கோபத்தினால் எதுவுமே சாதிக்க முடியாது 

மஹா பாரதத்தில் ஒரு சமயம் ஸ்ரீகிருஷ்ணர், பலராமர், அர்ஜுனன் மூவரும் அடர்ந்த வனத்தின் வழியாகச் சென்று கொண்டிருந்தனர். 

இரவாகி விட்டது. மூவரும் ஓரிடத்தில் தங்கி விடிந்ததும் செல்லலாம் என்று எண்ணினார். 

வனத்தில் துஷ்ட மிருகங்கள் இருக்கும் என்பதால் மூவரும் ஒருசேரத் தூங்கக்கூடாது என்றும், ஜாமத்துக்கு ஒருவராகக் காவல் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தனர். 

அதன்படி கிருஷ்ணரும், பலராமரும் தூங்கச் செல்ல அர்ஜுனன் காவல் இருந்தான். 

அப்போது திடீரென புகை மண்டலம் சூழ்ந்தது. அதிலிருந்து ஒரு பயங்கர உருவம் வெளிப்பட்டது. 

அகன்ற நாசியும், தூக்கிய பற்களும், முட்டைக் கண்களுமாக இருந்தது அவ்வுருவம். 

மரத்தடியில் இருவர் தூங்குவதையும், ஒருவன் காவல் இருப்பதையும் கண்ட அவ்வுருவம் தூங்கும் இருவரின் அருகில் சென்றது. 

அதைக்கண்ட அர்ஜுனன் கோபத்துடன் அதைத் தடுத்தான். அப்போது அந்த உருவம் அவ்விருவரையும் தான் கொல்லப்போவதாகவும் அதற்கு அர்ஜுனன் துணை செய்யவேண்டும் என்றும் கேட்டது. அதைக் கேட்ட அர்ஜுனன், கோபம் கொண்டு அவ்வுருவத்தைத் தாக்கினான். அர்ஜுனனின் கோபம் அதிகமாக அதிகமாக, அவ்வுருவத்தின் பலமும் அதன் வடிவமும் பெருகியது. 

அர்ஜுனன் ஆக்ரோஷத்தோடு அதனுடன் போரிட, அது பூதாகாரமாய் விளங்கியது. இறுதியில் அர்ஜுனனைப் பலமாகத் தாக்கிவிட்டு மறைந்தது. 

இரண்டாம் ஜாமம் தொடங்க, பலராமரை எழுப்பிவிட்டு அர்ஜுனன் தூங்கச் சென்றான். பலராமர் காவல் இருந்தார். அப்போது, மீண்டும் அவ்வுருவம் அங்கு தோன்றி, அர்ஜுனனிடம் கூறியது போல பலராமரிடமும் கூறியது. 

அதைக்கேட்டு கோபம் கொண்ட பலராமரும் அதனுடன் சண்டையிட்டார். அவ்வுருவம் அடிபணிவதாய் இல்லை. பலராமரின் கோபம் அதிகமாக அதிகமாக, அவ்வுருவத்தின் பலமும் அதன் வடிவமும் பெரிதானது. 

பின் பலராமரையும் பலமாகத் தாக்கிவிட்டு அவ்வுருவம் மறைந்து விட்டது. மூன்றாம் ஜாமம் தொடங்க, பலராமர் கிருஷ்ணரை காவலுக்கு எழுப்பிவிட்டு தூங்கச் சென்றார். 

அப்போதும் அப்பொல்லாத உருவம் தோன்றியது. அதைப் பார்த்த கிருஷ்ணர், கடகடவெனச் சிரித்தார்.

ஏன் சிரிக்கிறாய்? என்றது அவ்வுருவம். உனது தூக்கிய பற்களையும், அழகான முட்டைக்கண்களையும் கண்டுதான் என்றார் கிருஷ்ணர், சிரிப்பை அடக்க முடியாமல். அவர் தன்னைக் கேலி செய்வதைக் கண்டு ஆக்ரோஷத்துடன் அது சண்டை போட்டது. கிருஷ்ணரோ புன்னகையை மாற்றாமலே, சண்டை போட்டார். கிருஷ்ணர் சிரிக்கச் சிரிக்க அவ்வுருவத்தின் பலமும் அதன் வடிவமும் குறைந்துகொண்டே வந்தது. கடைசியில் அவ்வுருவம் சின்னஞ்சிறு புழுவாக மாறி தரையில் நெளிந்தது. கிருஷ்ணர் அப்புழுவை எடுத்து ஒரு துணியில் முடிந்து வைத்தார். பொழுது விடிந்தது. 

பலராமரும், அர்ஜுனனும் எழுந்தனர். இருவரும் இரவில் ஒரு பயங்கர உருவம் வந்ததும், அவர்களைத் தாக்கியதும் அவ்வுருவம் வளர்ந்து வளர்ந்து பெரிதாகியது பற்றியும் பேசினர். அப்போது கிருஷ்ணர், துணியில் முடிந்திருந்த புழுவைக் காட்டி, 

நீங்கள் இருவரும் சண்டை போட்ட உருவம் இதுதான். 

நீங்கள் அதனுடன் சண்டை போடும்போது கடுமையாகக் கோபப்பட்டீர்கள். உங்கள் கோபம் அதிகரிக்க அதிகரிக்க அதன் பலமும் வடிவமும் அதிகரித்தது. நான் அதனுடன் சிரித்துக் கொண்டே சண்டை போட்டதால் இதன் பலமும் வடிவமும் குறைந்து கொண்டே வந்து புழுவாக மாறி விட்டது. 

வம்பு சண்டைக்கு வருபவனை விட்டு விட்டு புன்னகையோடு வெளியேறி விட்டால், அவன் புழுவுக்குச் சமமாகி விடுவான். கோபத்தையும் குறைப்பவனே ஞானி என்றார் கிருஷ்ணர்.

ஆம் 

நீங்கள் கோபத்தினால் சாதிக்க முடியாததை ஒரு புன்னகை சாதித்து விடும்.

பிருகு பரமாத்மா ஸ்ரீமந் மஹாவிஷ்ணுவை நெஞ்சிலே எட்டி உதைத்தும் கோபப்படாமல் சமயோஜித புத்தியால் மும்மூர்த்திகளில் மிகவும் பொறுமைசாலி என்ற பட்டம் பெற்றார்.

ஹரி ஸர்வோத்தமா 
மூல ராமோ விஜயதே 

ஜெய் ஸ்ரீராம்
சர்வம் கிருஷ்ணார்பணமஸ்து.