மகாபாரதம் | 1 ஆதிபருவம் | பகுதி - 28
அஸ்தினாபுரத்து மக்கள் அரச குடும்பத்தை பற்றிய விஷயங்களை வெளிப்படையாக தங்களுக்குள் பேசிக் கொண்டனர். திருதராஷ்டிரன் அரசராக இருக்கலாகாது. அவருக்கு தகுதி போதவில்லை. ஆட்சிக்கு முற்றிலும் பொருத்தமானவர் பீஷ்மர். ஆனால் தாம் ராஜ்யத்தைப் துறந்து விட்டதாக அவர் நெடுநாளைக்கு முன்பே விரதம் பூண்டு கொண்டார். எக்காரணத்தை முன்னிட்டும் அந்த விரதத்திலிருந்து விலகமாட்டார். துரியோதனிடம் சில குறைபாடுகளை மக்கள் உணர்ந்தனர். ஆகையால் யுதிஷ்டிரன் ஒருவனே நாட்டை ஆள தகுதி வாய்ந்த மன்னன் ஆவான் என்று மக்களிடம் பேச்சாக இருந்தது.

துரியோதனன் நாட்டில் வேவுக்காரர்கள் பலரை நியமித்து வைத்திருந்தான். பொதுமக்களுடைய அபிப்பிராயம் முற்றிலும் தனக்கும் தனது தந்தைக்கும் அனுகூலமாக இல்லை என்பதை அறிந்து அவன் மிகவும் மனம் நொந்து இருந்தான். தன் தந்தையிடம் தனியாக சந்தித்து தன் உள்ளத்தில் கொதித்துக் கொண்டிருந்த உணர்ச்சிகளை எல்லாம் அவன் வாரிக் கொட்டி தள்ளினான். தாங்கள் ஏன் யுதிஷ்டிரனை இளவரசனாக்கினீர்கள். நாட்கள் ஏற ஏற அவன் ஆட்சி தரத்திலும் கீர்த்தியிலும் அதிவேகமாக முன்னேற்றம் அடைந்து வருகின்றான். தங்களுக்கு கண் தெரியாத காரணத்தினாலும் அவன் மக்களுக்கு செய்யும் நன்மை காரணமாகவும் மக்கள் அவனை அரசனாக்க விரும்புகின்றார்கள். அப்படி என்றால் ராஜகுமாரன் ஆகிய நான் ஒரு அடிமையாக ஒதுக்கப்படுகின்றேன். இத்தகைய பரிதாபகரமான நிலையில் வாழ்ந்து இருப்பதைக் காட்டிலும் நான் மடிந்து போவதை மேல். நிலைமை வரம்பு கடந்து போவதற்கு முன்பே ஏதாவது செயலில் ஈடுபட்ட ஆக வேண்டும். தயவு செய்து தீர்மானம் பண்ணுங்கள் என்று துரியோதனன் தன் தந்தையிடம் கூறினார்.

அதற்கு திருதராஷ்டிரன் எனக்கு கண் பார்வை இல்லை என்றாலும் இந்த நெருக்கடியான நிலைமையை என்னால் புரிந்து கொள்ள இயலுகிறது. மக்கள் எல்லோரும் என்னுடைய சகோதரன் பாண்டுவின் மகன்கள் ஆட்சி செய்வதை விரும்புகின்றார்கள். அவசரப்பட்டு நாம் ஏதாவது செயலில் இறங்கினால் அது நமக்கே கேடாக வந்து அமையும் என்றார். அதற்கு துரியோதனன் தந்தையே தயவு செய்து என் சொல்லுக்கு சிறிது செவி சாயுங்கள். நமது பாட்டனாராகிய பீஷ்மர் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையில் நடுநிலையுடன் இருக்கின்றார். என்னையும் என் சகோதரர்களையும் கிட்டத்தட்ட செத்துப் போகும் நிலையில் வைத்து பீமன் எங்களை நசுக்கிய பொழுதும் பாட்டனார் அது தலையிடவில்லை. பிறகு பீமனுக்கு நான் விஷம் வைத்ததை அவர் அறிந்தும் அதில் அவர் தலையிடவில்லை. ஆகவே அவர் நம்மை ஒருபோதும் எதிர்க்க மாட்டார். துரோணரின் மகன் அஸ்வத்தாமன் என்மீது வைத்திருக்கும் அன்பு மிகவும் உறுதியானது. நலம் கேடு அனைத்திலும் அவன் என்னுடன் இருப்பான். அவனைப் பின்பற்றி அவருடைய தந்தை துரோணரும் தாய்மாமா கிருபரும் நம் பக்கமே சார்ந்து இருப்பார்கள். சித்தப்பா விதுரர் நிச்சயமாக பாண்டவர்களுக்கு உரியவர் ஆவார். ஆயினும் அவரிடம் உறுதிப்பாடு எதுவும் இல்லை. தர்மத்தைப் பற்றி பேசுவதில் அவர் நிபுணர். தர்மத்தை மட்டுமே அவர் பேசிக்கொண்டு இருப்பார். நல்லதோ கெட்டதோ எதையும் சாதிக்க அவரால் இயலாது. ஆகையால் அவரை நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை நமக்கு உறுதி வாய்ந்த தக்க பின் பலத்தை ஆயத்தப்படுத்திக் கொண்டு அவர்களை தோற்கடிக்க நாம் திட்டம் போட வேண்டும். இதில் காலதாமதம் உதவாது. காலதாமதம் செய்தோம் என்றால் நாம் அழிந்து போவோம் என்றான்.