மகாபாரதம் | 1 ஆதிபருவம் | பகுதி - 42
குந்தி தேவி தன் வாழ்க்கையில் உண்மைக்கு மாறானது எதையும் சொன்னது இல்லை. அவர் வார்த்தையும் காப்பாற்றப்படவேண்டும். திரோபதியின் கர்மபலன் தீர வேண்டும். எனவே நீங்கள் ஐவரும் திரோபதியை திருமணம் செய்து கொள்ளுங்கள். வருடத்திற்கு ஒருவருடன் மனைவியாய் திரொபதி இருப்பாள். ஒரு வருடம் முடிந்ததும் மீண்டும் கன்னியாவாள். அவள் சிவனிடம் பெற்ற வரத்தின் மகிமையே அதற்கு காரணம். கணவன்மார்கள் ஐவருக்கும் திரோபதி பொதுவாய் இருந்தாலும் அவளுடைய கற்பு ஒரு நாளும் பட்டுப்போகாது. அவளுடைய கற்பு அலாதியாக அவளுக்கே உரியதாகும். எனவே இத்திருமணத்திற்கு அனுமதி கொடுக்கலாம். இவர்களின் கர்மபலன் தீருவதற்கு நாம் அனைவரும் துணையிருப்போம் என்று வியாசர் கூறினார். அனைவரும் சம்மதம் தெரிவித்தனர். வியாசர் விடைபெற்றுச் சென்றார்.

அந்தி வேலை வந்தது. அன்று பகல் முழுவதும் நிகழ்ந்த செயல்கள் அனைத்தும் முடிவுக்கு வந்து அமைதி நிலவியது. அப்போது அங்கு கிருஷ்ணரும் அவருடைய தமையன் பலராமனும் அவர்களுடைய அத்தை குந்திதேவியை தரிசித்து தங்களுடைய வணக்கத்தை செலுத்துவதற்கு குடிசைக்கு வந்தனர். குந்திதேவி தன் மைந்தர்களாகிய பாண்டவர்களை அவ்விருவருக்கும் அறிமுகப்படுத்தினார். அப்போது தான் அவர்கள் பரஸ்பரம் முதல் தடவை ஒருவரை ஒருவர் பார்க்கின்றார்கள். வயதை அனுசரித்து முறையாக அவர்கள் ஒருவரை ஒருவர் வணங்கி கொண்டனர். அப்போது தொடங்கிய உறவு எப்பொழுதும் நிலைத்து இருப்பதற்கு ஏற்றவாறு அமைந்தது. மாறுவேடத்தில் வாழ்ந்து வரும் பாண்டவர்களுக்கு அதிவிரைவில் நல்ல காலம் வரப்போகிறது என்றும் அது வரையில் சிறிது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு தெய்வீக சகோதரர்களான கிருஷ்ணரும் பலராமரும் தங்களுடைய மாளிகைக்கு திரும்பிச் சென்றனர்.

பிராமணர்களாக வேடம் தரித்து திரௌபதியை அழைத்து வந்த பாண்டவர்களை பின்தொடர்ந்து வந்த திருஷ்டத்யும்னன் அங்கு நடந்தது அனைத்தையும் முற்றிலும் கவனித்தான். அவர்கள் பாண்டவர்கள் என்றும் அவர்கள் தாய் குந்திதேவி என்பதையும் அறிந்து மிக்க மகிழ்ச்சியுடன் அரண்மனைக்கு விரைந்து ஓடிச் சென்று தன் தந்தையிடம் தான் அறிந்து கொண்ட விஷயங்கள் அனைத்தையும் தெரிவித்தான். வேந்தனாகிய துருபத மன்னன் சுயவரத்தில் நிகழ்ந்த சம்பவங்களை குறித்து கவலையுடன் இருந்தான். அவனுக்கு திருஷ்டத்யும்னன் கொண்டு வந்த செய்தி மிகவும் அமைதியை அளித்தது. மகன் கூறிய அனைத்தும் உண்மையாக இருக்கவேண்டும் என்று அவன் இறைவனிடம் பிரார்த்தனை செய்தான். திருஷ்டத்யும்னன் கூறியது அனைத்தும் உண்மையாக இருந்தால் தன் வாழ்க்கையில் கொண்டிருந்த திட்டங்கள் யாவும் நிறைவேறும் என்று அம்மன்னன் மகிழ்ச்சி அடைந்தான். தனக்கு வாய்த்த புதிய உறவினர்களுக்கு துருபத மன்னன் விலை உயர்ந்த ஆடைகளை அனுப்பி வைத்தான். அவர்கள் அனைவரும் விருந்துக்கு அரண்மனைக்கு வர வேண்டும் என்று அவர்களுக்கு அழைப்பு விடுத்தான்.