Get to know about Alwars | ஆழ்வார்களை அறிவோம்
ஆழ்வார்கள் பன்னிருவர் (12), அவர்கள் அருளிய பிரபந்தங்கள் 24. இவை தவிர, இராமானுச நூற்றந்தாதியைச் சேர்த்து திவ்யப்ரபந்தங்களின் மொத்த எண்ணிக்கை 4000.

4000 திவ்யப்ப்ரபந்தங்கள், நாதமுனிகள் என்ற ஆசாரியரால்,  நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை:


முதலாயிரம்

திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி, திருப்பாவை, நாச்சியார் திருமொழி, பெருமாள் திருமொழி, திருச்சந்தவிருத்தம், 

திருமாலை, திருப்பள்ளியெழுச்சி, அமலனாதிபிரான் & கண்ணிநுண் சிறுத்தாம்பு. 


இரண்டாமாயிரம்

பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம் & திருநெடுந்தாண்டகம்


மூன்றாமாயிரம் (இயற்பா)

முதல் திருவந்தாதி, இரண்டாம் திருவந்தாதி, மூன்றாம் திருவந்தாதி, நான்முகன் திருவந்தாதி, திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவெழுக்கூற்றிருகை, சிறிய திருமடல், பெரிய திருமடல் மற்றும் இராமானுச நூற்றந்தாதி.


நான்காமாயிரம்

திருவாய்மொழி



ஆழ்வார்கள் அவதரித்த மாதம், நக்ஷத்திரம், இடம் மற்றும் அவர்கள் அருளிச்செய்துள்ள திவ்யப் பிரபந்தங்களின் பெயர்கள் மற்றும் எண்ணிக்கை.




ஆழ்வார் திருநாமம் (பெயர்)


அவதரித்த (பிறந்த) மாதம், நட்சத்திரம், ஊர்


அருளிச்செய்த பிரபந்தத்தின் பெயர் மற்றும் பாடல்களின் எண்ணிக்கை


பொய்கை ஆழ்வார் 


ஐப்பசி - திருவோணம் - திருக்கச்சி (காஞ்சிபுரம்) 

முதல் திருவந்தாதி (100 பாடல்கள்)


பூதத்தாழ்வார்    


ஐப்பசி - அவிட்டம் – திருக்கடல் மல்லை (மாமல்லபுரம்) 

இரண்டாம்  திருவந்தாதி (100)


பேயாழ்வார்    


ஐப்பசி – சதயம் - திருமயிலை (மைலாப்பூர்)

மூன்றாம் திருவந்தாதி  (100)


திருமழிசை ஆழ்வார் 


தை - மகம் - திருமழிசை 

நான்முகன் திருவந்தாதி (96) & திருச்சந்தவிருத்தம் (120)

நம்மாழ்வார்   


வைகாசி - விசாகம்  - திருக்குருகூர் 

திருவிருத்தம்  (100),        

திருவாசிரியம் (7),             

பெரிய திருவந்தாதி (87) &

திருவாய்மொழி (1102)

குலசேகர  ஆழ்வார்   

மாசி - புனர்பூசம் - திருவஞ்சிக்களம் (கேரள மாநிலம்

பெருமாள் திருமொழி (105)

பெரியாழ்வார் 


ஆனி - சுவாதி - ஸ்ரீவில்லிபுத்தூர் 

திருப்பல்லாண்டு (12)  &

பெரியாழ்வார் திருமொழி (461)    

தொண்டரடிப்பொடி ஆழ்வார் 


மார்கழி – கேட்டை - திருமண்டங்குடி

திருமாலை (45) &

திருப்பள்ளியெழுச்சி (10)


திருப்பாணாழ்வார்  


கார்த்திகை – ரோகிணி - திரு உறையூர் 

அமலனாதிபிரான் (10)


திருமங்கை ஆழ்வார்


கார்த்திகை - கார்த்திகை (கிருத்திகை) - திருக்குறையலூர் 

பெரிய திருமொழி  (1084) திருக்குறுந்தாண்டகம் (20), திருநெடுந்தாண்டகம் (30),                    

திருவெழுக்கூற்றிருகை  (1),       

சிறிய திருமடல் (1),              

பெரிய திருமடல் (1). 

