இறைவனை துதிக்க உதவும் ஜெப மாலைகள்
ஜெப மாலைகளைப் பயன் படுத்தி மந்திர ஜெபம் செய்வது, உலக அளவில் பரவலாக உள்ள வழக்கமாகும். குறிப்பிட்ட ஒரு காரியம் நிறைவேற அல்லது மற்ற பிரார்த்தனைகளின் அடிப்படையில் மானசீகமாக அல்லது மெதுவான உச்சாரணம் மூலம் குறிப்பிட்ட தெய்வத்திற்கான மந்திரம் அல்லது சுலோகத்தை தியானிப்பது ‘ஜெபம்’ ஆகும். ஜெபத்தின் போது, தெய்வம் மலர்ந்த கண்களுடனும், ஆசீர்வதிக்கும் கைகளுடனும் அருள் புரிவதாக மனதில் பாவனை செய்ய வேண்டும் என்பது ஆன்மிக மனோதத்துவமாகும்.

எண்ணிக்கை :

பொதுவாக ஜெபமாலை 108, 54 அல்லது 27 மணிகளால் அமைக்கப்படுகிறது. அவற்றில், புத்திரஜீவமணி மாலை, சங்கு மணி மாலை, பவள மணி மாலை, வைஜந்தி மாலை, ஸ்படிக மாலை, ருத்ராட்ச மாலை, தாமரைமணி மாலை, முத்துமணி மாலை, நவரத்தின மற்றும் உபரத்தின மாலை, சந்தன மாலை, துளசிமணி மாலை, பொன் மணி மாலை, தர்ப்பை பவித்திர முடிச்சு மாலை என்று பல வகைகள் உள்ளன.

ஜெபமாலை பிறரது கண்களில் படுவது போல ஜெபம் செய்வதை தவிர்க்கவும், ஜெபத்தை தனியிடங்களில் செய்வதையும் சாஸ்திரங்கள் வலியுறுத்தியுள்ளன. கோவில், மலைப்பகுதி, கோசாலை, மரங்கள் சூழ்ந்த வனம், ஆற்றங்கரை மற்றும் கடற்கரை ஆகிய இடங்கள் அதற்கு உகந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

ஜெப மாலையின் மணிகள் 27, 54 மற்றும் 108 என்ற எண்ணிக்கையில் கோர்த்து வைக்கப்பட்டிருக்கும். அவற்றில் தனித்து உயர்ந்திருக்கும் ஒரு மணியானது ‘மேரு’ என்று சொல்லப்படும். அமானுஷ்யமான சக்திகளை அடைய விரும்புபவர்கள், மனித அல்லது விலங்குகளின் எலும்புகளால் தயாரிக்கப்பட்ட ஜெப மாலைகளை உபயோகிப்பதாகவும் தகவல்கள் உள்ளன.

தாமரைமணி மாலை :

பொருளாதார முன்னேற்றத்தைத் தரவல்ல பிரபஞ்ச ரகசியங்களில் ஒன்றாக தாமரை மணியை நமது முன்னோர்கள் பயன்படுத்தி வந்துள்ளார்கள். பணத்தை ஈர்க்கும் பல வகை பொருட்களில் தாமரை மணிக்கு முதலிடம் என்பதாகவும் நம்பிக்கை இருக்கிறது. மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படும் தாமரைப் பூவிலிருந்து கிடைக்கும் மணியாக இருப்பதால், லட்சுமி கடாட்சம் பெற்றது என்ற கருத்தும் உண்டு.

நல்ல எண்ணங்கள் உருவாகவும், அவற்றை செயல்முறைப்படுத்தும் சக்தியை அளிக்கும் சக்தி பெற்றதாகவும் தாமரை மணி கருதப்படுகிறது. இனம், மொழி, மதம் என்ற வித்தியாசங்கள் இல்லாமல் இந்த மாலை உபயோகத்தில் உள்ளது. குறிப்பாக, பழங்காலம் முதல் தாமரைமணியை ஜெப மாலையாக பயன்படுத்தி வந்திருக்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.

