purattasi sani perumal worship
பாவ வினைகளால் உண்டான பிணி, தடை, தோஷம், கண் திருஷ்டி போன்றவை விலகவும் கர்ம வினைகள் தொடராமல் இருக்கவும் ஆயுள், ஆரோக்கியம், புத்திர சம்பத்து, மாங்கல்ய பலம், சவுபாக்கியம் கிடைக்கவும் விரத முறைகள் காலம் காலமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றனர். உணவு கட்டுப்பாட்டுடன் தெய்வத்தை மனதில் நிறுத்தி இருக்கும் விரதங்கள் உடலுக்கும், உள்ளத்துக்கும், ஆன்மாவுக்கும் அருமருந்து. அந்த வகையில் புரட்டாசி சனிக்கிழமை விரத வழிபாடு மிகவும் பழமை வாய்ந்ததும், மகத்துவம் மிகுந்ததும் ஆகும்.

புரட்டாசி மாதம் முழுக்க பல விரதங்கள், வழிபாடுகள், பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது. இந்த மாதத்தை பெருமாள் மாதம் என்றே அழைப்பார்கள். 108 திவ்ய தேசங்கள் உள்பட எல்லா பெருமாள் கோயில் களிலும் புரட்டாசி மாத வழிபாடுகள், உற்சவங்கள் மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசியில் திருப்பதி போன்ற பிரசித்தி பெற்ற பெருமாள் ஸ்தலங்களில் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடக்கும்.

சனிக்கிழமைகளில் வீட்டில் உள்ளவர்கள் திருநாமம் அணிந்து, சர்க்கரை பொங்கல் மற்றும் நைவேத்யங்கள் செய்து பெருமாளை வழிபடுவர். பலர் கையில் உண்டியல் ஏந்தி கோவிந்தா, கோபாலா, நாராயணா என்று கோஷமிட்டபடி வீடு வீடாகச் சென்று பணம், அரிசி தானம் பெறுவர். பணத்தை ஏழுமலையானுக்கு காணிக்கையாக செலுத்துவர். தானமாக பெற்ற அரிசியை கொண்டு பொங்கல் செய்து படைத்து அனைவருக்கும் வழங்குவர். சிலர் பெருமாள் ஸ்தலங்களுக்கு பாதயாத்திரையாக சென்று காணிக்கை செலுத்துவர்.

பொதுவாக இந்துக்கள் எல்லா சனிக்கிழமைகளிலும் விரதம் இருப்பார்கள். அப்படி இருக்க முடியாதவர்கள் புரட்டாசி மாதம் முழுக்க விரதம் இருந்தால் அதே பலன் கிட்டும். எனவேதான் புரட்டாசி மாதத்தை விரத மாதம் என்றும் அழைப்பார்கள். சனிக்கிழமை விரத மகிமையை விளக்க ஒரு புராண கதை உண்டு.திருப்பதி ஏழுமலையான் கோயில் அருகில் பீமன் என்ற குயவர் வாழ்ந்து வந்தார். தீவிர பெருமாள் பக்தர். வாழ்நாள் முழுவதும் சனிக்கிழமை விரதம் இருப்பதாக சங்கல்பம் எடுத்து கொண்டார்.

இவருக்கு சாஸ்திர, சம்பிரதாய, பூஜை வழிமுறைகள் எதுவும் தெரியாது. தொழில் மற்றும் ஏழ்மை நிலை காரணமாக கோயிலுக்கு போகவும் நேரம் இருக்காது. அப்படியே சென்றாலும் “பெருமாளே நீயே எல்லாம் என்று மட்டும் சொல்லிவிட்டு வந்துவிடுவார்.ஒருநாள் மனதில் ஓர் எண்ணம் உதித்தது. கோயிலுக்கு போக நேரமில்லை. ஆகையால் பெருமாளை இங்கேயே வரவழைத்தால் என்ன என்று நினைத்து களிமண்ணால் பெருமாள் சிலை ஒன்றை செய்தார்.

பூ வாங்க பணம் இல்லாததால் மண்ணை சிறு பூக்களாக உருட்டி மாலையாக தொடுத்து அணிவித்து வணங்கினார்.அவ்வூர் அரசர் தொண்டைமானும் திருப்பதி பெருமாளின் பக்தர். அவர் ஒவ்வொரு சனிக்கிழமையும் பெருமாளுக்கு தங்க பூமாலை அணிவித்து வழிபடுவார். ஒரு தடவை மாலை அணிவித்துவிட்டு, மறுவாரம் வந்து பார்த்தபோது பெருமாள் கழுத்தில் மண்ணால் செய்த பூமாலை தொங்கியது. அரசனுக்கு ஒன்றும் புரியவில்லை. அர்ச்சகர்கள் ஏதாவது தவறு செய்கிறார்களோ என்று குழப்பத்திலேயே அரண்மனைக்கு சென்று படுத்தார்.

