன் வேதங்களில் நிபுணனாகலாம்?
வேதங்களைக் கற்றும் ஒதியுமே அவன் வேதங்களை நன்கறியமுடியும்.

6. எப்போது ஒருவன் மேன்மை பெற முடியும்?
நேம நியமங்களை விடாது கைப்பிடிக்கும்போது

7. எப்போது அவன் பாதுகாப்பாக இருக்க இயலும்?
தைர்யத்தை விடாமல் இருக்கும்போது அதுவே அவன் பாதுகாப்பு

8. எப்போது ஒருவன் அறிவாளி?
எவன் ஒருவன் அறிஞர்களையும் கற்றோரையும் சார்ந்திருக்கிறானோ அப்போது

9. பிராமணர்களுக்கு எது தெய்வீகம்?
வேதங்களை முறைப்படி கற்றுணர்ந்து தேறி ஓதுவதே அவர்களை உயர்த்துகிறது.

10. பிராமணனின் கடமை யாது?
வேத நெறிப்படி வாழ்வது ஒன்றே.

11. எப்போது பிராமணன் தெய்வீகத்திலிருந்து மானுடனாக தாழ்கிறான்? 
கர்வம. சுயநலம் அவனை ஆட்கொண்டால் அவன் தாழ்கிறான்.

12. ஒரு பிராமணனுக்கு எது பாப கார்யம்?
மற்றவர்களிடம் குறை காண்பது

13. (பரவாயில்லையே யுதிஷ்டிரா இதுவரை நன்றாகவே பதிலளித்தாய். இப்போதுசொல்) 
ஒரு க்ஷத்திரியனுக்கு எது தெய்வீகமாகிறது?
அவன் கையாளும் ஆயுதங்களே அவனுக்கு தெய்வீகத்தை அளிக்கும்

14. ஒரு க்ஷத்திரியனுக்கு எது தர்மம்?
அக்னி தியாகம் செய்வதே க்ஷத்ரிய தர்மம்

15. க்ஷத்திரியனிடத்தில் எப்போது மானிடம் தெரிகிறது.?
ஒரு க்ஷத்திரியன் எப்போது பயத்தில் அஞ்சுகிறானோ அப்போதே அவன் சாதரணனாகிவிடுகிறான்.

16. க்ஷத்திரியனுக்கு எது பாபம்?
தன்னை நம்பி வந்தவனுக்கு பாதுகாப்பு அளிக்க தவறும்போது.

17. அக்னி ஹோமங்களுக்கு எது சாம வேதம்?
ஆன்மா ஒன்றே.

18 யாக யஞத்தில் முக்யமான ரிக் எது தெரியுமா?
மனசு ஒன்று தான் அதி முக்ய ரிக்

19 எதால் அக்னி யாக ஹோமம் நடைபெறும்?
ரிக் வேத மந்த்ரம் போதும் 

20. அக்னி யாகம் கட்டுப்படுகிறது?
ரிக் வேத மந்திர பலத்தில் 

21.(தர்மா நீ சளைத்தவனே அல்ல. உன்னை இப்போது வேறு வித கேள்விகள் கேட்கிறேன்.) உழவனுக்கு, விவசாயிக்கு எது முக்கியம்?
மழை 

22. விதை நடுவதற்கு எது அவசியம்?
நல்ல, நம்பகமான விதை ஒன்று தான்.

23. நிரந்தர வாழ்வுக்கு எது செல்வம்?
ஈடற்ற செல்வம் பசுக்களை வளர்த்து பரமாரிப்பதுவே.

24. பெற்றவருக்கு எது சிலாக்யமாக கருதப்படுகிறது?
பிறந்தது பிள்ளையானால் பெற்றவனைக் கையில் பிடிக்க முடியாதே.

25 (இதற்கு பதில் சொல்லேன். ) எந்த பலசாலி, பணக்காரன், கெட்டிக்காரன் மூச்சிருந்தும் இல்லாதவன்?
இவ்வளவு கொடுத்தும், எவன் இறைவனையோ, முன்னோரையோ, தனக்கு வரும் விருந்தினரையோ, உதவும் பணியாளர்களையோ தன்னையோ மதிக்காது, நினைக்காது, கவனிக்காது திரிகிறானோ அவன் மூச்சிருந்தும் பிணமே.

26 பூமியை விட பொறுமையான, வலிவான ஒன்று சொல்?
தாய் தான் . வேறு யார்?

27. ஆகாசத்தை விட உயர்ந்தது?
தந்தை

28. காற்றிலும் வேகமானது?
மனோ வேகம்

29. எங்கும் காண்கிறதே புல், அதனிலும் அதிகம் எது?
கவலைகள்

30. கண் மூடாமல் உறங்குவது?
மீன்

31 பிறந்தும் கூட நகராதது?
முட்டை.

32. இதயம் இல்லாதது?
கல்

33. வேகத்தோடு வளர்வது?
நதி பிரவாகம்

34 வெளிநாட்டு செல்பவனின் நண்பன்?
அவன் கற்றுத் தேர்ந்த கல்வி ஒன்றே.

35 வீட்டிலேயே கிடப்பவனுக்கு?
மனைவி ஒருவளே. அதுவே போதுமே!

36 நோயாளிக்கு நண்பன் யார்?
அவனது வைத்தியன்

பாவம் தண்ணீர் குடிக்க வந்தவனை இவ்வளவு கேள்விகளா கேட்பது? கேட்டும் தர்மன் பொறுமையாக தம்பிகளின் சடலங்களை அருகில் வைத்துக்கொண்டு பொறுமையாக பதில் சொல்கிறானே. நாம் ஏதாவது குடித்துவிட்டு, மீண்டும் மற்ற கேள்விகளையும் பதில்களையும் அலசுவோம் . ரெண்டுநாளைக்கு விஷயம் இருக்கிறதே!!.