நவமி திதியில் அவதரித்தவர் ஸ்ரீராமபிரான். அவரது வாழ்க்கை வரலாற்றை விளக்கும் நூல் ராமாயணம். ராமன் + அயணம் என்று இதைப் பிரிப்பர். இதற்கு, ராமனின் வழி என்பது பொருள். ராமனின் வழியில் நடப்பவர்கள் நற்கதி அடைவர்.மனிதன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என் பதற்கு உதாரணமாக நடந்து கொண்டவர் அவர். பட்டாபிஷேகத்துக்கு தயாராகிக் கொண்டிருந்த அவரை வரவழைத்த தந்தை, "நீ பதினான்கு வருஷம் காட்டுக்குப் போ...' என்று சொன்னவுடன், காரணம் கேட்காமல், கிளம்பியவர்.ராமாயணம் தெய்வ காவியமாகவும், ஸ்ரீராமன் நம் உள்ளம் கவர்ந்தவராகவும் இருக்கிறார். எனவே தான், "ஸ்ரீராம ஜெயம்' என்று நம்பிக்கையுடன் சொன்னால் போதும், நம்மிடம் உள்ள பயம் நீங்கி, எதையும் சாதிக்கும் ஆற்றல் பிறக்கும். ராமனின் கதை வால்மீகியால் சம்ஸ்கிருதத்திலும், கம்பரால் தமிழிலும் எழுதப்பட்டுள்ளது. இதுதவிர, பல்வேறு மொழிகளிலும் ராமாயணம் எழுதப்பட்டிருக்கிறது. துளசிதாசர் இந்தியில் எழுதிய ராமாயணம், "துளசி ராமாயணம்' எனப்படுகிறது. துளசி ராமாயணத்தை ஆங்கிலத்தில் அட்கின்ஸ் என்ற பாதிரியார் எழுதியுள்ளார். ரஷ்ய மொழியிலும் ராமாயணம் எழுதப்பட்டிருக்கிறது. ராமாயணம் கர்ப்பிணிப் பெண்களுக்கு கைகண்ட மருந்து. கர்ப்ப காலத்தில் ராமாயணம் படித்தால், பிறக்கும் குழந்தைகள் பக்தி, தைரியத்துடன் விளங்குவர்; நன்றாகப் படிக்கவும் செய்வர் என்பது நம்பிக்கை.

"ராம' என்ற மந்திரம், "ஓம் நமோ நாராயணாய' என்ற எட்டெழுத்து மந்திரத்திலுள்ள (ஓம் என்பது ஒரே எழுத்து) "ரா' மற்றும் "நமசிவாய' என்ற ஐந்தெழுத்து மந்திரத்திலுள்ள, "ம' என்ற பீஜாக்ஷரங்களை இணைத்து உருவாக்கப்பட்டது. பீஜாக்ஷரம் என்றால், உயிர்ப்புள்ள எழுத்து என்று பொருள்."ராம' மந்திரம் சொன்னால், பட்டமரமும் தளிர்க்கும் என்பதால் அதை, "உயிர்ப்பு மந்திரம்' என்பர். இந்த மந்திரத்தைச் சொல்லத் தெரியாமல், "மரா' என மாற்றி உச்சரித்த வால்மீகி தான், ராமாயணத்தின் ஆசிரியரானார் என்பது குறிப்பிடத்தக்கது. காசியில் இறப்பவர்களின் காதில் சிவபெருமான், "ராம' மந்திரத்தைச் சொல்லி, அவர்களுக்கு பிறப்பற்ற நிலையை அருளுவதாக ஐதீகம்.

ராமநவமி நன்னாளில் இருந்து தினமும், "ராம ராம' என்ற தாரக மந்திரத்தைச் சொல்லப்பழகுங்கள். "தாரகம்' என்றால் கண்மணி. இம்மந்திரத்தைச் சொல்வோரை கண்மணி போல் பாதுகாப்பான் ஸ்ரீராமன்.