பத்ரிகாசிரமம் என்னும் திருத்தலத்தில் ஸ்ரீநாராயண பக்தர் ஒருவர் வசித்து வந்தார். 

அவர் பரம ஏழை.  

தினமும் மக்களிடம் பிட்சை ஏற்று உண்டு வந்தார். 

எல்லா உயிர்களையும் நேசிக்கும் குணம் கொண்டவர். 

நாளைய பாடு.. நாராயணன் பாடு.. என்ற அளவில் வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. 

தனது குடிசை வாசலில் இருபுறமும் பெரிய தொட்டி வைத்து அதில் தண்ணீர் நிரப்பி வைப்பது அவரது வழக்கம். பறவை, விலங்குகள் தாகம் தணிய நீர் அருந்திச் செல்லும்.

வழிப்போக்கர்களும் அவர் வீட்டில் தண்ணீர் அருந்தி இளைப்பாறிச் செல்வர்.  

தண்ணீர் தானத்தால், ஏழை பக்தரின் புண்ணியக் கணக்கு அதிகரித்தது. 

சுமார் 30 வருடங்களுக்கு முன்பு வரை ஏதோ ஒரு வீட்டில் தண்ணீர் தாகமாக இருக்கிறது என்று கேட்டால் யாராக இருந்தாலும் தன் வேலையை விட்டு விட்டு உடனே அவர்களை உட்கார வைத்து கொஞ்சம் பொறுங்கள் உடனே வருகிறேன் என்று தண்ணீர் கொண்டு வருவார்கள்.

ஆனால் இப்போது தண்ணீர் எல்லாம் இல்லை வெளியே போங்க என்று கூறுகின்றனர்.

இது எவ்வளவு பெரிய அபசாரம்.

புண்ணியம் செய்யவில்லை என்றாலும் பாவம் செய்யக்கூடாது.

இவ்வாறு அந்த பக்தரின் புண்ணியம் அதிகரித்தால், இந்திர பதவியே கிடைக்கும் என்பது நிதர்சனமான உண்மை. 

இதை அறிந்த இந்திரன், தன் பதவிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று அஞ்சினான். 

அக்னிதேவனை அழைத்தான். 

இருவரும் வயதானவர்கள் போல உருமாறி அவரது வீட்டுக்கு வந்தனர். 

பக்தரே.! வெயிலில் நடந்து வந்ததால் களைப்பாக இருக்கிறது. 

குடிக்க
தண்ணீர் கொடுங்கள்!, என்றான் இந்திரன். 

இதோ! குடியுங்கள்!, என்று சொல்லி செம்பு நிறைய தண்ணீர் கொடுத்தார் அந்த ஏழை பக்தர். 

அதைக் குடித்துவிட்டு, எங்களுக்கு இன்னும் தாகம் அடங்கவில்லையே! என்றனர். 

தண்ணீர் எடுக்கச் சென்ற பக்தருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 

அக்னிதேவன், அவர் வீட்டில் இருந்த தண்ணீரை எல்லாம் வற்றச் செய்து விட்டார்.  

இதை அறியாத பக்தர், இதென்ன மாயஜாலம்! துளி அளவு தண்ணீர் கூட இல்லாமல் எங்கே மறைந்தது?, என்று ஆச்சரியப்பட்டார். 

வந்தவர்களுக்கு தண்ணீர் கூட கொடுக்க முடியாத பாவம் தன்னைப் பற்றுமோ என பயப்படவும் செய்தார்.  

த்ரவுபதியின் மானம் காக்க வந்த கிருஷ்ணா! எனக்கும் உதவி செய்ய இப்போது ஓடி வா! இந்த முதியவர்களின் தாகம் தணிக்க ஏதாவது வழிகாட்டு!, என்று வேண்டியபடி, பக்தர் கைகளை குவித்து நின்றார்.  

என்ன அதிசயம்..!உடனே அந்த காலி பாத்திரத்தில் தண்ணீர் நிரம்பி வழிந்து ஓடியது..!

அக்னி தேவனால் அந்த நீரை உறிஞ்ச முடியவில்லை. 

தண்ணீர் பெருக்கெடுத்து வந்துகொண்டே இருந்தது. 

தனக்கு தோல்வி ஏற்பட்டதை உணர்ந்த இந்திரன் அக்னிதேவனுடன் தேவலோகத்திற்கு சென்று விட்டான்.  

பின்பு, பக்தர் திருமாலை வேண்டிக் கொண்டு, வீட்டிலேயே ஒரு கிணற்றைத் தோண்டினார். 

அதில் சுவையான தண்ணீர் கிடைத்தது. பலரும் வந்து கிணற்றில் நீர் இறைத்து குடித்தனர். 

இதைக் கண்ட இந்திரனுக்குப் பொறாமை அதிகமானது. 

தொடர்ந்து மழையே இல்லாமல் பத்ரிகாசிரமத்தில் வறட்சியை உண்டாக்கினான். 

குடிநீரின்றி மக்கள் திண்டாடினர். ஆனால், அந்த ஏழை பக்தரின் வீட்டு கிணறு மட்டும் வற்றவில்லை. மக்கள் அங்கு தண்ணீர் எடுத்து ஆனந்தமாகக் குடித்தனர். 

இந்திரன் இப்போதும் தான் தோற்றுவிட்டதை உணர்ந்தான்.  

பூலோகம் வந்த இந்திரன், அந்த பக்தரின் தர்மசிந்தனையைப் பாராட்டினான். 

பக்தர் வீட்டுக் கிணற்றில் எப்போதும் நீர் வற்றாமல் இருக்கவும், அந்த நீரைக் குடிப்பவர்கள் சொர்க்கத்தில் வாழும் பாக்கியம் பெறவும் வரம் கொடுத்தான். அந்த ஏழையையும் தன்னோடு அழைத்துக் கொண்டு தேவலோகம் புறப்பட்டார்.

(செய்த தர்மம் எப்போதும் நம்மை கைவிடாது..!)