மரணம் ஆத்மாவின் பயணமும் அதன் சடங்குகளும் - 5

64)   பிரம்மாவினால்  படைக்கப்பட்ட உயிரானது முடிவாக மயானத்தில் சாம்பலாக உருமாறுவத்தின்  மூலம் ஜீவன் முடிந்தப் பின் சாம்பலாகி விடுகிறது.   உயிருடன் இருந்தபோது பலருக்கும் பயன்பட்ட அந்த ஜீவனின் உடலானது, வாழ்வு முடிந்து விட்ட கட்டத்தில் எவருக்கும் பலனின்றி போகும்போது சாம்பலாகி அந்த இறைவனை சென்று சரண் அடைகிறது. 

65) அது போலவேதான்  சாம்பலை நதியில் கலக்கும் சஞ்சயனம் எனும் சடங்கும்.   உடலுக்குள் உள்ள ஜீவனானது எங்கிருந்து வந்ததென யாருக்கும் தெரியாது, அது எங்கே போகும் என்பதும்  புரியாது.  நீர் இல்லாமல் இந்த உலக வாழ்க்கை இயங்க முடியாது. வாழ்க்கைக்கு அத்தியாவசிய தேவை நீரே ஆகும். 

ஆகவே உடலை விட்டு வெளியேறிய ஜீவன்  எங்கு சென்றாலும், யாராக பிறந்தாலும், வாழ்க்கையின் அத்தியாவசிய தேவையான தண்ணீரைப் போல அனைவருக்கும் பயனுள்ளவாறு இருந்து கொண்டு இருக்க வேண்டும் என்பதாக  வேண்டிக் கொண்டு அந்த ஜீவன் குடி இருந்த உடல் சாம்பலான பின்னர் அந்த சாம்பல் புனித நதியில் அந்த காலங்களில் கரைக்கப்பட்டன.

 ஆனால் தற்காலத்தில் நதிகளில் கரைக்காமல் நீர் நிலைகள் எங்கிருந்தாலும் அவற்றில் அதைக் கரைப்பது ஒரு சடங்காகி விட்டாலும், தத்துவம் என்னவோ ஒன்றுதான்.  மேலே கூறப்பட்ட இரண்டுமே ஆன்மீக போதனையின் அடிப்படையில் சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள சடங்குகள் ஆகும்.

66) ஒருவர் இறந்து விட்டால் அவருக்கு செய்ய வேண்டிய கர்மா மற்றும் தகனம் செய்யத் துவங்க எத்தனை மணி நேர அவஹாசம் தரப்பட்டு உள்ளது என்று கேட்டால் அதற்கான பதில் இதுதான்.  ஒருவர் இறந்து விட்டால் அவர் இறந்த அடுத்த பத்து மணி நேரத்துக்குள் தகனம் செய்து விட வேண்டும் என்றாலும்  அதே சமயத்தில் தகன காரியத்தை ஒருவர் இறந்த நேரத்தில் இருந்து  மூன்றரை மணி நேரத்துக்கு முன்னர் செய்து முடித்து விடக் கூடாது என்பது சாஸ்திர விதியாகும். எதற்காக பத்து மணி நேரம் மற்றும் மூன்றரை மணி நேர கால அவஹாசம் தரப்பட்டு உள்ளது?

67) ஒருவர் இறந்தப் பின் அவருடைய ஆத்மா உடனடியாக யம தூதர்களால் கொண்டு செல்லப்படாதாம். ஒருவரது மூச்சு நின்று விட்டதாக சமிக்கை கிடைத்ததும் உடனடியாக யமகணங்கள் பூமிக்கு வந்து விட்டாலும் இறந்தவரது உடலில் இருந்து வெளியேறிய ஜீவனை  தம்முடைய  கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள அவர்கள் கண்சிமிட்டும் நேர அளவில்  காத்திருப்பார்களாம். 

அதன் காரணம் இறந்தவருடைய வாழ்க்கையின் கால அளவை ஆராய்ந்து பார்க்கும் சித்ரகுப்தரிடம் இருந்து அவர்களுக்கு அந்த ஆத்மாவின் காலம் முடிந்து விட்டது என்ற ஒப்புதல் கிடைக்க கண் சிமிட்டும் நேரம் ஆகுமாம். 

 அவர்களுக்கு கண் சிமிட்டும் நேரம் என்பது பூமியின் கணக்கின்படி மூன்றரை மணி நேரம் என்பதினால்தான் மூன்றரை மணி  நேரத்துக்கு முன்னதாக தகன காரியங்களை செய்யத் துவங்கி தகனமும் செய்து முடிக்க மாட்டார்கள், மூன்றரை மணி நேர  காலம் முடியும்வரை யமகணங்கள் அந்த ஜீவனை தம் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்பதினால் ஏற்பட்டது இந்த விதியாம்.

