மகாபாரதம் | 1 ஆதிபருவம் | பகுதி - 31
பாண்டவர்கள் தங்கள் ஊருக்கு விஜயம் செய்ததை குறித்து வாரணவதத்தில் வசிக்கும் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். பாண்டவர்களுக்கு ஆர்வத்தோடு கூடிய வரவேற்பு செய்தார்கள். முக்கியமான பிரமுகர்கள் பலருடைய இல்லங்களில் விருந்துக்கு அவர்கள் அழைக்கப்பட்டனர். அவைகளை எல்லாம் நிறைவேற்றி வைத்து விட்டு ஏற்கனவே அவ்வூரில் இருந்த ராஜகுடும்ப விடுதியில் அவர்கள் தங்கியிருந்தார்கள். அதற்கிடையில் ஏற்கனவே கட்டப்பட்ட அரக்கு மாளிகையைச் சுற்றிலும் அகழி ஒன்று வெட்டப்பட்டது. உள்ளே வசிப்பவர்களின் பாதுகாப்புக்காக என்று வெளியில் காட்டிக் கொள்ள நல்ல திட்டம் அது. ஆனால் உள்ளே அகப்பட்டுக் கொண்டவர்கள் உயிரோடு வெளியே தப்பித்து வர முடியாத படி அது கட்டப்பட்டிருந்தது. அதில் வந்து வசிக்கும்படி ராஜகுமாரர்களை மந்திரி புரோச்சனன் வரவேற்றான். மாளிகை வசதி மிக வாய்க்கப்பெற்று இருந்தாலும் புதிய கட்டிடத்திற்கு வந்த உடனே யுதிஷ்டிரன் மற்றும் பீமன் இருவருக்கும் இந்த மாளிகையில் ஆபத்து மிக அமைந்திருக்கிறது என்று சந்தேகப்பட்டார்கள். அரக்கு மெழுகு குங்கிலியம் போன்ற விரைவில் தீப்பற்றி சுடர்விட்டு எரியும் பொருளைக் கொண்டு அம்மாளிகை கட்டப்பட்டு இருந்ததை அவர்கள் கவனித்தார்கள். அவ்வீட்டில் உள்ள வாசனையும் அதற்கு அறிகுறியாக இருந்தது. பாண்டவர்களாகிய தங்களுக்கென்று அமைக்கப்பட்ட இந்த பொறி என்று உணர்ந்தார்கள்.

பீமன் தனது சகோதரர்களிடம் துரியோதனன் எனக்கு விஷம் கலந்த உணவை கொடுத்து நீரில் மூழ்கவைத்து கொல்ல முயன்றான். தெய்வாதீனமாக நச்சுப்பாம்புகள் கடித்ததில் விஷம் முறிந்து மரணத்திலிருந்து நான் தப்பித்துக் கொண்டேன். இப்பொழுது நாம் அனைவரையும் நெருப்புக்கு இறையாகும் திட்டமொன்றை துரியோதனன் வகுத்து வைத்திருக்கின்றான். சித்தப்பா விதுரருடைய எச்சரிக்கை இங்கே உண்மை ஆகின்றது. இப்பொழுதே நாம் பழைய அரச விடுதிக்கு திரும்பி போய்விடுவோம். பிறகு அஸ்தினாபுரத்திக்கு சென்று துரியோதனனிடமிருந்து ராஜ்ஜியத்தை பறிமுதல் செய்து பெற்றுக் கொள்வோம் என்றான்.

அதற்கு யுதிஷ்டிரன் துரியோதனனுடைய சூழ்ச்சி நமக்கு தெளிவாக விளங்குகின்றது. ஆனால் இப்பொழுதே சூழ்ச்சி செய்து அவர்கள் நம்மை கொன்று விட்டால் கொலை பாதகன் என்னும் பழி துரியோதனனுக்கு வந்து சேரும். ஆகையால் சிறிது நாட்கள் கழித்து அவன் தன் திட்டத்தை செயல்படுத்துவான். அதற்குள்ளாக அவனுடைய சூழ்ச்சியை தோற்க்கடிக்கும் திட்டம் ஒன்றை நாம் வகுப்போம். கேடு ஏதும் இன்றி நாம் தப்பித்துக்கொள்வோம். இந்த மாளிகையினுள் நாம் கொளுத்தி கொல்லப்பட்டோம் என்னும் நம்பிக்கையை துரியோதனனுக்கு உண்டாக்க வேண்டும். நாம் தப்பித்துக் கொண்டு வெளியே தூரத்தில் உள்ள பிரதேசம் ஒன்றில் மாறு வேஷம் பூண்டு நாம் வாழ்ந்திருப்போம். நெருக்கடியில் நமக்கு உதவிபுரியும் நண்பர்களை நாம் தேடிக் கொள்வோம். அதன் பிறகு நாம் நம்முடைய பங்காளிகளான கௌரவர்களுக்கு நாம் உயிருடன் வாழ்ந்து கொண்டு இருப்பதை வெளிப்படுத்துவோம் என்றான்.

இத்திட்டத்தை பீமன் ஆமோதித்தான். ஆபத்தான மாளிகையில் எச்சரிக்கையாக வாழ்ந்திருக்க சகோதரர்கள் தீர்மானித்தார்கள். அந்த ராஜகுமாரர்களுக்கு ஏற்ற வாழ்க்கை வசதிகள் அனைத்தையும் செய்து வைப்பது போன்று பாசாங்கு பண்ணிய அமைச்சர் புரோசனன் உண்மையில் அவர்கள் தப்பித்து ஓடாத படி காவல் காத்திருந்தான். சகோதரர்களும் அவனிடத்தில் பூரண நம்பிக்கை வைத்திருப்பது போன்று பாசாங்குடன் நடந்துகொண்டார்கள்.