மகாபாரதம் | 1 ஆதிபருவம் | பகுதி - 33
அரக்கு மாளிகையில் எரிந்த கடும் தீயானது அதிவிரைவில் கட்டடம் முழுவதும் பரவியது. நெருப்பின் ஓசை பயங்கரமாய் இருந்தது. அது வாரணாவத மக்களை தூக்கத்திலிருந்து எழுப்பியது. நெருப்பின் சத்தத்தில் பயந்து எழுந்த மக்கள் விபத்து பகுதிக்கு ஓடி வந்தனர். அவர்களால் கொளுந்துவிட்டு எரிந்த நெருப்பை அணைக்க இயலவில்லை. ஏனெனில் அருகில் செல்ல அகழி அவர்களுக்கு இடம் தரவில்லை. குருவம்சத்து பாண்டவ ராஜகுமாரர்கள் இப்படி அழிந்து போனதற்கு காரணம் திருதராஷ்டிர அரசனும் அவனுடைய பொல்லாத மகன் துரியோதனனுமே என்று மக்கள் பேசிக்கொண்டனர். எரிந்த தீ சிறிது குறைந்த பிறகு மக்கள் நீர் ஊற்றி அனைத்தனர். அங்கு வெறும் சாம்பல் மட்டுமே எஞ்சியிருந்தது. பிறகு அங்கு பாண்டவர்களை சென்று தேடினர். ஏழு பேருடைய எலும்புக்கூடுகள் மட்டுமே இருந்தது. ரகசியமாய் பாண்டவர்கள் வெளியேறிய சுரங்கத்தின் வாயில் முழுவதும் சாம்பலும் மண்ணும் மூடி அது மறைந்தது. ஆகவே பாண்டவ சகோதரர்கள் அனைவரும் அவர்களுடைய தாயும் எரிந்து போயினர் என்று மக்கள் முடிவுக்கு வந்தார்கள்.

அரக்கு மாளிகை எரிந்த இச்செய்தி விரைவில் அஸ்தினாபுரத்தில் வசித்து வந்த கௌரவர்களிடம் சொல்லப்பட்டது. திருதராஷ்டிரன் துரியோதனன் இருவர் உள்ளத்திலும் பரம திருப்தி அடைந்தனர். பங்காளிகள் அனைவரும் மறைந்து பட்டுப் போனார்கள். இனி ஆட்சிக்கு போட்டி போடுவதற்கு யாரும் இல்லை என்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்பட்டது. ஆனால் வெளியே துயரத்திற்கு ஆளானவர்கள் போன்று அவர்கள் நடித்தனர். பொதுமக்களிடம் தாங்கள் நல்லவர்களாக தென்பட வேண்டும் என்பது அவர்களுடைய எண்ணமாக இருந்தது. விதுரருக்கு அனைத்தும் தெரிந்ததாலும் பீஷ்மர் இவ்வுலக வாழ்க்கையில் பற்று இல்லாதவராக இருந்ததால் இருவரும் இச்செய்தியை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இவர்கள் இருவர் நீங்கலாக அனைத்து ராஜ குடும்பத்தார்கள் அனைவரும் துக்கத்தில் மூழ்கி கிடந்ததாக காட்டிக்கொண்டனர். அதற்கேற்றபடி ஆடம்பரமாக ஈமக்கிரியைகள் பாண்டவ சகோதரர்களுக்கும் அவருடைய அன்னை குந்தி தேவிக்கும் நிறைவேற்றப்பட்டன. மடிந்துபோன ஒவ்வொருவருடைய சிறப்பையும் தனித்தனியே சிலாகித்துப் பேசி வந்தனர். குரு வம்சத்துக்கு நிகழ்ந்த நஷ்டம் அளப்பரியது என்று துரியோதனன் பாசாங்கு பண்ணினான்.

வாரணம் பாதத்தில் அரக்கு மாளிகையில் இருந்து தப்பித்துக் கொண்ட பாண்டவர்கள் நெடுந்தூரத்துக்கு அப்பால் உள்ள கங்கை நதியின் தென்கரையில் இருந்த ஒரு காட்டில் கரையை அடைந்தனர். கார்இருள் அப்போது அகலவில்லை. காட்டின் உட்புறத்தில் நெடுந்தூரத்துக்கு அவர்கள் நடந்தனர்.. விடியற்காலையில் அவர்கள் யார் கண்ணுக்கும் தென்படாமல் காட்டின் நடுப்பகுதிக்கு வந்துவிட்டனர். குந்திதேவி மிகவும் களைத்துப் போய் இருந்தாள். தன்னால் ஓர் அடிகூட எடுத்து வைக்க இயலாது என்றும் தாகத்தால் நாக்கு உலர்ந்து போயிற்று தனக்கு தண்ணீர் வேண்டும் என்றும் கேட்டாள். தாயையும் தன் உடன் பிறந்தவர்களையும் அருகில் இருந்த ஒரு ஆலமரத்தின் அடியில் ஓய்வு எடுக்கும்படி அமரச் செய்து விட்டு அருகில் எங்காவது தண்ணீர் கிடைக்குமா என்று தேடி பீமன் புறப்பட்டு போனான்.