Thulasi Poojai | துளசி பூஜை
முன்னொரு காலத்தில் தேவர்களும், அசுரர்களும் ஒன்றுகூடி சாவா மருந்தாகிய அமிர்தத்தைப் பெற முயன்றனர். அப்பாற் கடலிலிருந்து கற்பகத்தரு, ஐராவதம், காமதேனு, மகாலட்சுமி, சந்திரன் ஆகியன உண்டாயின. ஸ்ரீமகாவிஷ்ணுவின் ஆனந்தக்கண்ணீர் பெருகி, அத்தி வலை அமிர்த கலசத்தில் விழுந்தது.
அக்கலசத்தின்றும் பச்சை நிறத்துடன் ஸ்ரீதுளசி மகாதேவி தோன்றினாள். துளசி, லட்சுமி, கௌதுஸ்பம் என்ற மூன்றை மட்டும் மகாவிஷ்ணு வைத்துக்கொண்டு ஏனையவற்றைத் தேவர்களுக்கு வழங்கி விட்டார். துளசி தளத்தில் 33 கோடி தேவர்கள், 12 சூரியர், 8 வசுக்கள், அசுவிணிதேவர் இருவர் ஆகியோர் உறைகின்றனர்.
இலையின் நுனியில் பிரமன், மத்தியில் மாயோன் மற்றும் லட்சுமி சரசுவதி, காயத்ரி, பார்வதி முதலானோர் வசிக்கின்றனர். துளசியை நினைத்தால் பாவம் போகும். துளசியைக் காப்பாற்றுபவன் பரமாத்மா ஆகின்றான். துளசியை வழிபட்டால் ஆயுள் பலம் புகழ் செல்வம் மகட்பேறு முதலியன பெருகும். துளசி காஷ்ட (கட்டை) மாலையைக் கழுத்தில் அணிந்தால் பாவங்கள் நீங்கும். துளசி தீர்த்தத்தைப் பருகினவர் பரமபதம் செல்வர்.

துளசி பூஜை செய்வதால் எட்டுவகை செல்வங்களும் கிட்டும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் கைகூடும். சுமங்கலிகள் சுகமுடன் நீடூழி வாழ்வர் என்பது நம்பிக்கை. வீட்டில் துளசிமாடம் இல்லாதவர்கள் பெருமாள் கோவிலில் உள்ள துளசி மாடத்திற்கு நெய் விளக்கேற்றி வழிபட்டால் சுகமான வாழ்வு கிட்டும்.