விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் மற்ற அவதாரங்களிலிருந்து வேறுபட்டது, நரசிம்ம அவதாரம் மனிதனாகவும் அல்லாமல், மிருகமாகவும் அல்லாமல் இரண்டுக்கும் இடைப்பட்ட தோற்றத்துடன் மகா உக்கிரமாக வெளிப்பட்ட அவதாரம்.
 
(நர என்றால் மனிதன்,சிம்மம் என்றால் சிங்கம்) எந்த தோற்றம் ஹிரண்யகசிபுவின் இதயத்தில் மாபெரும் கிலியை உண்டு பண்ணியதோ,அதே தோற்றம் தான் பிரகலாதனுக்கு மிக்க கருணை வடிவமாகவும் காட்சி அளித்தது. எந்த விழிகள் அசுரனை அழிக்கும் உக்கிரத்தோடு வெறித்தனவோ,அதோ விழிகள் தன் பக்தருக்குக் கருணையைக் குறையில்லாமல் பொழிந்தன.
 
அப்பேர்ப்பட்ட நரசிம்மர் அவதரித்த திருத்தலம் அஹொபிலம். அஹொபிலம் - மேல் அஹொபிலம், கீழ் அஹொபிலம் என்று இரண்டு தளங்களாக அமைந்திருக்கிறது. மேல் அஹொபிலத்தில் மலைச் சாரல்களில் மடிப்புகளில்,மறைவான குகைப் பகுதிகளில் மகத்துவம் மிக்க நவநரசிம்மர்கள் அருள்பாலிக்கிறார்கள். ருத்ர ரூபமாய் மட்டுமே அறியப்பட்ட நரசிம்மரும் தன் மற்ற தோற்றங்களையும் சேர்த்து ஒன்பது நரசிம்மர்களாய் எழுந்தருளியிருப்பது மேல் அஹொபிலத்தில் மட்டும்தான்.
 
பேருந்துகளோ, தனியார் வாகனங்களோ,மேல் அஹொபிலத்தின் குறிப்பிட்ட பகுதி வரை தான் கொண்டு விடத் தயாராயிருக்கின்றன. அதற்கப்புறம் நடந்து செல்ல வேண்டும்.ராட்சஸக் கோப்பையின் விளிம்பில் நடப்பது போல் கவனமாக அடி எடுத்து வைத்து, மலைச்சரிவில் எட்டு கி.மீ. ஏறியதும், எதிரே பிரம்மாண்டமாக விசுவரூபமெடுத்து நிற்கிறது, உக்ரஸ்தமபம் இங்கே மலைப் பாறை இரண்டாகப்பிளந்து, இரு வெவ்வேறு பகுதிகளாகப் பிரிந்து நிற்பதைக் காணலாம்.சற்று உற்றுப்பார்த்தால்,பாறைப் பிளவின் அமைப்பில் நரசிம்மரின் திருமுகத் தோற்றத்தை உருவகப்படுத்திக்கொள்ள இயல்கிறது.
 
கிருதயுகத்தில் இப்பகுதியில் ஹிரண்யனின் அரண்மனை அமைந்திருந்தது. பிரகலாதனின் பிரார்த்தனைக்கு செவி சாய்த்து, ஆயிரம் தூண்கள் கொண்ட மண்டபத்தில் ஒரு தூணை உதைத்துப் பிளைந்து நரசிம்மராய் நாராயனன் வெளிப்பட்டது,இங்கே தான்!
 
ஒன்பது நரசிம்மர்களில் முதலாவதாக ஜ்வாலா நரசிம்மர். தூணைப் பிளந்து வெளிப்பட்ட நரசிம்மர் ஹிரண்யனை எந்த இடத்தில் வைத்து சம்ஹாரம் செய்தாரோ,அந்த இடத்தில்தான் ஜ்வாலா நரசிம்மரின் சன்னிதி அமைந்திருக்கிறது. கருடாச்சலம், தேதாச்சலம் மலைகளுக்கு இடையே அமைந்திருக்கும் அச்சலச்சாயா மேரு என்று அழைக்கப் பெறும் மலைக் குன்றத்தில் கவனமாக ஏறியதும், ஜ்வாலா நரசிம்மரின் ஆலயம். பாறைக்குக் கீழ், இயற்கையாய் அமைந்திருக்கும் திறந்த குகை அமைப்பு. குகைக்குள் நடு நாயகமாய், முக்கியமான மூன்று விக்கிரங்கள்.
 
