Garudalwar | கருடாழ்வார்
காக்கும் கடவுளான திருமாலுக்கு, விஷ்ணு எனும் திருநாமம் உண்டு. விஷ்ணு என்றால், எங்கும் வியாபித்திருப்பவர் என்று பொருள். இவருக்குரிய வாகனம் கருடன்; அதனால், இதை, தெய்வீகப் பறவை என்பர்.

கந்தர்வர்கள் இருவர் தாங்கள் செய்த தவறின் காரணமாக, கஜேந்திரன் என்ற யானையாகவும், கூகு என்ற முதலையாகவும் பிறக்க சாபம் பெற்று, திரிகூடமலை பகுதியில் உள்ள ஆற்றில் கூகுவும், காட்டில் கஜேந்திரனும் வாழ்ந்து வந்தனர்.

விஷ்ணுவை வழிபாடு செய்தால் தான், சாப விமோசனம் கிடைக்குமென கருதிய யானை, தினமும் ஆற்றில் இறங்கி மலர் பறித்து, விஷ்ணுவுக்கு சமர்ப்பித்தது. அவ்வாறு ஒருமுறை மலர் பறிக்க, ஆற்றில் இறங்கிய யானையின் காலை பிடித்துக் கொண்டது கூகு முதலை. வலி தாளாமல் கதறிய யானை, 'ஆதிமூலமே... இந்த மலரை உனக்கு அர்ப்பணித்து விட்டு இறக்க தயாராக இருக்கிறேன்; என்னைக் காப்பாற்று...' என்று கதறியது.

இந்த ஓலம், வைகுண்டத்தில் இருந்த விஷ்ணுவின் காதில் விழுந்தது. அப்போது, அருகில் இருந்த கருடன், கணநேரம் கூட தாமதிக்காமல் விஷ்ணுவை ஏற்றி, மின்னல் வேகத்தில் பறந்து ஆற்றை அடைந்தது. கஜேந்திர யானை காப்பாற்றப்பட்டது. கூகு முதலையும், பகவானின் அருட்பார்வையால் முக்தி பெற்றது.

இதனால் தான், விஷ்ணு கோவில்களுக்குள் நுழையும் போதே, முதலில், கருடன் சன்னிதியை அமைத்தனர். கருடனை வணங்கி அனுமதி பெற்ற பின்தான், விஷ்ணு தரிசனம் செய்ய வேண்டும் என்பது விதி. கருடனிடம் கோரிக்கை வைத்தால், விஷ்ணுவிடம் அது எடுத்துச் சொல்லப்பட்டு, விரைவில் நிறைவேறும். இவரை, ஆழ்வார்களுக்கு இணையாக, 'கருடாழ்வார்' என சிறப்பித்து சொல்வர். பெரிய திருவடி என்ற சிறப்பு பெயரும் கருடனுக்கு உண்டு.

இவர் விஷ்ணுவின் பாதங்களை தன் கைகளில் தாங்கியிருக்கும் வகையில், கருடசேவையின் போது அலங்கரிப்பர். பெருமை மிக்க திருமாலின் திருவடிகளைத் தாங்குவதால் இவர், 'பெரிய திருவடி' என சிறப்பிக்கப்படுகிறார்.

கருட வழிப்பாட்டில், ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு பலன் உண்டு.
ஞாயிற்றுக்கிழமை வணங்கினால் நோய், திருஷ்டி நீங்கும்;
திங்கள் - கஷ்டமெல்லாம் விலகும்.
செவ்வாய் - நிலப்பிரச்னைகள் தீரும்.
புதன் மற்றும் வியாழன் - கிரக தோஷங்கள் விலகும்.
வெள்ளி மற்றும் சனி - தீர்க்காயுள், செல்வவளம் கிடைக்கும்.

