வேங்கடவாணன் ( நவதிருப்பதி - 7)
மூலவர் : வேங்கட வாணன், ஸ்ரீநிவாசன்
உற்சவர் : மாயக் கூத்தர்
தாயார் : அலமேலு மங்கைத் தாயார், கமலாவதி, குழந்தைவல்லித் தாயார்.
தீர்த்தம் : பெருங்குளத்தீர்த்தம்
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்      
புராண பெயர் : திருக்குளந்தை
ஊர் : பெருங்குளம்
மாவட்டம் : தூத்துக்குடி
மாநிலம் : தமிழ்நாடு
மங்களாசாசனம் : நம்மாழ்வார்

கூடச் சென்றேன் இனியென் கொடுக்கேன் கோல்வளை நெஞ்சத் தொடக்க மெல்லாம் பாடற்றொழிய இழிந்து வைகல் பல்வளையார் முன் பரிசழிந்தேன் மாடக்கொடி மதிள் தென்குளந்தை வண்குட பால் நின்ற மாயக் கூத்தன் ஆடற் பறவை யுயர்த்த வல்போர் ஆழி வளவனை யாதரித்தே.
- நம்மாழ்வார்

திருவிழா
வைகுண்ட ஏகாதசி

தல சிறப்பு
பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 95 வது திவ்ய தேசம். நவ திருப்பதிகளில் இது 7 வது திருப்பதி. நவகிரகங்களில் இது சனி பகவானுக்குரிய தலம்.

பொது தகவல்
இத்தலத்தில் வேங்கட வாணன் பெருமாள் ஆனந்த நிலைய விமானத்தின் கீழ் கிழக்கே திருமுக மண்டல நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

பிரார்த்தனை
அவரவர்க்கு உள்ள கிரக தோஷங்கள் நீங்க நவதிருப்பதி வந்து வணங்கி வழிபட்டால் கிரக தோஷம் நீங்கும்.

நேர்த்திக்கடன்
பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.

தலபெருமை
நவதிருப்பதிகள் என்றழைக்கப்படும் ஒன்பது வைணவ க்ஷேத்திரங்களும், நவகிரகங்களுடன் தொடர்புடையவை எனக்கருதி வழிபடப்பட்டு வருகிறது. ஒன்பது திருப்பதிகளிலும் உள்ள பெருமா‌ளே நவகிரகங்களாகக் கருதப்பட்டு வழிபடப்படுகிறது. அதன்படி
1. சூரியன் : ஸ்ரீ வைகுண்டம்
2. சந்திரன் : வரகுணமங்கை (நத்தம்)
3. செவ்வாய் : திருக்கோளுர்
4. புதன் : திருப்புளியங்குடி
5. குரு : ஆழ்வார்திருநகரி
6. சுக்ரன் : ‌தென்திருப்பேரை
7. சனி : பெருங்குளம்
8. ராகு : 1. இரட்டைத் திருப்பதி ( தொலவில்லிமங்கலம்)
9. கேது : 2. இரட்டைத் திருப்பதி

சோழநாட்டில் அமைந்துள்ள நவகிரகங்களுக்கு ஒப்பாக இப்பாண்டி நாட்டு நவதிருப்பதிகள் நவகிரகங்களாக போற்றப்படுகிறது. இங்கு பெருமாளே நவகிரகங்‌களாக செயல்படுவதால் நவ கிரகங்களுக்கு என தனியே சன்னதி அமைக்கப்படுவதில்லை .அவரவர்க்கு உள்ள கிரக தோஷங்கள் நீங்க நவதிருப்பதி வந்து வணங்கி வழிபட்டால் கிரக தோஷம் நீங்கும். இவற்றை தரிசிக்க ஒவ்வொரு ஊருக்கும் பஸ் ஏறிச் சென்று வருவது சிரமம். நாள் பிடிக்கும். அ‌தைவிட கார் ஒன்று அமர்த்தி சென்று வந்தால் ஒ‌‌ரே நாளில் அனைத்துத் தலங்களையும் தரிசித்து விடலாம். சென்னையில் இருப்பவர்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் ஏற்பாடு செய்து தருகிறது. மாதம் இருமுறை சென்னையிலிருந்து நடத்தப்படும் இச்சுற்றுலா முதல் மற்றும் மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் புறப்படுகிறது. புதன் விடிகாலையில திரும்பிவிடலாம்.

தல வரலாறு
வேதாசரன் என்ற அந்தணருக்குப் பிறந்த கமலாவதி என்ற பெண் பகவானைக் குறித்து தவம் செய்ய, பகவான் காட்சி கொடுத்து விவாகம் செய்து கொண்டதாக ஸ்தல வரலாறு. பாலிகை தவம் செய்த இடம் என்பதால் பாலிகை வனம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு அச்மஸாரன் என்னும் அசுரன் பகவானுடன் யுத்தம் செய்ததாகவும் பகவான் அ‌‌வனை வீழ்த்தி அவன் மேல் நாட்டியமாடி அழித்ததாகவும் சொல்வார்கள். தேவர்கள் பிரார்த்தனைப்படி மாயக்கூத்தன் என்ற திருநாமம் பெற்றார். இத்தலத்தில் கருடன் பெருமாளுடன் உற்ஸவராக பக்கத்தில் எழுந்தருளியுள்ளார்.

அமைவிடம் :
திருப்புளியங்குடியில் இருந்து ‌அதே சாலையில் 6 மைல் தொ‌லைவில் உள்ளது. நெல்லை, திருச்செந்தூரிலிருந்து பஸ்ஸில் சென்று தரிசிக்கலாம். எனினும் வாடகைக் கார், அல்லது வேன் எடுத்துகொள்வது நலம்.

திறக்கும் நேரம் :
காலை 7.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி :
அருள்மிகு வேங்கட வாணன் திருக்கோயில்,
பெருங்குளம் - 628 752 திருக்குளந்தை தூத்துக்குடி மாவட்டம்.