மத்தியில் உக்கிர சொரூபமாய் நரசிம்மர்.எட்டுத்திருகரங்கள்.இடது கால் மடக்கி, வலது காலைத் தொங்கவிட்டு வீற்ற கோலம். மடியில் ஹிரண்யன். நரசிம்மரின் பாதம் அருகே,பிரகலாதன் பக்தியுடன் தொழுது நிற்கிறான். ஹிரண்ய வத சிற்பத்தின்  வலது புறத்தில் அவதாரத் தருணம் நாராயணன் சங்கு சக்கர தாரியாக, தூணைப் பிளந்த நரசிம்மராய் வெளிப்படும் தோற்றம்.ஹிரண்யனுக்கு வதத்தின் இடது புறத்தில் நரசிம்மருக்கும், ஹிரண்யனுக்கு இடையிலான போர்க்கோலம். சன்னிதியின் இன்னொரு புறம் கருடன் ஜ்வாலா நரசிம்மரின் தரிசனம் முடிந்து அடுத்தது, அஹொபில நரசிம்ம சுவாமி.
 
கருடாத்திரி,வேதாத்திரி மலைகளுக்கு நடுவே அமைந்துள்ள பள்ளத்தாக்கில் பவநாசினி நதிக்கரையில் அமைந்துள்ளது அஹொபில நரசிம்மர் ஆலயம். மூல சன்னிதி அமைந்து இருக்கும் பகுதி திறந்த முதலையின் வாய் போன்ற குறுகலான குகை அமைப்பு. குகையின் மத்தியில் அஹொபில நரசிம்மர். உருவத்தில் சிறியவராய் இருந்தாலும், நரசிம்மரின் உக்கிரம் அதிகம்.
 
மூலவர் சுயம்புவாகத் தோன்றிய மூர்த்தி. எண்ணெய் தீபத்தின் ஒளியில் வெள்ளி நயனங்கள் தகிக்கின்றன. மூலவருக்கு அருகிலேயே இலட்சுமி சமேதாராக உற்சவர். நேரெதிரில் மாட சன்னிதியில் பிரகலாதன்.இதை அடுத்து, மகாலெட்சுயின் செஞ்சுலட்சுமி தாயார் பத்மாசனத்தில் வீற்றிருக்கும் சன்னிதி அமைந்திருக்கிறது.
 
அடுத்து மாலோல நரசிம்மர். இலட்சுமி சேத்திரம். இந்த மலைக் குன்றங்களில், கனகபாயா ஆற்றின் கரையில் அமைந்திருக்கிறது. மாலோலரின் சிறு குகை ஆலயம்.
 
நரசிம்மரின் கோபம் தணிந்து மகா இலட்சுமி அவருடன் எழுந்தருளிய தலம் இது. அன்னையைத் தன் இடது மடியில் இருந்தி செளமய் ரூபமாய், இடது திருக்காலை மடக்கி, வலது திருக்காலைத் தொங்கவிட்டு சுக ஆசனத்தில் நரசிம்மர் இங்கே வீற்றிருக்கிறார்.
 
அடுத்தவர், கரோடகார நரசிம்மர் (க்ரோடம் என்றால் வரகம் என்று பொருள்) பவநாசினி ஆற்றின் கரையில், அமைந்துள்ள குகைக் கோவில் இது.
ஆலயத்தில் நாராயணின் இரண்டு அவதாரத் திருத்தோற்றங்கள்.
 
ஒன்றில் காட்டுப் பன்றியாக வாரக அவதாரம் எடுத்தத் தோற்றம். தென்திசை, வாரக சுவாமி நின்ற நிலையில் காட்சி அளிக்க, அவரது இடது தோளில் வீற்றிருக்கிறாள், பூமாதேவி. இன்னொரு பக்கம் இலட்சுமி நரசிம்மர்.
ஹிரண்யனை அழித்தபின், நரசிம்மரின் கோபத்தை தணிந்த இலட்சுமி தேவியுடன் அவர் எழுந்தருளியுள்ளார்.
 
கருடாதரி மலைத் தொடரின் மேற்குப்புறம் அமைந்திருக்கிறது.கரஞ்ச
நரசிம்மர் ஆலயம். மற்ற எந்த  நரசிம்மர் எழுந்தளியிருப்பது வியப்பேற்படுத்துகிறது.

இந்தத் திருக்கோலம் ஸ்ரீ ஆஞ்சநேயருக்காக எடுக்கப்பட்ட சிறப்புத் திருக்கோலம். மற்ற எந்த நரசிம்மரிடமும் காண முடியாத வில் ஆயுதம் தரித்து இங்கே நரசிம்மர் எழுந்தருளி இருப்பது வியப்பேற்படுத்துகிறது. இந்தத் திருக்கோலம் ஸ்ரீ ஆஞ்ச நேயருக்காக எடுக்கப்பட்ட சிறப்புத் திருக்கோலம்.
 