கருடனைத் தரிசிக்கும் போது, 'ஹரி' என்றும் 'கிருஷ்ணா' என்றும் விஷ்ணுவின் திருநாமங்களை ஏழு முறை சொல்ல வேண்டும். கருடன் வானில் பறப்பதைப் பார்த்தால், எதிர்காலத்தில் நற்பலன்கள் ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

பெருமாள் கோவில் பிரம்மோற்சவங்களில் கருடசேவைக்கே முக்கியத்துவம் தரப்படும். திருப்பதியில் நடக்கும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் ஐந்தாம் நாளான கருடசேவையன்று ஏராளமான பக்தர்கள் கூடுவர்.

பறக்கும் தெய்வமான கருட பகவான், ஆடி சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தார்.

கருட வாகனத்தில் பெருமாளை சேவித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது நம்பிக்கை. பெருமாள் கோயில் திருவிழாவில் முக்கிய நிகழ்வாக கருட சேவை நடை பெறுகிற ரத சப்தமியன்று திருப்பதியில் நடைபெறும் பிரம்மோற்ஸவ கருட சேவை புகழ் பெற்றதாகும். ஸ்ரீரங்கம் கோயில் சித்திரைத் தேர், தைத் தேர், பங்குனித் தேர் உற்ஸவங் களின்போது நம்பெருமாள் கருட சேவை நடைபெறுகிறது. அதிலும் ஸ்ரீரங்கத்தில் மாசி கருடன் மிகவும் பிரசித்தம்.

புதுச்சேரி வரதராஜப் பெருமாள்

கோயில் கருட சேவை, காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் கருட சேவை, திருநாங்கூர் பதினோரு கருட சேவை, கும்பகோணம் 12 கருட சேவை, கூழமந்தல் திருத்தலத்தில் வைகாசி மாதம் நடைபெறும் 15 கருட சேவை, தஞ்சை மாமணிக் கோயில் 23 கருட சேவை போன்றவை சிறப்பு வாய்ந்தவை.

நாச்சியார்கோயில் சீனிவாசப் பெருமாள் திருக்கோயிலில் கல் கருட பகவான் தனி சன்னிதி கொண்டிருக்கிறார். கருவறையில் சீனிவாசப் பெருமாள் வாசுதேவனாக திருமணக் கோலத்தில் வஞ்சுளவல்லித் தாயாருடன் சேவை சாதிக்கின்றார். இங்கு தாயாருக்குத் தான் முக்கியத்துவம். பெருமாளைவிட தாயார் சற்று முன்னே எழுந்தருளியிருப்பதைக் காணலாம். இங்கு சகல மரியாதைகளும் முதலில் தாயாருக்குத்தான். பெருமாளும் நாச்சியாரும் ஒரே சன்னிதியில் எழுந்தருளியிருப்பது மற்றொரு சிறப்பு.

கருவறையில் பெருமாள் - நாச்சியாரோடு, பிரம்மா, ப்ரத்யும்னன், பலராமன், அனிருத்தன், புருஷோத்தமன் என ஐவரும் உடனிருந்து அருள்பாலிக்கின்றனர். பெருமாள், வஞ்சுளவல்லித் தாயார் திருக்கல்யாணத்துக்குப் பெரிதும் துணை நின்றவர் கருடாழ் வார். பெருமாள் கிழக்கு நோக்கி வீற்றிருக்க, தனி சன்னிதியில் தெற்கு நோக்கியபடி கருட பகவான் வீற்றிருக்கிறார்.

பொதுவாக, கருடன் மீது எட்டு நாகங்கள் ஆபரணங்களாகப் பொருந்தியிருக்கும். நாச்சியார் கோயில் கல் கருடன் மீது ஒன்பது நாகங்கள் ஆபரணங்களாகப் பொருந்தியுள்ளன. ஆதிசேஷனை கங்கணமாகவும், வாசுகியை முப்புரி நூலாகவும், தட்சகனை கச்சையாகவும், கார்கோடனை மாலையாகவும், பத்மனை வலது காதணியாகவும், சங்கல்பனை கிரீடமாகவும், குளிகனை வலது கை வளையமாகவும், அனந்தனை வாளாகவும் கொண்டு, அந்த வாளினை அலங்கரிக்கும் ஒன்பதாவது நாகத்தினையும் பொருத்திக்கொண்டு காட்சியருளிகிறார் கருட பகவான்.

