Rama feet in some places | ராமனின் காலடி பதிந்த புனித இடங்கள்
திருமாலின் அவதாரங்களில் ஒப்பற்றது ராம அவதாரம்.

அயோத்தி முதல் ராமேஸ்வரம் வரையிலும், அங்கிருந்து கடலில் பாலம் அமைத்து இலங்கை வரையிலும் கால்நடையாகவே யாத்திரை புரிந்தவர் ராமபிரான்.

அவர் காலடி தடங்கள் பதிந்த சில இடங்களைப் பார்க்கலாம்.

அயோத்தி

ராம ஜென்ம பூமி என்ற இந்த இடம் தான், ராமர் பிறந்த ஊர். சிறு பிள்ளையாக அவர் விளையாடியதும், 14 ஆண்டுகால வனவாசத்திற்குப் பிறகு, அவர் அரியணையில் அமர்ந்து அரசாட்சி செய்ததும் இந்த இடம்தான். தமிழில் ராமாயணத்தை எழுதிய கம்பர், வடநாட்டில் ராமாயணத்தை எழுதிய துளசிதாசர், மகாத்மா காந்தி போன்றவர்களுக்கு உத்வேகம் அளித்த, ராம நாமத்தின் ஊற்றுக்கண் இந்த இடமாகும்.

பக்ஸர்

சித்தாசிரமம், வேத சித்ரா, வேத கர்ப்பமா, க்ருஷ் என்று பல பெயர்கள் கொண்ட ‘பக்ஸர்’ என்ற இடமும் பிரசித்தி பெற்றது. விசுவாமித்திரர் ராமருக்கு பலை, அதிபலை ஆகிய முக்கிய மந்திரங்களை உபதேசித்த இடம்.

அகல்யாசிரமம்

கல்லாக இருந்த அகல்யா சாப விமோசனம் பெற்ற இடம் இது.

ஜனக்பூர்

மிதிலை அரசர் ஜனகர் அரசாட்சி புரிந்த இடம் ஜனக்பூர். இங்குள்ள பெரிய மைதானத்திலேயே ராமர் வில்லை முறித்த சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

ராம்டேக்

இது ராமகிரி என்றும் அழைக்கப்படுகிறது. ராமர், லட்சுமணன், சீதை ஆகிய மூவரும் வனவாசத்தின் போது இங்கு சிறிது காலம் தங்கி இருந்தனராம். ஆதலால் இது புண்ணிய தலமாகக் கருதப்படுகிறது.

சபரி ஆசிரமம்

சபரி பக்தியுடன் எச்சில் படுத்தித் தந்த கனியை ராமர் மனமுவந்து ஏற்ற சம்பவம் நடந்த இடம் இது. விஜயநகர சாம்ராஜ்யத்தில் உள்ள பிரசித்தி பெற்ற புராதன நகரம் ‘ஹம்பி’. இங்கே துங்கபத்ரா நதி ஓடுகிறது. இதன் அருகே உள்ள மலை‘மதங்க பர்வதம்’ என்று அழைக்கப்படுகிறது. இங்கே தான் சபரி வசித்து வந்ததாக வரலாறு தெரிவிக்கிறது.

ராமேஸ்வரம்

ராவணனை வதம் செய்த பாவம் நீங்க, ராமன் சிவலிங்க பூஜை செய்த இடம் இது.

பிரயாக்ராஜ்

அலகாபாத் என  அழைக்கப்பட்ட ஊரின் பூர்வீக பெயர் தான் பிராக்யராஜ். இந்த இடத்தில் தான் ராமபிரான், சீதா தேவி, லட்சுமணனுடன் கங்கை நதியை கடந்து சென்றதாக ராமாயணத்தில் குறிப்பிடப்படுகிறது. இந்த இடத்தில் பரத முனி ஆசிரமத்தில் ராமர் ஓய்வெடுத்துச் சென்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இடத்தில் நடக்கும் கும்பமேளா மிக கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.

சித்ரகூட்

14 வருடம் வன வாசம் செல்வதற்காகக் கிளம்பிய ராமனை, பரதன் அழைத்தும் திரும்ப வராததைக் கேட்டு உயிரைத் துறந்தார். இராமனிடம் அவரின் பாதகை பெற்று வந்த இடம் தான் சித்ரகூட். இந்த இடத்தில் இராமன், சீதா, லட்சுமணன் வந்து சென்ற பல தடங்கள் உள்ளன. அதோடு இங்கு பல ராமர் கோவில்கள் உள்ளன.

தண்ட காருண்யா

ராவணனின் சகோதரியான சூர்பனகையின் காதலை மறுத்ததால் ஆத்திரம் கொண்டாள். அவளின் மூக்கை லட்சுமணன் அறுத்து விரட்டியது இந்த தண்ட காருண்யா இடத்தில் தான். ஒடிசா, சத்தீஸ்கர், ஆந்திரா என பரந்து விரிந்து கிடக்கிறது இந்த தண்ட காருண்யா என்ற பசுமைப் பகுதி.

கிஷ்கிந்தை

வால்மீகி ராமாயணத்தில் கிஷ்கிந்தை, வாலியின் சாம்ராஜ்யம் பரந்து விரிந்திருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் வாலி தன் சகோதரன் சுக்ரீவனின் மனைவி ரூமாவை வலுக்கட்டாயமாகக் கவர்ந்து சென்றார். ராமன் மறைந்திருந்து வாலியை தன் அம்புகளால் கொன்று ரூமாவை மீட்டார். அதன் பின்னர் வானர சேனைகள் ராமனுக்கு உதவ தொடங்கினர். இந்த புராண சிறப்பு பெற்ற கிஷ்கிந்தா என்ற இடம் தற்போது கர்நாடகா மாநிலம் ஹம்பிக்கு அருகில் இருப்பதாக நம்பப்படுகிறது. இங்குள்ள கோவில் மற்றும் பல இடங்கள் யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னமாக சேர்க்கப்பட்டுள்ளது.

தலைமன்னார்

ராம பிரான் இலங்கையின் இந்த தலைமன்னார் பகுதியில் தான் ராம பாலத்தின் வழியாக அடைந்தார். ராவணனை வீழ்த்தி சீதையை மீட்டு,விபீஷணனுக்கு இலங்கையின் ராஜ்யத்தை ஒப்படைத்தார். அதன் பின்னர் இங்கு தான் சீதா தேவி தான் கற்புள்ளவள் என தீயில் இறங்கி நிரூபித்தார். இந்த தலைமன்னார் இலங்கை தீவின் வடமேற்கு பகுதியில் உள்ளது.

மாயமான்குறிச்சி

இது நெல்லை மாவட்டத்தில் உள்ள ஒரு ஊர்... இந்த ஊரின் பெயர்க்காரணம் என்ன தெரியுமா... அன்னை சீதாவை லட்சுமணன், கிழித்த கோட்டை தாண்டி வெளியில் வர வைக்க ராவணன் (மாரீசன்) மாய மானாக உருமாறிய இடம் இது தான். 

ஜெய் ஸ்ரீராம்