நவ நரசிம்மர்களில் ஆறாவது நரசிம்மர் பார்கவ நரசிம்மர். ஹிரண்யவதத் தோற்றத்தில்,மடியில் அசுரனைக் கிடத்தி, இரு கரங்களால் அவன் வயிற்றை கிழிக்கும் நிலையில் காணப்படுகிறார். மற்ற கரங்களில் சங்கும் சக்கரமும் தரித்திருக்கிறார். ஹிரண்யனுடைய வலது கையில் உயர்த்திய வாள் அப்படியே உறைந்திருக்கிறது. சுவாமியின் வலது பாதத்தருகே, பிரகலாதன் தொழுத நிலையில் நிற்கிறார்.
 
ஏழாவது நரசிம்மராகக் காணப்படுபவர், யோகானந்த நரசிம்மர்.ஹிரண்யவதம் முடிந்ததும், பிரகலாதனுக்கு நரசிம்மர் சில யோக முத்திரைகளை கற்பித்தார். ஒரு நிலையே இங்கு எழுந்தருளியிருக்கும் கோலம்.
 
எட்டாவது நரசிம்மராய்க் காணப்படுவர் சத்ரவட நரசிம்மர். கருடாத்ரி மலையில், கீழ் அஹோபிலம் ஆலயத்திற்குக் கிழக்கே அமைந்திருக்கிறது.

அஹோபில நரசிம்மர்களிலேயே மிகவும் சுந்தர ரூபத்துடன் காணப்படுபவர்,
சதரவட நரசிம்மர். அலங்கார புருஷராய், ஆபரணங்கள் தரித்து நரசிம்மர் இங்கே காணப்படுகிறார். இரண்டு மேற்கரங்களும் சங்கு, சக்கரங்களைத்
தரித்திருக்கின்றன். வலது கீழ்க்கரம் அபஹஸ்தமாக அருள் பாலிக்கிறது.
இடது கீழ்க்கரம் இடது தொடையில் முத்திரையாகப் பதிந்திருக்கிறது.
 
ஒன்பதாவது நரசிம்மராக, பவள நரசிம்மர். கருடாத்ரி மலையின் தென்புறம், அடர்ந்த காட்டுப் பகுதியில்,பவள நதிக்கரையில் அமைந்திருக்கிறது, பவள நரசிம்மர் ஆலயம். ஏழுதலை ஆதிசேஷன் படமெடுத்துக் குடை பிடித்திருக்க, வீற்ற நிலையில் இலட்சுமி நரசிம்மர்.
 
அடுத்து, கீழ் அஹோபிலத்தில் பிரகலாத வரதரின் ஆலயம்.ஆலயத்தில் நுழையும் முன் தெற்கே புஷ்கரணி குளத்தை அடுத்து அலங்காரமான உயரமான கோபுரம்.ஆலயத்தில் நுழைந்ததும், மூன்று பிராகாரங்கள். முகப்பில் ரங்க மண்டபம். அடுத்து ஒரு சிறு மண்டபம். அதை அடுத்த மூலவர் வீற்றிருக்கும் திருச்சன்னதி.கருவறையில் தீபஒளியில் பிரகலாதவரதர் எனும் அழைக்கப்பெறும் மூலவர்.
 
இங்கே, நர்சிம்மர் சாந்த சொரூபியாக, இலட்சுமி சமேதராக கிழக்கு நோக்கி இடது திருக்காலை மடக்கி,வலது திருக்காலைத் தொங்க விட்டு சுக ஆசனத்தில் வீற்றிருக்கிறார்.மூலவர் தவிர, சன்னதியில் உற்சவ மூர்த்திகளாக பிரகலாத வரதர், ஸ்ரீதேவி,
பூதேவி மற்றும் ஜ்வாலா நரசிம்மர்.
 
நாராயணன் பத்து அவதாரங்கள் எடுத்தார்.அதில் ஒற்றை அவதாரமான
நரசிம்மரே அஹோபிலத்தில் பத்து விதங்களாகத் தன்னை வெளிப்படுத்தி அஹோபிலத்திற்கு சேர்த்திருக்கிறார்.

தலத்தின் பெயர் : அஹோபிலம்.
பெருமாள் பெயர்: நரசிம்மர்
தாயார் பெயர் : இலட்சுமி
ஆந்திர மாநிலத்தில் கர்னூல் மாவட்டத்தில் இருக்கிறது அபிஹோபிலம்.
ஐதாபரத்திலிருந்து 330 கி.மீ தொலைவு.கடப்பாவிலிருந்து 112 கி,மீ
நந்தியாலிலிருந்து 65 கி.மீ