கோயில்களுக்குள் நுழைந்தால், நம் காதுகளில் "நமோ' என்ற மந்திரச்சொல் விழாமல் இருக்காது. உதாரணத்துக்கு "ஓம் நமோ நாராயணாய'' என்ற மந்திரத்தை எடுத்துக் கொள்வோம். "நமோ' என்றால் "திருவடியில் விழுந்து வணங்குகிறேன்'' என்று பொருள்.
நம்மை விட யாரை உயர்ந்தவராக மதிக்கிறோமோ, அவரது காலில் விழுவதை பெருமையாக நினைக்கிறோம். ஒரு மாணவன் படிப்பில் தங்கப்பதக்கம் வாங்கியதும், பெற்றோர் காலில் விழுகிறான். தனது புகழ், பெருமை எல்லாவற்றையும் பெற்றோருக்கு அர்ப்பணிக்கிறான். அதுபோல, பக்தன் கடவுளின் காலில் விழுந்து தன்னையே அவனிடம் ஒப்படைக்கிறான். ஒவ்வொரு தடவையும் விழுந்து வணங்குவது என்பது எல்லாக்கோயில்களிலும் சாத்தியமல்ல. எனவே, மந்திரத்தில் "நமோ' சேர்த்து காலில் விழுவதாக இறைவனிடம் சொல்கிறான். அவ்வாறு சொல்லும்போது அவனது ஆணவம், போலியான தற்பெருமை எல்லாம் அவனை விட்டு நீங்கி விடுகிறது. எந்த மந்திரம் சொன்னாலும், அதன் பொருள் புரிந்து சொன்னால் தான், நமக்கு பலன் கிடைக்கும்.
Follow Us