அன்று அரசன் கனவில் தோன்றிய பெருமாள், பீமனின் பக்தியையும் தாம் அதனால் மகிழ்வுற்றதையும் விளக்கினார். உடனே மன்னர் அந்த குயவரின் இல்லத்துக்கு நேரில் சென்று அவருக்கு வேண்டிய உதவிகளையும், பொன்னையும், பொருளையும் அள்ளி கொடுத்தார். ஆனால் அதைக் கண்டு சிறிதும் மயங்காத குயவர் இறுதிவரை தன் விருப்பப்படி பெருமாள் விரதம் இருந்து வைகுண்ட பதவி அடைந்தார். அந்த பக்தரின் நினைவாக இன்றளவும் ஏழுமலையானுக்கு மண் சட்டியில்தான் நைவேத்யம் செய்யப்படுகிறது
புரட்டாதி முதல் சனியன்று பிறந்தவர் சாயா புத்திரன்..
‘புரட்டாசி சனி’ என அழைக்கப்டும் புரட்டாசி சனிக்கிழமை விரதம் புரட்டாசி மாதத்தில் (தமிழ் மாதம்) வரும் சனிக்கிழமைகளில் சனி பகவானை நினைந்து சனி தோஷம் நீங்க கடைப்பிடிக்கப்படும் விரதம் ஆகும். சனீஸ்வரன் கோசாரமாக சஞ்சரிக்கும் போது (தற்போதைய கிரக சஞ்சாரத்தில்) ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் நிற்கும் (சந்திர) இராசிக்கு 5 வது இராசியில் சஞ்சரிக்கும் காலம் பஞ்சம் சனியென்றும்,

8வது ராசியில் சஞ்சரிக்கும் காலம் அட்டமத்துச் சனியென்றும் 12 வது இராசியிலும் சந்திர இராசியிலும் சந்திரனுக்கு 2 வது இராசியிலும் சஞ்சரிக்கும் காலம் ஏழரைச் சனியென்றும் (மூன்று ராசிகளையும் கடக்க எடுக்கும் காலம் ஏழரை ஆண்டுகள் அதனால்) கூறுவர். சனீஸ்வரர் மந்தகதி உடையவர்.

இவர் ஒரு ராசியைக் கடக்க இரண்டரை வருடங்கள் ஆகின்றன. அதனால் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒவ்வொரு முப்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை கண்டிப்பாக இத்தோஷங்கள் சுழற்சியாக ஏற்படுகின்றன. சனிதோஷ காலங்களில் புத்திர பாக்கியக் குறைவு, மரண பயம், அதிக பிரயாணம், அதிக செலவு, பண நஷ்டம், தேகசுகக் குறைவு, வீண் சச்சரவு என்பன உண்டாகும்.

இவையாவும் சனி தோஷத்தினால் ஏற்படுபவை என கூறப்பெறுகின்றது. சனீஸ்வரனைப் போல் கெடுப்பாரும் இல்லை. கொடுப்பாரும் இல்லை என சோதிடம் கூறுகின்றது. இராசிகளில் சனீஸ்வரன் சஞ்சரிக்கும் போது பல கஷ்டங்களையும் நஷ்டங்களையும் தந்து துன்பப்படுத்திய சனீஸ்வரன் இவ் இராசிகளைக் கடந்து அடுத்த ராசிக்கு செல்லும் போது நஷ்டங்களை ஈடுசெய்யும் வகையில் கொடுத்து விட்டுச் செல்வார் என்பது ஐதீகம்.

சனி தோஷம் உள்ளவர்கள் புரட்டாசி மாசத்து சனிக்கிழமைகளில் காலையில் நல்லெண்ணை ஸ்நானம் செய்து ஆலயம் சென்று கறுப்புத் துணியில் எள்ளை சிறு பொட்டலமாகக் கட்டி எள் எண்ணெய் (நல்லெண்ணை) விட்டு விளக்கேற்றி அர்ச்சனைகள் செய்து சனீஸ்வர தோத்திரம் பாடி சனீஸ்வரனை வழிபட வேண்டும்.

அதன் பின் விஷ்ணு தோத்திரம் பாடி வழிபட வேண்டும். பின் வீடு சென்று உணவருந்தி விரதம் முடிக்க வேண்டும். சனீஸ்வரனின் வாகனமாக காகம் அமைவதால் உணவருந்து முன் காகங்களுக்கு உணவு படைத்தபின்பே தாம் உணவருந்த வேண்டும்.

அவரவர் வினைக்கேற்ப பலன்களை வழங்குவதில் நீதி தவறாதவர் சனீஸ்வரன். இவரது தினமான சனிக்கிழமைகளில் விரதமிருந்து சாயா புத்திரனை வழிபடுவோருக்கு நீண்ட ஆயுளும் துன்பமில்லாத வாழ்வும் கிடைக்கும். புரட்டாசி மாத முதற் சனி வாரத்தன்று சூரியன் மனைவியான சாயாதேவியிடம் சனிபகவான் தோன்றினார்.

சாவர்ணிமனுவும் பத்திரை என்ற பெண்ணும் இவருக்கு உடன்பிறப்புக்கள். ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் விரதமிருக்க முடியாதவர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதமிருக்கலாம்.

"சனிக்கு அதிபதி மகாவிஷ்ணு அதனால் சனிக்கிழமைகளில் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது நன்மையைத் தரும்"...