68) இதற்கும் சில அடிப்படை காரணங்கள் உள்ளன. உலகில் பல்வேறு இடங்களில் பல சாதுக்களும் சன்யாசிகளும், சித்தர்களும், ராஜ ரிஷிகளும், முனிவர்களும், யோகக் கலையை கைக்கொண்ட ஆன்மீகவாதிகளும் சித்திகளைப் பெற்றிட மூச்சை நிறுத்தி வைத்துக் கொண்டு தபஸ்சில், சமாதி நிலையில் இருப்பார்களாம். 

அந்த நேரத்தில் அவர்கள் உடலில் இருந்து தமது ஜீவனை தாமே  வெளிக் கொண்டு சென்று வான் வெளியில் மிதந்தவாறு தவ நிலையில் இருப்பார்களாம். அந்த நிலையில் அவர்கள் இறந்து விட்டதாகக் கருதி யமகணங்கள் அந்த ஆத்மாவை பிடித்துச் சென்று தவறு  இழைத்து விடக் கூடாது என்பதற்காக இந்த நியதி பரப்பிரம்மனால் வைக்கப்பட்டு உள்ளதாக கூறுகிறார்கள்.

69) இது நடக்கக் கூடிய காரியமா என்ற சந்தேகம் எழத் தேவை இல்லை.  தமது ஆத்மாவான ஜீவனை தனது உடலில் இருந்து வெளியில் வைத்துக் கொண்டு எவராலும் இருக்க முடியுமா என்பது நியாயமான கேள்வியாகப்படலாம். ஆனால் இந்த காரியத்தை நமது நாட்டிலேயே பல சித்த முனிவர்களும், மகான்களும் ஏன் மந்திரவாதிகளும் கூட செய்துள்ளார்கள் என்பது வரலாற்றுக் கதைகள் மூலம் தெரிய வரும். 

 கூடு விட்டு கூடு பாய்ந்து செல்லும் கலை என்பது தனது உடலில் உள்ள  ஜீவனை வெளியேற்றி தற்காலிகமாக மற்றொரு சடலத்தில் வைத்துக் கொண்டு இருப்பதாகும். இந்தக் கலை பண்டைக் காலத்தில் பல சாதுக்கள், முனிவர்கள், ரிஷி மற்றும் சித்தர்களால் சில குறிப்பிட்ட காரணங்களுக்காக கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது.

70) ஆதி சங்கரரின் வாழ்க்கையில் கூட அவருக்கு விடப்பட்ட சவால் ஒன்றில் தாம் வெற்றி அடைய வேண்டும் என்பதற்காக தாம்பத்தியம் என்பது என்ன என்பதைக் கண்டறிய தன் உடலில் இருந்த ஆத்மாவை  உடலில் இருந்து வெளியேற்றி கூடு விட்டு கூடு பாய்ந்து சென்ற கதை உள்ளது. அருணகிரிநாதர் கூடு விட்டு கூடு பாய்ந்து கிளி உருவில் சென்றபோது அவர் உடலை அவரது எதிரி அழித்த கதையும் உண்டு. 

அதனால் அருணகிரிநாதர் கிளியாக வாழ வேண்டி இருந்ததாம். இவை அனைத்துமே மேன்மையான  மூச்சை அடக்கிக் கொள்ளும் யோகக் கலையை அபாரமாக கற்றறிந்திருந்தவர்களால் மட்டுமே செய்ய இயலும், இதை அனைவராலும் செய்ய முடியாது. அதற்கு அவர்கள் தெய்வீக ஆற்றலும், அருளும் பெற்று இருக்க வேண்டும்.

71)  இறந்து போனவர்களை மீண்டும் உயிர் பிழைத்து எழ வைத்த சம்பவங்கள் நவீன காலத்தின் தத்தாத்திரேயர் அவதாரமான சமர்த்த ஸ்வாமிகள், சீரடி சாயிபாபா, மானிக் பிரபு போன்ற பல மகான்களுடைய வாழ்க்கை வரலாற்றில் காணப்படுகின்றன. இறந்து போனவர்களை மீண்டும் உயிர் பிழைத்து எழ வைத்த சம்பவங்கள் பல மகான்களுடைய வாழ்க்கை வரலாற்றில் காணப்படுகின்றன.  

