Sri Paambanaiyappa Perumal
மூலவர் : பாம்பணையப்பன் (கமலநாதன்)
தாயார் : கமலவல்லி நாச்சியார்
தீர்த்தம் : பம்பை தீர்த்தம்
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருவண்வண்டூர்
ஊர் : திருவண்வண்டூர்
மாவட்டம் : ஆழப்புழா
மாநிலம் : கேரளா
மங்களாசாசனம் : நம்மாழ்வார்

இடரில் போகம் மூழ்கி இணைந்தாடும் மடவன்னங்காள் விடலில் வேதவொலி முழங்கும் தண்திருவண் வண்டூர் கடலின் மேனிப் பிரான் கண்ணனை நெடுமாலைக் கண்டு உடலம் நைந்து ஒருத்தி உருகுமென்று உணர்த்துமினே.
- நம்மாழ்வார்


திருவிழா
மாசிமாதம் அனுஷம் நட்சத்திரத்தில் கொடியேற்றம் செய்து பத்து நாள் திருவிழா சிறப்பாக நடைபெறும்.

தல சிறப்பு
பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 85 வது திவ்ய தேசம். பஞ்சபாண்டவர்கள் வன வாசத்தின் போது இப்பகுதிக்கு வந்ததாகவும், அப்போது இக்கோயில் மிகவும் சிதிலமடைந்திருந்ததை கண்டு, அதை நகுலன் புதுப்பித்ததாகவும் கூறப்படுகிறது. எனவே இதை நகுலனால் உண்டாக்கப்பட்ட தலம் என்றே இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

பொது தகவல்
கேரளாவின் புகழ்பெற்ற பம்பை நதியின் வடக்கே இத்தலம் அமைந்துள்ளது. "தேறுநீர் பம்பை வடபாலைத் திருவண்வண்டூர்' என நம்மாழ்வார் பாடியுள்ளார். கேரளாவில் பஞ்சபாண்டவர்கள் பிரதிஷ்டை செய்த தலங்களில் இங்கு தான் அடிக்கடி விழாக்களும், முக்கியமான நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

பிரார்த்தனை
வேண்டுபவர்களுக்கு வேண்டும் வரம் தரும் தலம்.

நேர்த்திக்கடன்
பெருமாளுக்கு பால்பாயாசம் நைவேத்யமாக படைக்கப்படுகிறது.

தலபெருமை
இவ்வூரில் பூமியை தோண்டும் போது புதிய பெருமாள் விக்ரகங்கள் கண்டெடுக்கப்பட்டு, அதை இக்கோயிலுக்கு கொண்டுவந்து புதிய சன்னதிகளும் மண்டபங்களும் கட்டப்பட்டன. இக்கோயில் வட்டவடிவமான கருவறையுடன் அமைந்திருப்பதும் பெருமாள் சங்கு, சக்கரத்துடன் மேற்கு நோக்கி நின்ற நிலையில் அருள்பாலிப்பதும் மிகவும் சிறப்பு. இக்கோயிலின் மேற்கு புற வாசலில் நுழையும் போது வாசலின் மேல், காளிங்கன் மீது கண்ணன் நர்த்தனம் ஆடுவது போல் அமைந்திருக்கும் சிற்பம் பேரழகு வாய்ந்தது. அந்த கண்ணனை தாங்கி நிற்கும் இரண்டு தூண்களின் இரண்டுபுறமும் தசாவதாரக்காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளது.மூலவரின் விமானம் சகல வேத விமானம். பெருமாளை நாரதர், மார்க்கண்டேயர் ஆகியோர் தரிசனம் செய்துள்ளனர்.

தல வரலாறு
ஒரு முறை பிரம்மனுக்கும் நாரதருக்கும் வாக்குவாதம் உண்டாகிறது. இதில் நாரதனை பிரம்மா சபித்து விடுகிறார். இதனால் வருத்தமடைந்த நாரதர் பிரம்மனை விட்டு பிரிந்து இத்தலம் வந்து பெருமாளை நோக்கி கடும் தவம் புரிந்து, சகல சிருஷ்டிகளையும் பற்றிய தத்துவ ஞானத்தை தனக்கு போதிக்க வேண்டுமென வேண்டுகிறார். இவரது தவத்தால் மகிழ்ந்த பெருமாள் வேண்டிய வரம் தந்தருளினார்.எனவே பெருமாளே அனைத்தும் என்றும், அவரை வழிபடும் முறை மற்றும் துதிப்பாடல்கள் அடங்கியதாக நாலாயிரம் அடிகள் கொண்ட "நாரதீய புராணம்' என்ற நூலை இத்தலத்தில் நாரதர் அருளியதாக வரலாறு கூறுகிறது.

அமைவிடம்
ஆழப்புழை மாவட்டம் செங்கணூரிலிருந்து 6 கி.மீ. தூரத்தில் திருவண்வண்டூர் உள்ளது.

அருகிலுள்ள ரயில் நிலையம் : செங்கணூர்

அருகிலுள்ள விமான நிலையம் : திருவனந்தபுரம்

தங்கும் வசதி
ஆழப்புழையில் உள்ள விடுதிகளில் தங்கிக்கொண்டு கோயிலுக்கு சென்று வரலாம்.

திறக்கும் நேரம்
காலை 4.30 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி
அருள்மிகு பாம்பணையப்பன் திருக்கோயில், திருவண்வண்டூர் - 686 109. ஆழப்புழை மாவட்டம், கேரளா மாநிலம்.