Periya Tirumalai Nambi Vaibhavam | பெரிய திருமலை நம்பி வைபவம்
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

பெரிய திருமலை நம்பி வைபவம்
திருநக்ஷத்திரம் : வைகாசி ஸ்வாதி

பிதாமஹஸ்யாபி பிதாமஹாய
ப்ராசேதஸாதேஸபலப்ரதாய |
ஸ்ரீபாஷ்யகாரோத்தமதேஸிகாய
ஸ்ரீஸைலபூர்ணாய நமோ நமஸ்தாத் ||

விளக்கம் :(பிரமனுக்குத் தந்தையான திருவேங்கடமுடையானாலே "அப்பா" என்று கூப்பிடப் பெருகையாலே) உலகிற்குப் பாட்டனான பிரமனுக்கும் பாட்டனாராய் , ஸ்ரீபாஷ்யகாரருக்குச் (ராமாநுஜர்) சிறந்த ஆசாரியராய், அவருக்கு வால்மீகியின் வாக்காகிற ஸ்ரீராமாயணத்தின் பொருளை உபதேசித்தவரான பெரிய திருமலை நம்பிக்குப் பலகால் (பலவகை) வணக்கம்.

ஸுமுகர் என்னும் நித்யஸூரியின் அம்சமாக வைகாசி ஸ்வாதியில் திருமலையில் அவதரித்தவர் இவ்வாசாரியர். இவர் எம்பெருமானாருக்கு (ராமாநுஜர்) மாமா ஆவார். இவர் தம் சகோதரிகளில் மூத்தவளான "பூதேவி" என்னும் காந்திமதியை ஸ்ரீபெரும்பூதூர் கேசவ ஸோமயாஜியாருக்கு மணம்செய்து கொடுத்தார். அவர்களுக்குப் பிறந்தவர் ஸ்ரீராமாநுஜர். இளையவளான ஸ்ரீதேவியை மதுரமன்கலம் கமலநயன பட்டருக்கு மணம்செய்து கொடுத்தார். அவர்களுடைய குமாரர்கள் எம்பார் என்னும் கொவிந்தரும், அவர் தம்பி சிறிய கோவிந்தப் பெருமாளும் ஆவர். இவர் எம்பெருமானாருக்குக் கீழத்திருப்பதியில் ஒருவருட காலம் ஸ்ரீராமாயணத்தைக் காலக்ஷேபம் ஸாதித்தார். திருவேங்கடமுடையான் இவரைத் திருத்தகப்பனாராக அபிமானித்தார். சைவராக மாற்றபெற்று, காளஹஸ்தியில் உள்ளங்கை கொணர்ந்த நாயனாராய் இருந்த மருமகன் கோவிந்தரை (எம்பார்) மறுபடி ஸ்ரீவைஷ்ணவராகத் திருத்தினார் இவர். தம் குமாரர்களான பிள்ளை திருமலைநம்பியையும், பிள்ளானையும் இரு குமாரத்திகளையும் உத்தாரகரான எம்பெருமானார் திருவடிகளில் ஆச்ரயிக்கச் செய்தார்.

திருப்பாணாழ்வார் அருளிச்செய்த "அமலானாதிபிரான்" என்னும் திவ்யப்ரபந்தத்திற்கு "காட்டவே கண்ட பாதகமலம்" என்று தொடங்கும் தனியனை அருளிச்செய்தவர் பெரிய திருமலைநம்பி.

திருநக்ஷத்திரத் தனியன் :

ஸ்ரீமல் லக்ஷ்மண யோகீந்த்ர ஸ்ரீராமாயண தேஸிகம் |
ஸ்ரீஸைலபூர்ணம் வ்ருஷப ஸ்வாதி ஸஞ்ஜாத மாஸ்ரயே ||

வாழித்திருநாமம் :

வைகாசிச் சோதிநாள் வந்துதித்தான் வாழியே
வண் திருவேங்கடமுடையான் வரபுத்திரன் வாழியே
அய்யன் ஸ்ரீஆளவந்தார் அடிதொழுவோன் வாழியே
அனவரதம் மலைகுனியர்க்கு அடிமை செய்வோன் வாழியே
மெய்யனிராமானுசாரியன் விரும்புமவன் வாழியே
மிக்கதிருமலையார்க் கெல்லாம் மேலாவான் வாழியே
செய்யதமிழ் வேதத்தின் சிறப்பறிந்தோன் வாழியே
திருமலைநம்பிகள் உபயதிருவடிகள் வாழியே.

பெரியதிருமலைநம்பி திருவடிகளே சரணம்.

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.