 உஜ்ஜயினியை ஆண்டுவந்த விக்ரமாதித்தன் கூட இந்தக் கலையை பயன்படுத்தி  உள்ளதாக அவர் வரலாற்றில் கதை உண்டு. சிவபாலயோகி போன்ற நவீன கால பல மகான்கள் கூட தமது ஆஸ்ரமங்களில் இருந்து தேவலோகத்துக்கு சென்றுவிட்டு திரும்பிய கதைகள் ஏராளமாக உள்ளன.

72) மேலே கொடுத்துள்ள உதாரணங்கள்  மேன்மையான ஆன்மீகவாதிகளினால்  நடத்தப்பட்டது என்றாலும் விஞ்ஞான முன்னேற்றம் அடைந்துள்ள காலத்திலும் அப்படிப்பட்ட  அதிசயங்கள் நடைபெற்று வந்துள்ளன. சில நேரங்களில் இறந்து விட்டதாக கருதப்பட்டு தகனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட சவங்கள் நடு வழியில் உயிர் பிழைத்து எழுந்தான உண்மைக் செய்திகள் உள்ளன. 

அது போல மருத்துவர்கள் நின்று போன மூச்சை உடனடியாக செயற்கை ஸ்வாசம் செலுத்தி மீண்டும் உயிர் பிழைக்க வைத்த சம்பவங்களும் நிறையவே உள்ளன. 

ஆனால் குறிப்பிட்ட சில நிமிடங்களுக்குள், அவர்கள் உடல் நிலையின் ஒத்துழைப்பைப் பொறுத்து அதை செய்ய வேண்டி இருந்தது.  ஆகவே ஒருவர் இறந்து விட்டால் அடுத்த  மூன்றரை மணி நேரத்துக்குள் (யமலோகக் கணக்கின்படி கண்சிமிட்டும் நேரம்) தகன காரியங்களை செய்து முடித்து விடக் கூடாது என்று வைக்கப்பட்டு உள்ள நியதிக்கும் விஞ்ஞான அடிப்படை உள்ளதாகவும், நியாயமானதாகவும்  நமக்கு தோன்றுகிறது.

73)  அடுத்து  அதென்ன பத்து மணி நேரக் கணக்கு என்று கேள்வி கேட்பதிலும்  நியாயம் உள்ளது. ஒவ்வொருவர் உடலுக்குள்ளும் பத்து விதமான காற்று வெளியேற்ற மண்டலங்கள் உள்ளன. அந்த மண்டலங்கள் வழியேதான் ஒருவரது ஆத்மா உடலை விட்டு வெளியேறும் என்கிறார்கள் . இதிலும், அதாவது உயிர் வெளியேறும்  ஓட்டைகள் எத்தனை என்பதைப் பற்றி – சில கருத்து வேறுபாடுகள் உள்ளன என்றாலும் பத்து மண்டலங்கள் என்பதே அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளன.

74) சாஸ்திரங்களின்படி இறந்தவர்களது ஆத்மா இரண்டு கண்களின் வழியாகவோ, இல்லை வாயின் வழியாகவோ, உச்சிமண்டை வழியாகவோ, ஆசன துவாரத்தின் வழியாகவோ, மூத்திர வாசல் அல்லது இரண்டு காதின் வழியாகவோ அல்லது இரண்டு நாசி துவாரத்தின் வழியாகவோ வெளியேறும் என்பார்கள். இதுவே பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட நியதியாகும்.

75)  ஆனால் புலிப்பாணி முனிவர் மற்றும் போக முனிவருக்கு உயிர் எந்த விதங்களில் மனித உடல்களில் இருந்து வெளியேறுகிறது என்பதை குறித்து விளக்கிய அகஸ்திய முனிவர் இந்த பத்து மண்டலங்களைத் தவிர ஜீவன்கள் வெளியேற உடலில் ஆயிரக்கணக்கான ஓட்டைகள் உள்ளன என்றும், அந்த இடங்கள் கை, கால் விரல்கள், மற்றும் அவற்றின் இடைப் பகுதியில் உள்ள ஓட்டைகள் என்றும், அவற்றைத் தவிர உடலில் உள்ள பல்லாயிரக்கணக்கான மயிர்க்கால்களின் அடியில் உள்ள ஓட்டைகளின் வழியாகவும் ஜீவன் வெளியேறும் என்றும், அந்த வழிகளில் வெளியேறும் ஜீவன் என்னென்ன பிறவிகள் எடுக்கின்றன என்பதையும் அவர்களுக்கு எடுத்துரைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

