காஞ்சிபுரம் - கலவை சாலையில் உள்ள ஐயங்கார் குளம் எனும் ஊரில் உள்ள சஞ்சீவிராயர் கோயில் அருகே நடவாவிக்கிணறு உள்ளது. இதனுள்ளே மண்டபம் ஒன்று உண்டு. 

சித்ரா பௌர்ணமியன்று மட்டும் இக்கிணற்றிலுள்ள நீரை வெளியேற்றி விடுவார்கள். அன்று மாலை, அடியில் உள்ள மண்டபத்தில் காஞ்சி ஶ்ரீவரதராஜப்பெருமாள் எழுந்தருள்வார்.

வளர்பிறையில் பிரம்மாவின் வேள்வியில் இருந்து அவதரித்தவர் ஶ்ரீவரதராஜ பெருமாள் என்கிறது தலபுராணம். சித்ரா பெளர்ணமி தினத்தில் பிரம்மதேவன் வரதரை வழிபடுவதாக ஐதீகம். இங்கே ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி அன்று நடவாவி உற்சவமாகக் கோலாகலமாகக் கொண்டாடப் படுகின்றது.
சித்ரா பௌர்ணமி - நடவாவி உற்சவம்:

காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் கோயிலில் யாத்திரையை தொடங்கும் வரதர், நான்கு மாடவீதிகளில் வலம் வந்து, செவிலி மேடு, தூசி, அப்துல்லாபுரம், ஐயங்கங்கார் குளம் வழியாக நடவாவி கிணற்றுக்கு வருகிறார்.

வழிநெடுக சாலைகளை அலங்கரித்து, தண்ணீர் தெளித்து தோரணங்களால் அழகுப்படுத்தி வைத்திருப்பார்கள் மக்கள். புளியோதரை, சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல், தயிர்சாதம், சாம்பார் சாதம் என வழியெங்கும் அன்னதானமும் நடைபெறும். வெயிலில் வருபவர்களின் தாகம் தணிக்க ஆங்காங்கே பானகம், மோர், தண்ணீரும் வழங்கப்படுகிறது

இரண்டாம் நாள் ராமர், லட்சுமணன், சீதாதேவி ஆகியோர் நடவாவி கிணற்றுக்கு வந்து செல்கிறார்கள். அதைத் தொடர்ந்து உள்ளூர் பக்தர்கள் கிணற்றில் நீராடி மகிழ்கின்றனர். சித்திரை பௌர்ணமி முடிந்தும் 15 முதல் 20 நாள்வரை நீராடலாம்.

நடவாவி கிணற்றில் இருந்து கிளம்பும் வரதருக்கு, பாலாற்றில் வைத்து பூஜை நிகழும். ஆற்றில் நான்குக்கு நான்கு அடி அளவில் ஊறல் (அகழி போன்ற பள்ளம்) எடுத்து, பந்தல் அமைக்கப்படும். அங்கே அபிஷேகம் நடைபெறும். இதற்கு `ஊறல் உற்சவம்’ என்று பெயர். அதைத் தொடர்ந்து காந்தி ரோடு வழியாக கோயிலுக்கு வந்தடைவார் வரதர். இந்த வைபவத்தைத் தரிசித்தால் வாழ்வில் சகல சுபிட்சங்களும் பொங்கிப் பெருகும் என்பது நம்பிக்கை.