நாச்சியார் கோயில் கருட சேவை மிக விசேஷம். ஆண்டாளின் தகப்பனார் பெரியாழ்வார் இவரது சொரூபமே. இவருக்குரிய கஸ்தூரி, குங்குமப்பூ, புனுகு முதலியவற்றை வாழை இலையில் வைத்து கலந்து இவரது திருமேனியில் சாற்றுவோர் எல்லா வகை சுகங்களையும் அடைவர். ஆடி மாத சுக்ல பட்ச பஞ்சமி தினத்தில் கருட பகவான் தரிசனம் காண்பதால் நன்மக்கட்பேறு கிட்டும். தடைபட்ட திருமணம் நிக ழும். கருடனின் ஜன்ம நட்சத்திரமான சுவாதி நட் சத்திரத்தன்று இவரை அர்ச்சிப்பது மிகச் சிறந்த பலன் களைத் தரும். ஏழு வியாழக்கிழமைகள் தொடர்ந்து கருட பகவானை அர்ச்சனை செய்து பிரசாதம் பெறு வதால் பறவை தோஷம், நாக தோஷம், நவக்கிரக தோஷம் போன்றவை விலகும். கல்லால் ஆன கருட பகவான் உலகில் வேறெங்கும் இல்லை. தினசரி ஆறு கால பூஜை, வியாழக்கிழமை முக்கிய பூஜை நாள்.

கருட பகவான் திருவீதியுலா வருவது, வருடத்தில் இரண்டு முறை. மார்கழி வைகுண்ட ஏகாதசிக்கு நான்கு நாட்கள் முன்பு ஒரு முறை. பங்குனி மாதம் பௌர்ணமிக்கு ஐந்து நாட்கள் முன்பு ஒரு முறை.

தனி சன்னிதிக்குள் வீற்றிருக்கும் இந்த கருட பகவான், சன்னிதியில் எடை குறைவாகத்தான் இருக்கிறார். கருவறையிலிருந்து நான்கு பேர் கருடனைத் தூக்கி வர, சன்னிதி கடக்கும்போது எட்டு பேர் தூக்க நேர்ந்துவிடும். காரணம், சன்னிதி கடந்து வெளிவரும் கருட பகவான் கடந்து வர வர, நேரம் ஆக ஆக எடை கூடிப் போகிறார். எட்டு பேர் தூக்கி வரும் கருட பகவான், திருவெண்நாழி மண்டபத்தில் பதினாறு நபர்களைத் தூக்கவைத்து விடுகிறார்.

திருக்கோயிலின் உள்ளேயே ராமர் சன்னிதி அடையும்போது, அங்கிருந்து சுமக்க முப்பத்தியிரண்டு நபர்கள். முத்து வழி மண்டபம் வந்து அங்கிருந்து சன்னிதி வீதியில் சப்பரத்தில் எழுந்தருளச் செய்திடகருட பகவானைச் சுமக்க அறுபத்தி நான்கு நபர்கள், சப்பரத்தில் எழுந்தருளியிருக்கும் கருட பகவானை, பயபக்தியுடன் வடம் பிடித்து இழுத்துச் செல்ல, நூற்றியிருபத்தெட்டு நபர்கள். மாலை ஆறரை மணிக்கு சன்னிதி விட்டுக்கிளம்பும் கருட பகவான், திருமஞ்சன வீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி வழியாக திருவீதியுலா பவனி வந்து சன்னிதி வந்து சேர அதிகாலை நான்கு மணியாகிவிடும்.

சப்பரத்திலிருந்து கருட பகவான் சன்னிதி வந்து சேரவும், திரும்பவும் இறங்குமுகமாக 128 பேரிலிருந்து 64 பேர், 64 பேரிலிருந்து 32 பேர், 32 பேரிலிருந்து 16 பேர், அடுத்து 8 பேர், அடுத்து நான்கு பேர் எனச் சுமந்து வர, திருக்கோயிலில் தனி சன்னிதி வந்தடை வார், நம் கவலைகள் அனைத்தையும் போக்கும் கருட பகவான்!