76) தாயின் வயிற்றில் செல்லும் ஜீவனானது  அங்கு வளரும் கருவின் உச்சி மண்டையின் வழியாகவே அதனுள் உள்ளே நுழைகிறது என்பது ஆன்மீக நம்பிக்கையாகும். அந்த உச்சிமண்டையைக் கபாலம் என்பா். உச்சி மண்டையில் புகுந்த அந்த உயிர் உச்சந்தலை வழியாக வெளியேறுவதுதான் சிறப்பு. அதுவே சரியான மரணம், அது புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டுமே கிடைக்கும், அதன் பின் ஆத்மா வேறு எந்த பிறவியும் எடுப்பதில்லை என்றும் புராணங்களில் கூறப்படுவதினால் ஜீவன் வெளியேறும் இடங்கள் பொதுவான பத்து இடங்கள் என்பதை நாம் ஏற்றுக்  கொள்ள வேண்டி உள்ளது.

77) கபாலம் வழியே வெளியேறும் ஜீவனானது பூமியிலே பிறப்பு எடுக்காமல் அவர்கள் வாழ்ந்திருந்த இடத்தின் வான் வெளியிலேயே தெய்வ ஆத்மாவாக தங்கி இருந்து விடுகிறது என்பதும் நம்பிக்கை ஆகும்.  அதனால்தான் அப்படிப்பட்ட புண்ணிய ஆத்மாக்களை உண்மையான தெய்வம் எனக் கருதி அவர்களுடைய உடலை எரிக்காமல் புதைத்து வைத்து அதன் மீது சமாதியும் கட்டி வைத்து பூஜிக்கிறார்கள்.

78) ஒன்பது காற்று மண்டலமும் அடைபட்டு, அவயங்களும்  அவற்றின் துடிப்பை நிறுத்திக் கொள்ளும்போது, அந்த உடலின் விதிக்கேற்ப எந்த ஓட்டையின் (மண்டலம்) வழியாக உடலின் ஆத்மா உடலை துறந்து வெளியேற வேண்டுமோ அந்த  பத்தாவது மண்டலத்தில் இருந்து ஆத்மா வெளியேறும். அப்போது அந்த உடலை சுற்றிக் கொண்டிருக்கும் காற்று ஆத்மாவை தன்னுடன் அழைத்துச் சென்று விடும். அப்படி ஆத்மாவை சுமந்து கொண்டு செல்லும் காற்றானது அந்த ஆத்மாவை மேலுலகில் உள்ள வஸுக்களிடம் சேர்ப்பித்து விட்டு விட்டு அங்கிருந்து வந்து விடும். 

இங்கும் ஒரு ஆன்மீக விளக்கம் நமக்கு கிடைக்கிறது. காற்று என்பது நமது கண்களுக்கு தெரியாது என்றாலும், அது உணரக் கூடியது என்பதின் காரணம் அதுவும் வாயு பகவானின் பல லட்சக்கணக்கான உயிர் கணங்களைக் கொண்டு இயங்குவதுதான். இறந்தவர் உடலில் இருந்து வெளியேறும் ஆத்மாவை  மேலுலகில் உள்ள வஸுக்களிடம் கொண்டு செல்லும்  இந்த குறிப்பிட்ட செயல் வாயுதேவருக்கு விதிக்கப்பட்டு  உள்ள நியதியாகும் என்பதாக தன்னிடம் வந்து சந்தேகம் கேட்ட நாசிகேதனுக்கு யமதர்ம தேவர் எடுத்துரைத்தாராம்.

79) காற்றுடன் இணைந்து செல்லும் ஆத்மாவின்  பயணம் முடிவுற – உடலில் இருந்து ஆத்மா வெளியேறிய நேரத்தில் இருந்து வஸுக்களிடம் சென்றடையும்வரை நமது பூமியின் கணக்கின்படி பத்து மணி நேரம் பிடிக்கிறது.

80) அப்படி அந்தப் பத்து மணி நேரத்துக்குள் வஸுக்களிடம் கொண்டு சேர்க்கப்படாத ஆத்மாவை பிரபஞ்சத்தில் சுற்றித் திரியும் பல தீய கணங்கள் சூழ்ந்து கொண்டு அவற்றை தம்மிடம் பிடித்து வைத்துக் கொண்டு  நற்கதி அடைய விடாமல்  தடுக்க முயலுமாம். தீய ஆவிகள்  அந்த தூய ஆத்மாவை தம் வசம் முற்றிலுமாகக் கைகொள்ள பத்து நாட்கள் பிடிக்கின்றன.   ஒருவர் இறந்தப் பின் அடுத்த பத்து மணி நேரத்துக்குள்ளாக கர்மாவை செய்யத் துவங்கியதும்,  அந்த கர்மாவில் ஓதப்படும் மந்திர சக்திகள் மூலம் காற்றானது அந்த ஆத்மாவை வஸுக்களிடம் கொண்டு சேர்க்கிறதாம்.

