Aranmula Parthasarathy Temple

Aranmula Parthasarathy Temple 

மூலவர் : திருக்குறளப்பன் (பார்த்தசாரதி)
அம்மன்/தாயார் : பத்மாசனி
தீர்த்தம் : வியாச தீர்த்தம், தேவபுஷ்கரிணி
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : ஆரம்முளா
ஊர் : திருவாறன் விளை
மாவட்டம் : பந்தனம்திட்டா
மாநிலம் : கேரளா
மங்களாசாசனம் : நம்மாழ்வார்

ஆகுங்கொல் ஐயமொன்றின்றி அகலிடம் முற்றவும் ஈரடியே ஆகும் பரிசு நிமிர்ந்த திருக்குறளப்பன் அமர்ந்து உறையும் மாகம் திகழ் கொடிமாடங்கள் நீடு மதிள் திருவாறன்விளை மாகந்த நீர் கொண்டு தூவி வலஞ் செய்து கை தொழக் கூடுங் கொலோ.
- நம்மாழ்வார்


திருவிழா
தைமாதம் திருவோண நட்சத்திரத்தில் ஆறாட்டு திருவிழா சிறப்பாக நடைபெறும்.

தல சிறப்பு
பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 84 வது திவ்ய தேசம். இத்தலத்தில் அர்ஜுனனர் பிரதிஷ்டை செய்த பார்த்தசாரதி சிலை உள்ளது. இதற்கு தற்போது தங்கக்கவசம் சாற்றப்பட்டு வழிபாடு நடக்கிறது.

பொது தகவல்
கேரளாவின் புகழ் பெற்ற பம்பை நதி இக்கோயிலின் வடக்கு வாசல் வழியாக செல்கிறது. பரசுராமருக்கு இங்கு தனி சன்னதி உண்டு.

பிரார்த்தனை
குழந்தைகள் உடல் நிலை சரியில்லாத போது வன்னி மரக் காய்களை வாங்கி அவர்களது தலையை சுற்றி எறிந்தால், அர்ஜுனன் அம்பினால் எதிரிகள் ஓடுவது போல, நோய் விலகும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை.

நேர்த்திக்கடன்
இங்கும் குருவாயூர் போல துலாபாரம் கொடுக்கும் முறை நடைமுறையில் இருக்கிறது. தங்களது கோரிக்கை நிறைவேற இங்கு வன்னிமரக்காய்களை துலாபாரமாக கொடுக்கிறார்கள்.

தலபெருமை Aranmula Parthasarathy Temple
இத்தல பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். மூலவர் விமானம் வாமன விமானம் எனப்படுகிறது. இவரை வேதவியாசர், பிரம்மா ஆகியோர் தரிசனம் செய்துள்ளனர். ஒரு முறை பிரம்மனிடம் இருந்து வேதங்களை மது, கைடபன் என்ற அரக்கர்கள் அபகரித்து சென்றனர். வேதங்களை மீட்டுத்தரும்படி பிரம்மா பெருமாளை வேண்டினார். பிரம்மனின் வேண்டுகோளுக்கிணங்க பெருமாள் அரக்கர்களை அழித்து வேதங்களை மீட்டுத்தந்தார். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தான் பிரம்மா இத்தலத்தில் பெருமாளை நோக்கி தவமிருந்ததாக கூறுவர். இங்கு அர்ஜுனன் தன் ஆயுதங்களை ஒளித்து வைத்ததாக கூறப்படும் வன்னி மரத்திலிருந்து குண்டு முத்து போல் உதிரும் மரக்காய்களை இத்தலத்தின் துவஜஸ்தம்பத்தின் முன்பு குவித்து வைத்து விற்கிறார்கள்.

தல வரலாறு
பாரதப்போரில் கர்ணனின் தேர்ச்சக்கரம் பூமியினுள் பதிந்து விட்டது. அதனைத்தோள் கொடுத்து தூக்கி நிறுத்தி மீண்டும் போர்புரிய நினைத்தான் கர்ணன். அந்த நேரத்தில் அர்ஜுனன் கர்ணன் மீது அம்பெய்தியதால் இறந்து போனான். இவ்வாறு ஆயுதம் ஏதும் இல்லாமல் இருந்த கர்ணனை கொன்றது அர்ஜுனனுக்கு நியாயமாக படவில்லை. யுத்த தர்மத்தின்படி இது பெரும் பாவம் என்றும், அதிலும் தன் போன்றோர் செய்யத்தகாத காரியமென்றும் பெரிதும் வருந்தினான் அர்ஜுனன். பஞ்ச பாண்டவர்கள் ஒரு முறை கேரள பகுதிக்கு வந்த போது, ஒவ்வொருவரும் ஒரு பெருமாள் தலத்தை புதுப்பித்து வழிபாடு செய்தனர். இதில் அர்ஜுனன் இத்தலத்தை புதுப்பித்து வழிபாடு செய்ததாகவும், இத்தலத்தின் அருகில் இருந்த வன்னி மரத்தில் தனது ஆயுதங்களை மறைத்து வைத்திருந்ததாகவும் புராணம் கூறுகிறது. போரில் கர்ணனை யுத்த தர்மத்திற்கு மாறாக கொன்றதால், தன் மன நிம்மதிக்காகவும், போரில் பிற உயிர்களை கொன்ற பாவம் போக்கவும் அர்ஜுனன் இத்தலத்தில் தவம் செய்ததாகவும், இவனது தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள் பார்த்தசாரதியாகவே இவனுக்கு காட்சி கொடுத்ததாகவும் ஐதீகம்.

அமைவிடம்
செங்கணூரிலிருந்து (10கி.மீ) ஆரமுளா வழியாக பந்தனம்திட்டா செல்லும் பஸ்சில் வஞ்சிப்பாடியில் இறங்கி கோயிலுக்கு செல்ல வேண்டும். கேரளாவின் அனைத்து மாவட்டத்திலிருந்-தும் செங்கணூருக்கு பஸ் வசதி உள்ளது

அருகிலுள்ள ரயில் நிலையம் : செங்கணூர்

அருகிலுள்ள விமான நிலையம் : திருவனந்தபுரம்

தங்கும் வசதி :
திருவனந்தபுரம் மற்றும் பத்தனம் திட்டாவில் உள்ள விடுதிகளில் தங்கிக்கொண்டு கோயிலுக்கு சென்று வரலாம்.

திறக்கும் நேரம் :
காலை 4.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி :
அருள்மிகு திருக்குறளப்பன் திருக்கோயில், ஆரமுளா (திருவாறன்விளை) - 689 533 பந்தனம்திட்டா மாவட்டம், கேரளா மாநிலம்.