அனுமனின் பயன் 
கருதா பக்தி கதை!

ஆஞ்சநேயர் இருக்கும் ஆலயங்களில் பெரும்பாலும் பிரசாதமாக செந்தூரத்தை வழங்குவார்கள். மேலும் ஆஞ்சநேயர் உடல் முழுவதும் செந்தூரத்தை பூசி  ஆராதிப்பதை பார்த்திருக்கிறோம். இதற்கு சுவாரஸ்யமான ஒரு காரணம் உண்டு.

ராமராஜ்யம் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில், அரசவையில் கலந்து கொள்ள சீதா தேவி தயாராகிக் கொண்டிருந்தார். 

அப்போது ஒரு  சிறிது செந்தூரத்தை எடுத்து தன் நெற்றி வகிட்டில் இட்டுக் கொண்டார்.

சீதாதேவியை அரசவைக்கு அழைத்துச் செல்ல வந்த ராமனின் சேவகனான அனுமன் இதை கவனித்தார். 

“தாயே உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா ?” என்று கேட்டார். சீதா தேவியும் “தாராளமாக கேள்” என்றார்..

அன்னையே நீங்கள் 
ஏன் தினசரி உங்கள் வகிட்டிலும் சிந்தூரை வைத்துக் கொள்கிறீர்கள்” என்றார்.

மைந்தா, என் அன்பான கணவரின் நினைவு மட்டும்தான் எப்போதும் என்னுடம் இருக்க வேண்டும் என நினைத்தே செந்தூரத்தை வகிட்டில் இட்டுக் கொண்டேன். 

ஏன் என்றால் தூய்மையான செந்தூரத்தை 
எத்தனை அழித்தாலும் அது முழுவதுமாக அழியாமல் அதன் கறையை விட்டு வைக்கும்.

அது போலத்தான் என்னிடம் இருந்து என் கணவரின் நினைவை மாற்றவே முடியாது என்பதை காட்டவே அதை வகிட்டில் இட்டுக் கொண்டேன் என்றாராம் சீதாபிராட்டி.

மேலும் “என் கணவர் நீடூழி வாழ வேண்டும் என்பதற்காகவும் செந்தூரத்தை இட்டுக் கொண்டேன் என்றார்.. சீதா தேவி.

பிறகு அனுமன் சீதா தேவியை அரசவை வாயில் வரை சென்று விட்டு விட்டு. “தாயே நீங்கள் அரசவைக்கு செல்லுங்கள் நான் இதோ வந்து விடுகிறேன்” என்று கூறிவிட்டு  சென்று விட்டார்.

அனுமன் உடனே அயோத்தியின் கடை வீதிக்கு சென்று செந்தூரம் வாங்கி, 
தன் முகம் மற்றும் 
இதர பகுதிகளில் பூசிக்கொண்டார். 

மேலும் அச்செந்தூர மூட்டையைத் தரையில் கொட்டி, அதில் புரண்டு தன் உடல் முழுவதும் செந்தூரத்தைப் பூசிக்கொண்டார். 

அக்கோலத்துடனேயே அனுமன் அயோத்தியின் அரசவைக்குசென்றார்.

தன் உடல் முழுவதும் செந்தூரைப் பூசிக் கொண்டு அரசவைக்கு வந்த அனுமனை பார்த்து “அனுமா.. இது என்ன கோலம்?” என்று ராமன் கேட்டார்

அதற்கு அனுமன்..
அன்னை சீதாதேவி நெற்றி வகிட்டில் வைத்துக் கொள்ளும் 
சிறு செந்தூரத்தினால் தங்களின் நினைவை மாற்றவே முடியாது என்றும் அந்த சிந்தூரம் தங்களின் 
நீண்ட ஆயுளுக்கு வழி வகுக்கும் என்று சீதா தேவிக் கூறியதாகவும்

அன்னை சிறிய அளவில் இடும் சிறு அளவு செந்தூரத்தினால் தங்களின் நினைவை மாற்றவே முடியாது, மேலும் அது தங்களின் ஆயுளை நீட்டிக்க  உதவும் என்றால் உங்கள் மீது அளவற்ற பக்தி கொண்டிருக்கும் நான் என் உடல் முழுவதும் செந்தூரத்தை பூசிக் கொள்வதால், என்னிடமிருந்தும் தங்களின் நினைவை மாற்றவே முடியாது என்பதற்காகவும், செந்தூரம் தங்களின்  நீண்ட ஆயுளுக்கு வழி வகுக்கும் என்றால் நான்  தங்களின் பரிபூரண ஆயுளுக்காக என் உடல் முழுவதும் செந்தூரத்தை தினமும் பூசிக் கொள்வேன்” என்றார் அனுமன்

இதைக் கேட்ட ராமனின் கண்கள் அனுமனின் பக்தியையும்... வெகுளித்தனத்தையும்... நினைத்து கலங்கியது. அனுமனை கட்டித் தழுவிக் கொண்டார்.

கடவுளான ராமபிரான் மீது அனுமன் கொண்டுள்ள பயன் கருதாதபக்தியை வெளிப்படுத்தி காட்டவே அனுமன் சன்னதிகளில் செந்தூரத்தை பிரசாதமாகவும்... அனுமன் உடல் முழுவதும் செந்தூரத்தை பூசியும் வழிபடுகின்றனர்..!!