 அடுத்த பத்து நாட்களும் செய்யப்படும் சடங்குகளின் மந்திரங்களினால்   தீய ஆவிகளின் சக்தி அடக்கப்பட்டு விடும்.  அதனால்தான் பத்து மணி நேரத்துக்குள்  இறந்தவருக்கு கர்மாவை செய்யத் துவங்கி தகனமும் செய்ய வேண்டும். அதைத் தொடர்ந்து அடுத்த பத்து நாட்களும் கர்மாக்களை செய்ய வேண்டும் என்ற விதியான   பத்து மணி நேரக் கணக்கு  அமைந்து உள்ளது. இதில் பத்தாவது நாளான காரியமே மிகவும் முக்கியமான சடங்காகும்.

யம தூதர் ஆத்மாவை  எட்டு கோஷ்டியான

வஸுக்களிடம் கொண்டு சேர்க்கிறார் 

81)  அந்தப் பத்து மணி நேரத்தில் வஸுக்களிடம் கொண்டு சேர்க்கப்படாத ஆத்மாவை பிரபஞ்சத்தில் சுற்றித் திரியும் பல்வேறு  தீய கணங்கள் சூழ்ந்து கொண்டு அவற்றை தம்மிடம் பிடித்து வைத்துக் கொண்டு அவை நற்கதி  அடைய விடாமல் தடுக்கும் என்பதினால் வஸுக்களிடம் கொண்டு சேர்க்கப்படும் ஆத்மா நற்கதியை அடைய வேண்டும் என்பதற்காக முதல் நாளன்று எப்போது கர்மாவை துவக்கினாலும் தொடர்ந்து அடுத்த பத்து நாட்கள் மந்திரங்களை ஓதி சில சடங்குகளை செய்ய வேண்டி உள்ளது.

82) வஸுக்கள் என்பது யார்?  கர்மாவில் செய்யப்படும் மந்திரங்களுக்கு உரிய தேவதைகள் அந்த  வஸுக்கள். ஆத்மாவை பிடித்துக் கொள்ள முயலும் தீய ஆவிகளை விரட்டி தம்மை நோக்கி பயணித்துக் கொண்டு இருக்கும் ஆத்மாவுக்கு பாதுகாப்பு தரும் தேவதைகளே அந்த வஸுக்கள்.  வஸுக்களின் பாதுகாப்பினால் அடுத்த  பத்து நாட்களிலும் செய்யப்படும் காரியங்களினால் ஆத்மா பசியோடு அலையாமல் இருக்கும்.  ஆக பத்து மணி நேரம், பத்து நாட்கள் என்ற அனைத்துமே பத்து என்ற எண்ணிக்கையில்தான்  அடங்கி உள்ளது.

83) ஆனால் அனைத்திற்கும் மேலாக இன்னொரு காரணமும் உள்ளது.  மரணம் அடைந்து விட்டவர்களது ஆத்மாவானது வஸுக்களிடம் பாதுகாப்பாக  உள்ள நேரத்தில்  அந்த ஆத்மாவின் தர்ம, அதர்ம கணக்குகளை ஆராய்ந்து பார்த்து அதற்கான தண்டனைகளையும் முடிவு செய்து கொண்டு வஸுக்களிடம் அவற்றை சமர்ப்பித்து அந்த ஆத்மாவை தம்முடன் அழைத்துக் கொண்டு செல்ல யமதர்ம தேவருக்கும்  பத்து நாட்கள் ஆகுமாம்.

 அந்த பத்து நாட்களிலும் இறந்தவர் சந்ததியினர் செய்யும் ஆத்மார்த்தமான  கர்மாக்களின் விளைவாக என்னென்ன பாவங்கள் விலக்கப்பட வேண்டும் என்பதையும் கணக்கில் எடுத்துக் கொண்டு அந்த ஆத்மாவின் முடிவான நிலை இதுதான் என பத்தாவது நாளன்று வஸுக்களிடம் விவாதித்தப் பின்னர் யமதர்ம தேவர் அந்த ஆத்மாவை தன்னுடன் அழைத்துச் செல்கிறார்.  இதனாலும் பத்து நாட்கள் சடங்கு எனும் கணக்கு வைக்கப்பட்டு உள்ளதாம்.

தொடரும்...

''Acknowledgement: மேலுள்ள மூல  கட்டுரையை எழுதிய ஆசிரியர்  'சாந்திப்பிரியா'விற்கு (https://santhipriya.com/) நன்றி''