வைஜந்தி மாலை :

வைஜந்தி (வைஜெயந்தி அல்ல) என்ற செடி வகையில் இருந்து கிடைக்கும் வெள்ளை நிற விதைகளை கோர்த்து ஜெப மாலை உருவாக்கப்படுகிறது. ஸ்ரீகிருஷ்ணருடன் தொடர்புள்ள இடங்களான மதுரா, பிருந்தாவனம், கோகுலம் மற்றும் ஆக்ரா போன்ற இடங்களிலிருந்து கிடைக்கப்பெறும் வைஜந்தி மலர்களின் விதைகள் விசேஷமாக பயன்படுத்தப்படுகின்றன. வசீகர சக்தி மற்றும் இஷ்ட தேவதைகளின் தரிசனம் ஆகிய ஆன்மிக காரணங்களுக்காக இந்த மாலையை பயன்படுத்தி பலரும் நம்பிக்கையுடன் ஜெபம் செய்து வருகிறார்கள்.குறிப்பாக, கிருஷ்ணரால் ராதைக்கும், ராமரால் சீதைக்கும் தரப்பட்டதால், பெயருக்கு ஏற்றாற்போல வெற்றிகளை தரும் மாலையாக வைஜந்தி மாலை சொல்லப்படுகிறது. மகாவிஷ்ணு இம்மாலையை அணிந்திருப்பதாக பல இடங்களில் குறிப்புகள் இருக்கின்றன. ருத்ராட்சத்திற்கு அடுத்தபடியாக இயற்கையாகவே மத்தியில் துளைகள் கொண்டவை இந்தச் செடியின் விதைகள். கருப்பு நிறமுள்ள வைஜந்தி விதை மாலைகள் சனிக் கிரக பாதிப்புகளை தடுக்க உதவுவதாக சொல்லப்படுகிறது. எளிதாக உடையக்கூடிய தன்மை கொண்டவையாக இவை இருப்பதால், கவனமாக பயன்படுத்த வேண்டியது அவசியம்.

மஞ்சள் விதை மாலை :

மஞ்சள் என்பது ஆயுர்வேதத்தில் சிறந்த கிருமி நாசினியாகவும், மருத்துவ குணமுள்ள பொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆன்மிக ரீதியாக மஞ்சள் கொண்டு உருவாக்கப்பட்ட ஜெப மாலைகள், தசமகா வித்யைகளில் ஒன்றான ‘பகளாமுகி சாதனா’ முறையில் பயன்படுத்தப்படுகின்றன. மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தகுந்த ஆயுர்வேத அல்லது சித்த மருத்துவ ஆலோசனைகளுக்கு பிறகு மஞ்சளால் தயாரிக்கப்பட்ட மாலையை அணிந்து கொள்ளும் முறையும் இருந்து வந்துள்ளது. மேலும் மன அமைதியை ஏற்படுத்துவதோடு, மனதின் அழுத்தத்தையும் குறைக்கும் சக்தி பெற்றவையாக மஞ்சளால் தயாரிக்கப்பட்ட மாலைகள் குறிப்பிடப்படுகின்றன.

குறிப்பாக, எதிரிகள் தொல்லை மற்றும் கடன்கள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், தங்களது வழிபாட்டு முறைகளின்போது மஞ்சள் மாலையை அணிந்து கொண்டால் வெற்றி கிட்டுவதாகவும் நம்பிக்கை இருக்கிறது. ஜாதக ரீதியாக குரு கிரகத்தின் நன்மைகளை பெறவும், போட்டிகள், வம்புவழக்குகள் போன்றவற்றில் வெற்றி பெற விரும்புபவர்கள், இந்த மாலையை அணிவது அவசியம் என்பதும் ஆன்மிக ரீதியான வழியாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

ஜெப மாலைகளில் விதவிதமாக நிறைய வகைகள் பயன்படுத்தப்படும் நிலையில், மேற்கண்ட மாலைகள் முற்றிலும் மாறுபட்டவை. அதிலும் புதுமையும், பயன்களும் கொண்டவை. இந்த மாலைகளை தக்க ஆலோசனைகளுக்கு பிறகு, பயன்படுத்துவது முக்கியம் என்பது கவனிக்கத்தக்கது.