ஐப்பசி மாத சிறப்புக்கள்
தமிழ் மாதங்களின் படி, ஆண்டின் ஏழாவது மாதம் ஐப்பசி ஆகும். சூரிய பகவான் துலாம் ராசியில் பயணிக்கும் 29 நாட்கள் தான் ஐப்பசி மாதம் ஆகும். ஐப்பசி மாதம் அடைமழைக் காலம் என்பார்கள். அத்துடன் ஐப்பசி, ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் மாதமும் ஆகும். இம்மாதத்திற்கு துலா மாதம் என்ற பெயரும் உண்டு. இம்மாதத்தில் இந்தியாவின் முக்கிய பண்டிகையான தீபாவளி உட்பட பல்வேறு பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது. புனிதமான ஐப்பசி மாதத்தில் அனைத்து புனித நதிகளும், தமிழகத்தில் ஓடும் தெய்வீக நதியான காவிரி நதியில் சங்கமிப்பதாக ஐதீகம்.

ஜோதிட ரீதியாக, துலாம் ராசி நவகிரகங்களில் “சுக்கிரன்” பகவானின் ஆதிக்கத்திற்குரிய ராசியாகும். காவிரி நதிக்கு நடுவே இருக்கும் ஸ்ரீரங்கம் எனப்படும் திருவரங்கத்தில் வீற்றிருக்கும் “ஸ்ரீரங்கநாதர்” சுக்கிர பகவானின் அம்சம் நிறைந்தவராவார். இவருக்கு காவிரியில் நீராடும் துலா ஸ்நானம் என்ற நிகழ்வும் இம்மாதத்தில் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த ஐப்பசி மாதத்தில், ஏதாவது ஒரு தினத்தில் ஸ்ரீரங்கம் சென்று, காவிரி நதியில் நீராடி பின்பு ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்று, ஸ்ரீரங்கநாதர் மற்றும் ரங்கநாயகி, ஆண்டாள் தாயார்களையும் வழிபடுவதால் சகல பாவங்களும் நீங்கும். சுக்கிர பகவானின் தோஷங்கள் நீங்கும். கடன் பிரச்சனைகள் நீங்கி பொருளாதார நிலை மேம்படும். திருமணமாகாதவர்கள் மனதிற்கினிய வாழ்க்கை துணை கிடைக்க பெறுவார்கள்.

பாபாங்குசா ஏகாதசி, இந்திர ஏகாதசி போன்ற நிகழ்வுகளும் ஐப்பசியில் நிகழ்கின்றன.

தீபாவளி பண்டிகை - ஐப்பசி தேய்பிறை சதுர்த்தசியில் தென்இந்தியாவிலும், ஐப்பசி அமாவாசையில் வடஇந்தியாவிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகை வடஇந்தியாவில் லட்சுமி பூஜை என்றும், வங்காளத்தில் காளி பூஜை என்றும் அழைக்கப்படுகிறது.

வளர்பிறை ஏகாதசி: ஐப்பசி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி 'பாபாங்குசா" என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் ஏகாதசி விரதத்தை கடைபிடித்தால் வறுமை அகலும், பசிப்பிணி நீங்கும், பாவ விமோச்சனம் பெறலாம். நவம்பர் 4 ம் தேதி ஐப்பசி ஏகாதசி அனுஷ்டிக்கப்படுகிறது.

தேய்பிறை ஏகாதசி: ஐப்பசி மாதத்தில் அனைத்துப் புண்ணிய நதிகளும் கலந்து புனிதத்தை அள்ளி வழங்கும் என்பர். இந்த மாதத்தில், காவிரி நீராடல் புண்ணியம் மிகுந்தது. அதுவும், ஐப்பசி கடைசி நாளன்று மேற்கொள்ளப்படும் புனித நீராடலை கடை முழுக்கு என்பர்.