ஸ்ரீ ஆண்டாள்


ஆடி - பூரம் - ஸ்ரீவில்லிபுத்தூர் 

திருப்பாவை (30) &              

நாச்சியார் திருமொழி (143)

மதுரகவி  ஆழ்வார்


சித்திரை - சித்திரை - திருக்கோளூர் 

கண்ணிநுண் சிறுத்தாம்பு (11)


"ஆழ்வார்கள் மற்றும் அவர்கள் அருளிச்செய்த திவ்யப் பிரபந்தங்களின் புகழ் பேசும்  பாடல்கள்"


ஆழ்வார்களைப் பற்றியும் அவர்கள் அருளிச்செய்த  திவ்யப்ரபந்தங்களைப் பற்றியும்,   ஸ்ரீமத் மணவாள மாமுனிகள் என்னும் ஆசாரியர் , தன்னுடைய உபதேச இரத்தினமாலை என்னும் பிரபந்தத்தில், மிகவும் எளிமையாகவும், அழகாகவும்   பாடியுள்ளார்.  ஆழ்வார்களைப் பற்றி எளிதில் அறிந்துகொள்ள இந்தப் பிரபந்தத்தைக் கைவிளக்காகக் கொள்ளலாம்.   அவற்றில்  சில முக்கியப் பாடல்களை அறிவோம் :


“ஆழ்வார்கள் வாழி அருளிச் செயல் வாழி

தாழ்வாதுமில் குரவர்தாம் வாழி

ஏழ்பாரும் உய்ய அவர்கள் உறைத்தவைகள்தாம் வாழி

செய்ய மறை தன்னுடனே சேர்ந்து.”  (பாசுரம் 3, உபதேசரத்தினமாலை)


விளக்கம் :  ஆழ்வார்களுக்கும், வடமொழியில் (Sanskrit) அமைந்துள்ள நான்கு வேதங்களுக்கு நிகராய் அவர்கள் அருளிச்செய்த திவ்யப்பிரபந்தங்களுக்கும்  பல்லாண்டு; (வாழி வாழி);  தாழ்வு ஏதுமின்றி அவைகளை நன்கு கற்றுத்  தேர்ந்த  ஆச்சார்யர்கள் அனைவர்க்கும் பல்லாண்டு;  ஏழுலகங்களிலும்   வாழும்  ஜீவாத்மாக்கள் அனைவரும் , பரமாத்மாவைப் பற்றி உணர்ந்து ஞான வைராக்யத்தைக் கிட்டும் வகையில் அமைந்துள்ள ஆழ்வார்களது  திவ்யப் பிரபந்தகளும், அவைகளுக்கு,, ஆசார்யர்களால் விரித்துரைக்கப்பட்ட வியாக்யானங்களுக்கும்   (explanations) பல்லாண்டு.


“அந்தமிழால் நற்கலைகள் ஆய்ந்துரைத்த ஆழ்வார்கள் 

இந்த  உலகில் இருள் நீங்க - வந்துதித்த 

மாதங்கள் நாள்கள் தம்மை மண்ணுலகோர் தாமறிய

ஈதென்று சொல்லுவோம் யாம்.” ((பாசுரம் 5, உபதேசரத்தினமாலை)


விளக்கம் : அழகான தமிழில் அமைந்துள்ள  திவ்யப்ரபந்தங்களில்   பரமாத்மாவின் விசேஷ குணங்களைப் பற்றி எடுத்துரைத்து, ஆழ்வார்கள் நம் அனைவருக்கும் அருள் புரிந்துள்ளனர்.    ஞானமே வடிவாய் அவதரித்த ஆழ்வார்களின் திவ்யப்ப்ரந்தங்கள், நம்முடைய மனதில் இருக்கும் அஞ்ஞானம் என்னும் இருளை நீக்கி ஞானத்தை அளிக்கும்.